அதிமுகவில் இப்படி ஆளாளுக்கு பேசினா எப்படி? இதுக்குத்தான் ஒற்றை தலைமை தேவை!
Recommended Video
சென்னை: தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்கிற நிலையில்தான் இருக்கிறது அதிமுக. எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும் ஆளுக்கு ஒரு திசையில் பேசிக் கொண்டிருப்பதால்தான் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்கிற குரல் வலுத்து வருகிறது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருந்தாலும் ஈகோ யுத்தம் வெடித்துள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ், வைத்திலிங்கம், சிவி சண்முகம், ராஜன்செல்லப்பா, உதயகுமார் என ஒவ்வொருவரும் ஒரு கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர்.
இதன் உச்சமாகத்தான் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்கிற கோரிக்கையை ராஜன்செல்லப்பாவும் குன்னம் ராமச்சந்திரனும் முன்வைத்தனர். இதையடுத்து அதிமுகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை ஆலோசனை கூட்டம்
இந்த ஆலோசனைக் கூட்டத்திலும் கூட அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை பேச அனுமதிக்கவில்லை என்கிற குமுறல் வெளிப்பட்டிருக்கிறது. இந்த குமுறலை யாரும் வெளியே கொட்டிவிடக் கூடாது என்பதற்காக கூட்டம் முடிந்த கையோடு ஊடகங்களுக்கு யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என கறார் அறிக்கையும் அதிமுக தலைமை வெளியிட்டது.
பேட்டி தந்த ராஜேந்திர பாலாஜி
ஆனால் ராஜேந்திர பாலாஜி, வைத்திலிங்கம், ராஜன்செல்லப்பா என பலரும் இந்த கட்டுப்பாட்டை பொருட்படுத்தாமல் பேட்டி அளித்தனர். தற்போதைய தலைமையே நீடிக்கட்டும் என கூட்டத்தில் முடிவு எடுத்ததாகவும் இதை ராஜன் செல்லப்பாவும் ஒப்புக் கொண்டார் என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபர!!
குமுறிய ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பாவோ, ஒற்றைத் தலைமை குறித்து பேச அனுமதிக்கவில்லை. இருப்பினும் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதாவது பந்தை வீசி இருக்கிறேன்.. நடப்பதை இனி பார்க்கனும் எனக் கூறுகிறார்.
அதிருப்தியில் மதுசூதனன்
இன்னொரு பக்கம் மதுசூதனனோ, தேர்தல் தோல்விக்கான காரணத்தை அமைச்சர்களிடத்தில் மட்டும் கேட்க கூடாது; தொண்டர்களிடமும் கேட்க வேண்டும் என தனிக்குரல் எழுப்பியிருக்கிறார். இப்படி திசைக்கு ஒருவர் பேசிக் கொண்டிருப்பதால் அதிமுக கலகலத்துக் கொண்டிருக்கிறது.
அத்துடன் இப்படியான போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவாவது ‘ஒற்றைத் தலைமை' அவசியம் என்கிற கருத்தும் வலியுறுத்தப்படுகிறது.