"அண்ணா.. பெல்டால அடிக்காதீங்க".. பொள்ளாச்சியில் அதிமுக சறுக்கலுக்கு இதுதான் காரணமா?
பொள்ளாச்சி சம்பவம்தான் அதிமுக தோல்வியடைய காரணமா என தெரியவில்லை.
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவுக்கு சறுக்கலாக இருக்கும் என்று எதிர்பார்த்ததுதான்.. ஆனால் இந்த அளவுக்கு வீழ்த்தி விடும் என்று தெரியாது!
கடந்த 1977 முதல் 2011 வரை நடைபெற்ற 9 சட்டப்பேரவை தேர்தல்களை எடுத்துக் கொண்டால், 8 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்றால் ஒரே ஒருமுறைதான் திமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே பொள்ளாச்சி தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை!
இதற்கு முக்கிய காரணம், பொள்ளாச்சி பக்கம் இருப்பவர்களில் பெரும்பாலானோர் எம்ஜிஆர் ரசிகர்கள். ஜெயலலிதா இருக்கும்போதும் இதே பலத்தைதான் தக்க வைத்து கொண்டிருந்தார். எனவேதான் பொள்ளாச்சியில் திமுகவால் சோபிக்க முடியவில்லை.
2-வது முறையாக தனியார் பால் விலை உயர்வு... லிட்டருக்கு ரூ.2 உயருகிறது
பொங்கலூர் பழனிசாமி
கடந்த முறை 2014 நடைபெற்ற தேர்தலின்போது, திமுக சார்பாக பொங்கலூர் பழனிசாமியை நிறுத்தினார்கள். ஆனால் அவரால் 3-வது இடத்தைதான் பிடிக்க முடிந்தது. 2-வது இடம் கொங்கு மண்டல ஈஸ்வரனுக்கு போய் சேர்ந்தது.
கற்பழிப்பு சம்பவம்
கவுண்டர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மத்திய மண்டலம் என சொல்லப்படும் பொள்ளாச்சியில் திமுக இப்போதும் நேரிடையாகவே போட்டியிட்டது. இதற்கு ஒரே காரணம், பொள்ளாச்சி கற்பழிப்பு சம்பவத்தினால் மக்களுக்கு அதிமுக மேல் உள்ள கடுப்பே! இந்த சம்பவத்தை மையப்படுத்தி போராட்டமும் நடத்தியது.
அதிமுக விருப்பம்
எடப்பாடி தரப்பை பொறுத்தவரை, இதுநாள் வரை, கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது இல்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு அதற்கான ஒரு வாய்ப்பு தெரிந்தோ, தெரியாமலோ கிடைத்துவிட்டது. அதனால் தன் சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகி உள்ளதால், அவரை எப்படியும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பொள்ளாச்சி அதிமுகவும் விரும்பியது.
அதிமுக சரிவு
ஆனால் இது எல்லாவற்றையும்விட "அண்ணா.. பெல்டால அடிக்காதீங்க" என்ற குரல் யார் மனசையும் விட்டு அகலவில்லை என்பது அதிமுகவின் சரிவில் தெரியவந்துள்ளது. பொள்ளாச்சி மட்டுமில்லை.. ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தையும் அந்த பெண்ணின் குரல் யோசிக்க வைத்துவிட்டது.
3-வது இடம்
முதன்முதலில் இந்த பொள்ளாச்சி சம்பவத்தை மூகாம்பிகா ரத்னம் என்ற சமூக ஆர்வலர் மூலம் புகாராக கொண்டு வந்தது மக்கள் நீதி மய்யம்தான். பொள்ளாச்சியே திரும்பி பார்க்கும்படி பேரணி நடத்தி அசத்தியது மக்கள் நீதி மய்யம். தொடர்ந்து கமல் முதலமைச்சரை பகிரங்கமாக திட்டி வெளியிட்ட வீடியோ பல்வேறு தரப்பினரை யோசிக்க வைத்தது.
2-வது இடம்
அதனால்தான் அந்த கட்சி சார்பாக போட்டியிட்ட மூகாம்பிகா ரத்தினம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம், அதிமுக வேட்பாளர் மகேந்திரனை விட 1,75,883 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
பெண்ணின் குரல்
அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் 1,75,883 வாக்குகள் அதிகம் பெற காரணமானது இந்த பொள்ளாச்சி சம்பவமே.. காலம் காலமாக அதிமுக கோட்டையாக இருந்த பொள்ளாச்சி இப்போது திமுக வசம் போனதுக்கு காரணமும் பொள்ளாச்சி சம்பவமே! அந்த இளம் பெண்ணின் அபய குரல் மக்கள் மனதில் இருந்து மறையும் வரை பொள்ளாச்சியை திரும்பவும் தக்க வைக்க அதிமுக நிறைய பாடுபட வேண்டி உள்ளது!