அதிமுக ஆலோசனை கூட்டம் திடீர் ஒத்திவைப்பு ஏன்.. பரபர பின்னணி
சென்னை: தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து குறிப்பிட்ட சில மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் புதன்கிழமை சென்னையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களில் அனைத்து தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுவிட்டார்கள்.
உள்ளாட்சி தேர்தல்.. கைமாறும் முக்கிய அதிகாரம்.. சென்னையில் அதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல்
மேலும், வார்டுவரையறை செய்வது, வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாவட்ட ஊரக பகுதி தேர்தலை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.
பாஜக கூட்டணி
இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை, உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மேலிடத்தை வற்புறுத்தி வருகிறார்களாம். ஆனால் அதிமுக மேலிடமோ பாஜகவை கூட்டணியில் கழட்டிவிட முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது. அண்மையில் சிவி சண்முகம் பாஜகவால் தோற்றோம் என்று பேசிய போது, ஓபிஎஸ்,இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், பாஜக உடன் கூட்டணி தொடரும் என்றே கூறினார்கள். எனவே பாஜகவை அதிமுக கழட்டிவிட வாய்ப்பே இல்லை என்ற நிலையே உள்ளது.
மாவட்ட செயலாளர்கள்
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் உள்ள அதிமுக செயலாளர்களுக்கு இன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அதிமுக தலைமை
இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் மற்ற அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சி தலைமை நிர்வாகிகள் ஆலோசனை நடத்த முடிவு மேலிடம் முடிவு செய்திருந்தது. ஆனால், நேற்று நடைபெற இருந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்தது
உடல்நலக்குறைவு
இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் கூறும் போது, "அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதால் நேற்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் நடத்தப்பட இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேறு ஒரு நாளில் இந்த கூட்டம் நடைபெறும் என்றார்.
திடீர் முடிவு
இதனிடையே தமிழக அரசு ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிப்பதற்கு முன்னால் மாவட்ட செயலாளர்களிடம் தேர்தல் பற்றி ஆலோசனை நடத்தினால் கட்சிக்குள் பிரச்சனை வரும் வாய்ப்பு உள்ளதாம். அதனால் தான் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். ஏனெனில் கட்சியில் சில நிர்வாகிகள் பாஜக, பாமகவை சேர்க்காமல் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இந்த சூழலில் அவசரப்பட்டு உள்ளாட்சி தேர்தல் பற்றி பேசினால் தேவையில்லாத பிரச்சனை வரும் என்பதால் அதிமுக ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிலாம் என்கிறார்கள்.