ஜெ.வுக்கு உரிமை கோரும் அம்ருதா, சோபன்பாபுவுக்கு கோராதது ஏன்- நீதிபதி கேள்வி
சென்னை: ஜெயலலிதாவுக்கு உரிமை கோரும் அம்ருதா, சோபன்பாபுவுக்கு கோராதது ஏன் என்று நீதிபதி வைத்தியநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் தனது தாய் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அந்த மனுவை நீதிபதி வைத்தியநாதன் விசாரணை நடத்தினார்.
அப்போது அவரது தீர்ப்பில் கூறுகையில், அம்ருதா கூறும் வளர்ப்பு தாய் சைலஜா, சந்தியாவின் மகள் என்று எந்த தருணத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஜெயலலிதாவின் நற்பெயருக்கு அம்ருதா களங்கத்தை ஏற்படுத்துவதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
மரணத்துக்கு பின்னர்
புராணங்களின்படி, இறந்தவர்களுக்கும் அந்தரங்க உரிமை உள்ளது. அவர்களது ஆத்மாவை தொந்தரவு செய்யக்கூடாது. மரணத்துக்கு பின்னரும் அவர்கள் வாழ்கின்றனர் என்ற நம்பிக்கை உள்ளது.
அனுமதி
ஜெயலலிதா தன் தாயார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் அம்ருதா தாக்கல் செய்யவில்லை. அதனால், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து இறுதிச் சடங்கு செய்வதற்கு அம்ருதாவுக்கு அனுமதி வழங்கமுடியாது.
அரசு தரப்பு
சோபன்பாபு தன் தந்தை என்று அம்ருதா கூறினாலும், அவரது வாரிசுகளின் ரத்த மாதிரியை கொண்டு மரபணு சோதனை செய்யவேண்டும் என்று அவர் கோரவில்லை. ஐகோர்ட்டு இதுகுறித்து கேள்வி எழுப்பிய பின்னர்தான் மரபணு சோதனைக்கு தயார் என்று அவர் தரப்பில் கூறப்பட்டது.
அரசியல் பதவி
இறுதிச்சடங்கு குறித்து அம்ருதா தான் கோரிக்கை விடுக்கிறாரே தவிர, தீபாவும், தீபக்கும் இதுகுறித்து வாய் திறக்காமல் அமைதியாக இருக்கின்றனர். அவர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், இருவரும் ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்கத்தான் முயற்சிக்கின்றனர். அதுவும், ஜெயலலிதா வகித்து வந்த அரசியல் பதவியை அபகரிக்கத்தான் தீபா முயற்சிக்கிறார்.
தள்ளுபடி
எனவே, இந்த தொடரின் கிளைமாக்ஸ் என்னவென்றால், ஜெயலலிதாவின் மகள் என்பதை அம்ருதா நிரூபிக்கவில்லை. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி வைத்தியநாதன் தீர்ப்பளித்தார்.