"கெத்து" திமுக.. "செக்" வைக்கும் பாஜக.. "தடுமாறும்" அதிமுக..என்ன நடக்கிறது..கலக்கத்தில் தொண்டர்கள்!
திமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம் செய்து வருகிறது
சென்னை: திமுக அரசுக்கு எதிராக அதிமுக தரப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.. இதற்கு என்ன காரணம்? பின்னணி என்ன? என்ற பலவித கேள்விகள் எழுகின்றன.
ஆளும் தரப்பை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது வழக்கமானதுதான்.. ஆனாலும், "சிறப்புடன் திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது" என்று சில அதிமுக மாஜிக்களே வாய்திறந்து பாராட்டிய நிலையில், இன்றைய ஆர்ப்பாட்டம் நடந்து வருவது ஆச்சரியமாக இருக்கிறது.
அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்
மேலும் வழக்கமாக ஒரு ஆட்சியை விமர்சிக்க குறைந்தது 3 -4 மாதமாவது எடுத்துக் கொள்வது எதிர்க்கட்சிகளின் வழக்கம். அந்த வகையில் பார்த்தாலும் அதிமுக போராட்டம் மிகக் குறுகிய காலத்தில் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
தேர்தல் அறிக்கை
தேர்தல் அறிக்கையில் உள்ளதை திமுக நிறைவேற்றவில்லை என்ற ஒரு பிரச்சனையை கிளப்பி உள்ளது அதிமுக.. ஆனால், அதிமுக அறிவித்த சில சலுகைகள் கடைசி வரை நிறைவேற்றப்படாத நிலையில், இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ள திமுகவை விமர்சிப்பது அடுத்த ஆச்சரியமாக இருக்கிறது..
கஜானா
ஆட்சிக்கு வந்த 2 மாசத்திலேயே எல்லா அறிவிப்பையும் நிறைவேற்றிவிட வேண்டும் என்று அதிமுக நினைப்பது அதைவிட ஆச்சரியமாக இருக்கிறது.. கஜானாவை சுத்தமாக காலி செய்துவைத்துவிட்டு போனபிறகு, இந்த கொரோனா நெருக்கடியில் எல்லா அறிவிப்பையும் திமுக நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக நினைப்பது அதைவிட இன்னும் பேராச்சரியமாக இருக்கிறது.
காரணம்
ஆக, அதிமுகவுக்கு உண்மையான பிரச்சனைதான் என்ன? ஏன் இப்படி ஒரு ஆர்ப்பாட்டம்? என்ற கேள்வி பரவலாக எழுகிறது.. விஷயம் இதுதான், மளமளவென சரிந்து கொண்டிருக்கும் கட்சியின் செல்வாக்கை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும், நிர்ப்பந்தத்திலும் அதிமுக உள்ளது.. இதற்கு முதல் காரணம் சசிகலாவின் வருகையும், அவரது ஆடியோக்களும் மிகுந்த கலக்கத்தை கட்சிக்குள் ஏற்படுத்தி உள்ளது.
நடவடிக்கை
அடுத்த காரணம், திமுக எடுத்த ஊழல் பட்டியலின் லிஸ்ட்களும், அதன் மீதான நடவடிக்கைகளும், அதையொட்டி வலுவிழந்து வரும் அதிமுகவின் செல்வாக்குகளும் மிகுந்த கவலையை உண்டுபண்ணி உள்ளது.. இதனால் இந்த 2 மாதத்தில் அதிமுகவின் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் ஆகி கொண்டிருப்பதையும் அதிமுக தலைமை நன்றாகவே உணர ஆரம்பித்துள்ளது.
தேமுதிக
இந்த சமயத்தில்தான் நிர்வாகிகள் சிலர் எடப்பாடியிடம், "திமுக ஆட்சியை பற்றி வெறும் அறிக்கைகளை மட்டும்தான் நம்ம தரப்பில் இருந்து விட்டுட்டு இருக்கோம்.. ஆனால், தேமுதிக கூட போராட்டம் அறிவிச்சுட்டாங்க... நாமளும் ஏதாவது ஆர்ப்பாட்டம் நடத்தியாகணும்" என்று சொன்னார்களாம்.. அதற்காகவே இந்த போராட்டம் என்கிறது ஒரு தரப்பு.
செந்தில்பாலாஜி
இன்னொரு பக்கம், விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்றதுமே சிவி சண்முகம் கொந்தளித்துள்ளார்.. "இதெல்லாம் செந்தில்பாலாஜி வேலைதான்.. எம்ஆர் விஜயபாஸ்கர் வரை "கை" வைத்தவர்கள், அடுத்தடுத்தவர்களையும் விட மாட்டார்கள்.. இதை கண்டித்து இப்போதே ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்" என்று எடப்பாடியிடம் வலியுறுத்தியதாகவும் ஒரு செய்தி கசிந்தது.. அதற்கான போராட்டமாக இருக்கலாம் என்கிறது இன்னொரு தரப்பு.
மோடி
ஓபிஎஸ், எடப்பாடியை, 30 நிமிஷம் பிரதமர் மோடி, தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார்.. அப்போது, "அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும்... அதற்கு என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டங்களை கூட்டணியாக இருந்து செய்யுங்கள்... ஏன்னா, நமக்கு எம்பி தேர்தல்தான் முக்கியம்" என்று அறிவுறுத்தி உள்ளார்.. இதன் காரணமாகவும், டெல்லி மேலிடத்தின் பேச்சை ஏற்கும்வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கலாம் என்கிறது மற்றொரு தரப்பு.
Recommended Video
பாமக, தேமுதிக
இதற்கு நடுவில், டாக்டர் ராமதாஸ் படுகுஷியில் இருக்கிறார்.. அவரது கனவு நனவாகிவிட்டது.. இதையடுத்து, திமுக தரப்புடன் நட்பு பாராட்டி வருகிறார்.. போனை போட்டு ஸ்டாலினுக்கு நன்றி சொல்கிறார்.. அதேபோல, தேமுதிக திமுக கூட்டணியில் இணையும் முயற்சியில் இறங்கி வருகிறது.. விஜயகாந்த் வீட்டிற்கே சென்றுவிட்டார் ஸ்டாலின்.. பாமக, அதிமுகவின் கூட்டணிக் கட்சி.. தேமுதிக முன்பு இருந்த கட்சி.. இப்போது திமுகவின் பக்கம் அவர்கள் திரும்புகிறார்கள். திமுகவுடன் இணக்கமாகி கொண்டிருக்கிறார்கள்.. இதனால், கூட்டணி பலத்தையும் அதிமுக இழந்து கொண்டிருக்கிறது...
பாஜக
அதுமட்டுமல்லாமல், எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளதாலும், தங்கள் இருப்பை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அதிமுகவை சூழ்ந்து உள்ளது.. அதனாலேயே இந்த போராட்டம் என்கிறது வேறொரு தரப்பு.. இதுஎல்லாவற்றிற்கும் மேலாக மிக முக்கிய காரணம் ஒன்று உள்ளது.. தமிழக பாஜக அடிக்கடி ஒரு விஷயத்தை சொல்லி வருகிறது.. அதாவது தமிழ்நாட்டில் இனிமேல் திமுகவுக்கு மாற்று பாஜகதான்.. திமுக Vs பாஜக என்ற நிலைதான் உருவாக போகிறது என்று அக்கட்சி தலைவர்கள் அடிக்கடி ஒரு குண்டை தூக்கி போட்டு வருகிறார்கள்..
திமுக
இதுதான் பாரம்பரியம் மிக்க கட்சியான அதிமுகவுக்கு உச்சக்கட்ட அவமானமாகும்.. காலம் காலமாக திமுக Vs அதிமுக என்றுதான் இந்த தமிழ்நாடு தேர்தல்களை சந்தித்து வந்து கொண்டிருக்கிறது.. ஆனால், இதை மாற்ற பாஜக முயல்வதால், தங்களுக்கான அங்கீகாரத்தை பெறும் முயற்சியாகவும் இந்த போராட்டம் பார்க்கப்படுகிறது.. அதை விட முக்கியமாக, தொய்ந்து போய்க் கிடக்கும் அதிமுக தொண்டர்களை தட்டி எழுப்பும் வகையிலும் இந்தப் போராட்டம் பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் அதிமுக அளவுக்கு அதிகமாகவே திணறி போயுள்ளது.. திமுகவோ கெத்துடன் நடை போட்டுக் கொண்டிருக்கிறது.. பார்ப்போம்..!