துணை பொதுச் செயலாளர் பதவி... ஏற கட்ட நினைத்த திமுக சீனியர்கள்.. எகிறி அடித்த ஆ. ராசா
சென்னை: திமுகவில் இருந்து வி.பி. துரைசாமி வெளியேறி பாஜகவில் ஐக்கியமானது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் வி.பி. துரைசாமி பதவி வகித்த துணை பொதுச்செயலாளர் பதவியை முன்வைத்து அடேங்கப்பா கூத்துகள் அரங்கேறி வருகின்றன என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் வி.பி. துரைசாமி. திமுக ஆட்சிக் காலத்தில் 2 முறை துணை சபாநாயகராகவும் இருந்தார்.
இருப்பினும் தொண்டர்கள் இடையே பெரிய அளவு செல்வாக்கு பெறாத காரணத்தால் வலிமையான தலைவராக உருவெடுக்கவில்லை. அவர் தமதுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அது கிடைக்காமல் போன விரக்தியில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். இவரது முடிவால் திமுகவில் எந்த ஒரு பெரிய சலசலப்பும் ஏற்படவில்லை.
மணல் அள்ளுவதில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி... டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
திமுக து.பொ.செ. பதவி
ஆனால் வி.பி. துரைசாமி பதவி வகித்த துணை பொதுச்செயலாளர் பதவிதான் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை 2-ம் கட்ட தலைவர்களுக்கு அதிகபட்ச உயர் பதவி துணைப் பொதுச்செயலாளர் பதவி. இந்த பதவி வரைக்கும் யார் வேண்டுமானாலும் வந்துவிட முடியும். இதற்கு அடுத்ததாக பொருளாளர், பொதுச்செயலாளர், தலைவர் பதவி மட்டும்தான்.. அதை துணைப் பொதுச்செயலாளர்களாக இருப்பவர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாது.. ஆகையால் இது ரிட்டையர்மண்ட் போஸ்ட் மாதிரி.
ஆ.ராசாவை நீட்டிய கைகள்
வி.பி. துரைசாமி நீக்கப்பட்ட நிலையில் துணை பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்கிற விவாதம் திமுகவில் எழுந்தது. திமுகவைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு- ஆதிதிராவிடர்களுக்கு என வரையறுக்கப்பட்ட பதவிகளில் அவர்களுக்குத்தான் இடம். இதனால் துரைசாமி வகித்த பதவியில் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய கொள்கை பரப்பு செயலாளருமான ஆ. ராசாவை நியமித்துவிடலாம் என திமுகவின் சீனியர்கள்- வலியுறுத்தி இருக்கின்றனர். ஆ. ராசா மீது இருக்கும் பாசத்தால், மரியாதையால் இப்படி ஒரு முடிவை இந்த கோஷ்டி எடுக்கவும் இல்லையாம்.
ஆ.ராசா மீதான எதிர்பார்ப்பு
திமுகவில் ஆ. ராசாவுக்கு தனிப்பட்ட செல்வாக்க்கு இருக்கிறது. கட்சியை தாண்டிய செல்வாக்கு பெற்றவராகவும் இருக்கிறார். பெரியாரிய- அம்பேத்கரிய கொள்கைவாதியாகவும் திகழ்கிறவர். தற்போதைய சூழ்நிலையில் ஆ.ராசா போன்றவர்கள் தான் திராவிட இயக்கங்களுக்கு தலைமை தாங்க வேண்டியவர்கள் என்கிற அளவுக்கு எதிர்பார்ப்புகளுக்குரியவர். ஆகையால் ஆ. ராசாவின் எதிர்காலத்தை துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்து முடக்கி வைத்துவிடலாம்.. அப்படி செய்துவிட்டால் ஆ.ராசா குறித்து அவ்வப்போது கிளம்பும் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்பதுதான் இந்த கோஷ்டிகளின் முடிவின் பின்னணி.
ஆ. ராசா தந்த பதிலடி
இதை நன்றாக உணர்ந்து கொண்டவராகவே ஆ. ராசா திருப்பி பதிலடி கொடுத்திருக்கிறார். துணைப் பொதுச்செயலாளர் பதவி என்பது தமது அரசியல் எதிர்காலத்துக்கு சமாதி கட்டும் சகுனிகளின் சதி வேலைதான் என்பதை புரிந்து கொண்டு, என்னைவிட சீனியர்கள் பலரும் கட்சியில் இருக்கிறார்கள். எனக்கு இன்னமும் அந்த உயரத்துக்கு போகக் கூடிய வயதும் வரவில்லை. பல சீனியர்கள் இருக்கிறார்கள்.. அவர்களுக்குத்தான் அது கொடுக்கப்பட வேண்டும் என்று நாசூக்காக மறுத்துவிட்டார். ஆ.ராசா பதூசா கொடுத்த பதிலடியால் தலை சுற்றி கிறுகிறுத்துக் கிடக்கிறார்களாம் குழிபறித்து கும்மியடிக்க காத்திருந்த வடமாவட்ட சீனியர்கள்.