இதுதான் கமலுக்கும், ரஜினிக்கும் உள்ள ஒரே வித்தியாசம்!
ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
Recommended Video
சென்னை: இதுதான் கமலுக்கும் - ரஜினிக்கும் உள்ள வித்தியாசம்!
புயல் அடிச்சு இத்தனை நாள் ஆகுது... இதுவரைக்கும் ஏதாவது ஒரு கிராமத்துக்கு ரஜினி போய் வந்தாரா? மக்கள் அங்க என்ன கதியா இருக்காங்கன்னு கண்கூடாக பார்த்தாரா? என்ற ஆதங்கம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்னு சொன்னா போதுமா? அவ்வளவு லேசில் போய்விட்டதா தமிழக சட்டமன்ற தொகுதிகள். எந்த தைரியத்தில் ரஜினி இந்த வார்த்தையை சொன்னார் என்ற கோபமும் மக்கள் மனதில் நிலவுகிறது.
30 வருஷம் ஆனாலும் பழைய வாழ்க்கை திரும்ப கிடைப்பது டெல்டா மக்களுக்கு சந்தேகம்தான். புயல்தான் கடந்து போனது... ஆனால் மக்கள் இன்னும்கூட நிவாரண முகாம்களில்தான் இருக்கிறார்கள். இன்னும் அடுத்தவங்க வந்து ஏதாவது சாப்பிட தரமாட்டாங்களான்னு கையேந்திட்டு தான் நிக்கறாங்க.
விவசாயிகள்
கமல் 3 முறை நேரில் சென்று அவர்களை சந்தித்து விட்டார். ஒவ்வொரு முறையும் மூட்டை மூட்டையாக பொருட்களை தன் மய்ய உறுப்பினர்களுடன் அள்ளி கொண்டு போனார். கிராம மக்களின் குறைகளை நேருக்கு நேராக நின்று கேட்டார். ரயில் நிலையத்தில் விவசாயிகளை ஓடிப்போய் சந்தித்தபோதும் கஜா பற்றிதான் பேசினார்.
காரசார அறிக்கைகள்
ஒரு அமைச்சர் விடாமல் எல்லோருமே கமல் மீது கோபமாக இருக்கிறார்கள்... ஏன்? அவர்கள் வீட்டு சொத்தை கமல் பிடுங்க பார்த்தார் அல்லது பிடுங்கி விட்டார் என்பதற்காகவா? இல்லை... அடிப்படையே ஆட்டம் காணும் அளவுக்கு கேள்விகளை கேட்டு அறிக்கைகள் விடுவதுதான்.. மக்களை போய் போய் சந்திப்பதால்தான்
கமலின் சுற்றுப்பயணம்
கமல் யாருக்காகவும் பயப்படவில்லை.. இவங்க வேணும், அவங்க வேணும், என்று சந்தர்ப்பவாத அரசியல் அங்கு தெரியவில்லை. வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு என்று அறிக்கைகள் சுடசுட வந்து விழுகிறது. கமலின் தாறுமாறான அறிக்கைக்கு தடுமாறியே அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள். எச்.ராஜாவுக்கு இன்னும் கமலின் சுற்றுப்பயணமே தாங்க முடியவில்லை.
இது பொருந்துமா?
ஆனால் ரஜினி என்ன செய்கிறார்? மக்களையும் சென்று கவனிக்கவில்லை? மக்களுக்கு குறைகளை முழுமையாக நிவர்த்தி செய்ய முடியாத அரசையும் கண்டிக்கவில்லை. யாரையுமே பகைத்து கொள்ளக்கூடாது என்ற மனோபாவம் நாளை அரசியல் செய்ய போகிறேன் என்று நினைப்பவருக்கு பொருந்தக்கூடிய ஒன்றா?
அம்பரீஷ் மரணம்
இதே அம்பரீஷ் இறந்து போனதுக்கு கர்நாடகம் போக தெரிந்த ரஜினிக்கு, பக்கத்துல இருக்கிற மாவட்டங்களுக்கும் போக தெரியாதா? 2.0 பிரமோஷனுக்கு ஆந்திராவுக்கு போக தெரிந்த ரஜினிக்கு டெல்டா மாவட்ட மக்களின் பசி, பட்டினி காதில் விழவில்லையா?
விஷால் அறிவிப்பு
ரசிகர் மன்ற தரப்பில் டி-ஷர்ட்டில் முகத்தை பொறித்து வைத்து கொண்டு சாப்பாடு பொட்டலங்கள் தந்தால் எல்லாம் சரியாகி விடுமா? ரஜினியைவிட வயதிலும், அனுபவத்திலும் இளையவரான விஷால் ஒரு கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவிக்கிறார். ஏன் ரஜினிக்கு அப்படி ஒரு சிந்தனை வரவில்லை. அவர் மனது வைத்தால் எத்தனை தென்னை விவசாயிகளின் வாழ்வை வளமாக்கலாம்!
ஈடு கொடுக்க முடியாது
"எனக்கும், கமலுக்கும் போட்டியே இல்லை. நான் போட்டியாக கூட நினைக்கவில்லை. அவர் பெரியவர்" என்று கூறியிருந்தார் ரஜினி. உண்மைதான், கமலின் வேகத்துக்கு நிச்சயம் ரஜினியால் ஈடு கொடுக்க முடியாது என்றே தோன்றுகிறது. காரணம், மண்ணின் மணம் உணர்ந்தவர் கமல், மண்ணைத் தெரிந்தவர் கமல், இந்த மண்ணின் மைந்தரும் கூட. நிச்சயம், ரஜினியால் ஈடு கொடுக்க முடியாதுதான்.
ஆப்பு தயாராகிறது
"அரசியல் என்பது மிகப்பெரிய விளையாட்டு, ஆபத்தானதும் கூட. அதனால் மிக கவனமாகவும், நிதானமாகவும் அரசியலை விளையாடி வருகிறேன்." என்று ஒரு பேட்டி தந்தார்.. அட, மக்களும் கூட செமத்தியான விளையாட்டுக்கு காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ரஜினி சார்.. தேர்தல் வரும்போது.. அந்த விளையாட்டு ரொம்ப அபாயகரமானதாக இருக்கும்.. யாரெல்லாம் மக்களைப் பார்க்க வரவில்லையோ அவர்களுக்கு அன்று அடிப்பார்கள் பாருங்க ஆப்பு!!