குடியுரிமை சட்டத் திருத்தம்.. அடுத்தடுத்து குறிவைத்து தாக்கப்படும் அதிமுக.. என்ன செய்ய போகிறது!
சென்னை: குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஓட்டுபோட்டதால் அடுத்தடுத்து அரசியல் கட்சி தலைவர்களால் குறிவைத்து தாக்கப்படுகிறது அதிமுக. ஆனால் இதுவரை எந்த பதிலடியும் அதிமுக சார்பில் தரப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் நேரமான இது அந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் நீங்கலாக பிற சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்தது.
லோக்சபாவில் இந்த மசோதா எளிதாக நிறைவேறிய நிலையில்,ராஜ்யசபாவிலும் நிறைவேற வேண்டும் எனில் அதிமுக வாக்களித்தாக வேண்டிய நிலை இருந்தது. இந்த மசோதாவுக்குஅதிமுகவின் 11 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால் எளிதாக குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது.
லோக்சபா இடங்களை 1000 ஆக உயர்த்த கோரிய பிரணாப் முகர்ஜி.. கையோடு மோடி அரசுக்கு கடும் எச்சரிக்கை
கடும் விமர்சனம்
இந்த மசோதாவில் இலங்கையில் யுத்தம் காரணமாக இந்தியா வந்த தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் ஷரத்து சேர்க்கப்படாமல் இருந்த நிலையில் ஏன் அதிமுக ஆதரித்தது என்று திமுக கேள்வி எழுப்பியதோடு, அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. தொடர்ந்து போராட்டங்களையும் நடத்தி வருகிறது .
அதிமுக மீதே தாக்கு
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.இந்த போராட்டங்களில் அதிமுக குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்ததையே பெரிதாக விமர்சிக்கப்பட்டது.
துரோகம் என பேச்சு
இந்த சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்து அதிமுக வாக்களித்தது தமிழினத்திற்கு செய்த துரோகம் என்று விமர்சித்துள்ளார்.
இதுவரை பதிலில்லை
இது ஒருபுறம் எனில் அதிமுகவை குடியுரிமை திருத்த மசோதாவை சட்டமாக்க ஒட்டுப்போடும் படி பாஜக கட்டாயப்படுத்தியாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஏனெனில் ராமதாஸ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூட்டணி தர்மத்துக்காக வாக்களித்தாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை அதிமுக குடியுரிமை திருத்த மசோதா குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையோ பதிலையோ தெரிவிக்கவில்லை.
பதிலடி கொடுக்குமா
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிமுகவுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து கடும் நெருக்கடி அளிக்க திமுக அதிரடி திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் குடியுரிமை திருத்த மசோதா விவகாரத்துக்கு அதிமுக பதிலடி கொடுக்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.