பற்றி எரியும் டெல்லி.. வண்ணாரப்பேட்டையை கூட எட்டி பார்க்காத அன்வர் ராஜா.. என்னாச்சு?
அன்வர் ராஜா மீது இஸ்லாமிய சமுதாய மக்கள் அதிருப்தியாக உள்ளனர்
சென்னை: "அங்க டெல்லி பத்திக்கிட்டு எரிகிறது.. அன்வர்ராஜா எங்கே.. ஆளையே காணோம்.." என்ற சலசலப்புகள் எழ ஆரம்பித்துள்ளன.. அம்மா இருக்கும்போது ஒரு மாதிரி, இல்லாதபோது ஒரு மாதிரி ஒருசில சிறுபான்மையின தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்றும் சலசலக்கப்பட்டு வருகிறது. டெல்லி போராட்டத்திற்கு ஆறுதல்கூட தராமல் உள்ளது தான் சார்ந்த சமுதாய மக்களையே புறக்கணிப்பதுடன், சார்ந்துள்ள கட்சிக்கும் வெறுப்பை தேடி தந்து வருவதாக சொல்லப்படுகிறது!
அன்வர்ராஜா.. அதிமுகவின் மூத்த தலைவர்.. ராமநாதபுர மாவட்டத்தின் பிரதான அரசியல்வாதி.. எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்ததில் இருந்து உறுப்பினராக இருந்து வருகிறார்.. ஜெயலலிதா காலத்திலும் தனி செல்வாக்குடன் திகழ்ந்தவர்.. பல சமயங்களில் இவரது துணிச்சல் பேச்சு அபாரமானவை!
முத்தலாக் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் "இந்த சட்டம் காட்டுமிராண்டித்தனமானது, இறைவனுக்கு எதிரானது" என்று குரல் கொடுத்தவர்.. ஆனாலும் இவருக்கு எம்பி தேர்தலில் வாய்ப்பு மறுப்பு.. ராஜ்ய சபா பதவியும் மறுப்பு.. என்ற தொடர் அதிருப்திகளுக்கு ஆளானார். இதற்கு பிறகுதான், உள்ளாட்சித் தேர்தலில் மகனையும், மகளையும் வேட்பாளர்களாக நிறுத்தி களம் கண்டாலும், ஆசை அத்தனையும் மண்ணாகிவிட்டது.
நீங்கதான் பொறுப்பு.. உடனே ராஜினாமா பண்ணுங்க.. அமித் ஷாவிற்கு சோனியா செக்.. 6 முக்கிய கேள்விகள்!
படுதோல்வி
இஸ்லாமிய தொகுதிகளில் தன் பிள்ளைகளை நிறுத்தியும்கூட தோல்வியை சந்தித்தபோது, அன்வர்ராஜா சொன்ன காரணம் இதுதான்: "பாஜக அரசுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்படுவதால் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிமுக இழந்து வருகிறது... தேசிய மக்கள் குடியுரிமை பதிவேடு நாடு முழுக்க நடைமுறைப்படுத்தப்படும் என்ற அச்சம் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் இறையாண்மை மற்றும் மதசார்பின்மைக்கு பாதிப்பு வந்துவிடும். எனவே அதிமுக, மத்திய அரசின் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும்" என்றார்.
வண்ணாரப்பேட்டை
அந்த அளவுக்கு சிஏஏ சட்டம் குறித்து கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்த அன்வர்ராஜா பிறகு பல்டியும் அடித்ததுதான் ஒட்டுமொத்த அதிர்ச்சியும்! ஆனால் இதே சிஏஏ சம்பந்தமான போராட்டம் குறித்து எதுவுமே வாய் திறக்காமல் இருக்கிறார்.. குறைந்தபட்சம் வண்ணாரப்பேட்டை வன்முறை சம்பவத்துக்காககூட அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இப்போது டெல்லியில் கண்டதும் சுட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வரும் அளவு வெடித்துள்ளது.. இதற்கும் அன்வர்ராஜா தன் தரப்பு கருத்தினை பதிவு செய்யவில்லை.. ஒருவேளை அவர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்கிறாரா என்றும் தெரியவில்லை.
நம்பிக்கை
பாஜகவின் கைப்பாவையாக அதிமுக செயல்படுவதாக பெரும் குற்றச்சாட்டு உள்ள நிலையில் ஏன் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அன்வர் ராஜா வராமல் இருக்கிறார்? தனது சொந்த சமூகத்திற்கு ஆதரவாக அதிமுகவில் ஒருவர் கூடவா இல்லை என்ற கவலையில் இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்கள் மனம் வெதும்பி போய் உள்ளனர்.. தமக்கு ஒன்று என்றால், விரைந்து வந்து தாங்கி பிடிப்பார்கள் என்று கண்ணில் நம்பிக்கையுடன் காத்து கிடந்து... இப்போது விரக்தியிலும், வெறுப்பிலும் தள்ளப்பட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா
ஜெயலலிதா இருந்தவரை இப்படி எப்போதுமே நடந்ததே இல்லை... இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் உடனே அந்த சமுதாய அமைச்சர்களை அனுப்பி சரி செய்ய பார்ப்பவர் அவர். ஆனால் இன்று அப்படி ஒரு சம்பவமே அதிமுகவில் நடக்கவில்லை.... அதிமுகவின் அடிப்படைகயையே இது கேள்விக்குறியாக்கியுள்ளது. இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமிய சமுதாய அமைச்சர்களையோ அல்லது எம்பிக்களையோ அனுப்பி வண்ணாரப்பேட்டை போராட்ட குழுவுடன் பேசியது போல தெரியவில்லை. இது ஆச்சரியம் தான். ஆனால் கூட்டணி கட்சியில் உள்ள அதிமுகவைவிட்டு விட்டு, ஸ்டாலின் வண்ணாரப்பேட்டைக்கு ஏன் வரலை? என்று எச் ராஜா கேள்வி எழுப்புகிறார்.
ஜவாஹிருல்லா
மனம் வெதும்பி போயுள்ள இஸ்லாமியர்களுக்கு குறைந்தபட்சம் தனது சமூகத்துடன் அன்வர் ராஜா போன்றவர்கள் நிற்க வேண்டாமா? ஆனால், இந்த விஷயத்தில் ஜவாஹிருல்லா, தமீமுன்அன்சாரி போன்றவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.. உடனுக்குடன் கண்டனங்களை பதிவு செய்து வருவதுடன், அமித்ஷா போன்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பகிரங்கமான அறிக்கைகளையும் வெளியிடுகிறார்கள்.. இது ஒன்றுதான் பாதிக்கப்பட்ட இஸ்லாம் சமுதாய மக்களுக்கு ஓரளவு ஆறுதலை தந்து வருகிறது.
நிலோபர் கபில்
அங்கே டெல்லியில் பெண்கள், முதல் குழந்தைகள் வரை அத்தனை பேர் குடும்பம் குடும்பமாக போராடி வருகிறார்கள்.. இதை அன்வர் ராஜா மற்றும் இஸ்லாமிய பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைச்சராக உள்ள நிலோபர் கபில் உள்ளிட்ட மூத்த சமுதாயத் தலைவர்கள் புறக்கணிப்பது அதிமுகவின் மீதான வெறுப்பை மேலும் அதிகமாக்கவே உதவும்... ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி ஒரு நிலைமையை உருவாக்க விட்டிருக்கவே மாட்டார்.. அது கலவரமாக இருந்தாலும் சரி.. அத்தகைய கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்ப்பவராக இருந்தாலும் சரி!