மேல்நிலை கல்வியில் தமிழை விருப்ப மொழியாக மாற்றும் திட்டத்தின் பின்னணி என்ன? வட இந்தியர்களுக்கு வசதி?
Recommended Video
சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், தமிழை ஒரு விருப்ப மொழியாக மாற்ற, தமிழக பள்ளிக் கல்வித்துறை பரிந்துரை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இதற்கு மறுப்பு தெரிவித்தாலும், நெருப்பின்றி புகையவில்லை என்று கிசுகிசுக்கிறார்கள் கல்வியாளர்கள்.
இதுபோன்ற ஒரு தகவல் வெளியானதுமே, தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன. கவிஞர் வைரமுத்து வெளியிட்ட அறிக்கையில், அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கி போராடுவோம் என அரசுக்கு எச்சரிக்கைவிடுத்தார்.
தமிழுக்கு தீங்கு.. அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கி போராடுவோம்.. அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை
யார் எடுக்கும் முடிவு
இதன்பிறகு செங்கோட்டையன் அளித்த பேட்டியில்தான், இந்த தகவலை மறுத்துள்ளார். ஆனால், இந்த செய்தி வெளியானதன் பின்னணியில் பெரும் ஆபத்து ஒளிந்துள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் யாருமே கேட்காமல், தமிழை விருப்ப மொழியாக மாற்ற பள்ளிக் கல்வித்துறை இப்படி ஒரு முடிவை எப்படி எடுத்தது என்று கேள்வி எழுப்புகிறார், தமிழ் மையம் அமைப்பின் ஜெகத்கஸ்பர். மக்களாட்சி மீது நம்பிக்கையில்லாத டெல்லியிலிருந்து எடுக்கப்படும் முடிவுகளைத்தான், பலவீனமான அரசை கொண்டுள்ள தமிழகத்தில், செயல்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.
2ம் தாள் நீக்கம்
விருப்ப பாடமாக எடுத்தாலும் கூட தமிழ் முதல் தாள் மட்டுமே இருக்கும். 2வது தாளை நீக்கிவிடலாம் என்றும் அந்த பரிந்துரை கூறுவதாக செய்தி வெளியானது. ஆனால், 2வது தாள்தான், ஒரு மாணவரின் கற்பனை, இலக்கிய அறிவை தூண்டிவிடக்கூடியது. அதை நீக்கிவிட்டு வெறுமனே மதிப்பெண்ணுக்காக ஒரு பாடத்தை பார்ப்பதும் ஆபத்தானது. தமிழை வெறுமனே தொடர்பு மொழியாக கல்வித்துறை பார்க்கிறதே என்ற கவலை தமிழ் ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பிற மாநில மக்கள்
இதில் மற்றொரு சதி இருப்பதாக சில தமிழ் ஆர்வலர்கள் நினைக்கிறார்கள். வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு குடிபெயரும் மக்கள், அவர்கள் பிள்ளைகளுக்கு வெறுமனே ஆங்கிலத்தை மட்டும் தேர்ந்தெடுத்து படித்து சென்றுவிட முடியும். தமிழே படிக்காமல் பிளஸ் 1 முதல் ஒரு மாணவர் சமூகம் கல்வி கற்க முடியும் என்பது, பிற மாநிலத்தவர்களுக்கு வசதியான விஷயமாகும்.
தமிழக நிறம்
கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல், கரூர், திண்டுக்கல் இப்படி, எந்த மாவட்டத்தில் பார்த்தாலும் இப்போது கணிசமாக வட மாநிலத்தவர்கள் வசிக்கிறார்கள். குறைந்த ஊதியத்திற்கும் வேலையாட்கள் கிடைப்பதால், அவர்கள் இங்கு வந்து குவிகிறார்கள். கிராமங்களின் வண்ணமே கூட மாறிவருகிறது. இவர்களுக்குதான் இந்த பாடத் திட்ட மாற்றம் உதவும்.
தாய்மொழி கஷ்டமா?
ஏனெனில், கஷ்டமாக இருக்கிறது என்பதற்காக தமிழ் அல்லது ஆங்கிலத்தை ஆப்ஷனாக மாற்றுவதன் நோக்கம் சந்தேகிக்க வைக்கிறது. சுமை என்றால், ஏன் இயற்பியலையோ, கணிதத்தையோ நீக்கவில்லை? உண்மையை சொன்னால், மொழிப்பாடத்தைவிட கணிதத்தில் ஃபெயில் ஆகிறவர்கள்தானே அதிகம்? எனவே, சுமை என்ற வாதம் அடிபட்டு போகிறது. விருப்ப தேர்வாக மொழியை அதுவும் தாய்மொழியாம் தமிழை மாற்றுவதன் பின்னணி பெரும் சந்தேகத்திற்கு உட்பட்டதாக உள்ளது. அமைச்சர் இந்த தகவலை இப்போது மறுத்திருக்கலாம். ஆனால் நீட் தேர்வுக்கும் இப்படித்தான் சொன்னார்கள். வராது வராது என்றார்கள், ஆனால் வந்தே விட்டது. மக்களின் நாடித் துடிப்பை பார்க்க முதலில் இப்படி ஒரு செய்தியை கசியவிட்டு, பிறகு எதிர்ப்பு குறைவாக இருந்தால், அதே செய்தியை நிஜமாக்குவது அரசுகளின் வாடிக்கை என்பதே வரலாறு.