ராஜ்யசபா தேர்தல்.. அதிமுக வேட்பாளர்களை அறிவிக்க தாமதம் ஏன்.. பரபரப்பு காரணம்
சென்னை: தமிழகத்தில் காலியாகும் ஆறு ராஜ்யசபா எம்பிகளுக்கான தேர்தலுக்ககான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பலரும் சீட் கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுப்பதால் சீட் யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. அதிமுக எம்பிக்களான ஏகே செல்வராஜ், எஸ் முத்துகருப்பன், விஜீலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா, மற்றும் திமுக எம்பிக்களான திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் டிவி ரங்கராஜன் என ஆறு உறுப்பினர்களுக்கு பதில் புதியவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
இதற்கான ராஜ்யசபா எம்பி தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது. அதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் 5 நாட்களே உள்ளது. அதாவது வரும் 6ம் தேதி தொடங்கி வரும் 13ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது.
மினி சட்டசபை தேர்தல்.. விரைவில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.. அதிமுக வியூகம்.. திமுக என்ன செய்யும்?
வேட்பாளர்கள் அறிவிப்பு
இந்நிலையில் 5 நாட்களுக்குள் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். தற்போது திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோ ஆகியோர் போட்டியிட உள்ளார்கள். ஆனால் அதிமுக சார்பில் 3 பேரின் பெயர்கள் இதுவரை அதிமுக தலைமை அறிவிக்கவில்லை. பலரும் சீட் கேட்டு தலைமையை நெருக்குவதால் முடிவெடுக்க தாமதமாகி வருகிறது.
பலரும் கேட்கிறார்கள்
அதிமுகவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் தம்பிதுரை, கோகுல இந்திரா உள்ளிட்டோர் சீட்டு கேட்டு தலைமையை நெருக்குவதாக கூறப்படுகிறது. இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசனும் பாஜகவின் ஆதரவுடன் சீட்டு கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இருவரும் பயணம்
இதனால் யாருக்கு சீட் கொடுப்பது என்பதை அறிவிப்பதில் தாமதம் ஆகிவருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் தொடர்ந்து வெளியூர் சுற்றுப்பயணத்தில் உள்ளதால் வேட்பாளரை அறிவிப்பதில் அதிமுகவில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக வேட்பாளர்கள்
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னமும் 5 நாட்களே உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர்கள் யார் யார் எனப்தை நாளை மாலை அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக்கூடும் என்று சொல்கிறார்கள். அப்படி அதிமுக அறிவித்தால் அடுத்த ஒரு சில தினங்களில் இரு கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். இரு கட்சிகளும் தலா 3 எம்பிக்களை தேர்வு செய்வதற்கான பலம் உள்ளதால் தேர்தல் நடைபெறாது. போட்டியின்றி 6 எம்பிக்களும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.