எதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்?
Recommended Video
சென்னை: பாகுபாடு இல்லாமல் இந்த விஷயத்தில் மட்டும் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என எல்லாரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.. எல்லாரும் கூட்டாக சேர்ந்து தேர்தல் ரத்தானதை வரவேற்கிறார்கள் என்றால் என்ன காரணம்?
2 தொகுதி காலி என ஆணையம் அறிவித்தும் இடைத்தேர்தலை நடத்தாமலேயே இருந்தது தமிழக அரசு.இது சம்பந்தமாக கோர்ட்டில் கேஸ் போட்டபிறகுதான், அதுவும் "ஒரு தொகுதி காலி என அறிவிக்கப்பட்டால், இத்தனை நாட்களுக்குள் தேர்தலை நடத்தப்படும் என்பது விதி" என்பதை சுட்டிக்காட்டிய பிறகுதான் தேர்தல் நடத்தவே கோர்ட் தீர்ப்பு சொல்லியது. அதுவும் ஒரே ஒரு தொகுதிக்குத்தான் அனுமதி தந்தது.
அதிமுகவை பொறுத்தவரை, ஜெயலலிதா இறந்து ஆர்.கே.நகர்தான் முதல் தேர்தல். அதிலேயும் 2 கட்சி ஒன்றாக உடைந்து, பிறகு சேர்ந்து, அதன்பின்னர் தேர்தல் ரத்தாகி, கடைசியில் ஒருவழியாக நடந்து முடிந்தது. ஆனாலும் அது அதிமுகவுக்கு சாதகமாக இல்லை.
சிபிஐ ரெய்டுகள்
எனவே அடுத்து வரப்போகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் ஜெயிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி விட்டது. இது முதல் காரணம். ஆனால் அமைச்சர்களின் ஊழல்கள், அதிருப்தி பேச்சுகள், தடாலடி நடவடிக்கைகள், சிபிஐ ரெய்டுகள், போன்ற காரணத்தினாலும் மத்திய அரசின் பிடியில் சிக்கிக் கொண்டு விழித்ததாலும் தேர்தலை சந்திக்க அதிமுக தயங்கியது.
திணறிவிட்டது
இதெல்லாம் போதாதென்று கஜா புயல் பாதிப்புகளை சரியாக கையாளாமலும் விட்டுவிட்டது. இதனால் ஏற்கனவே அதிருப்தியில் உள்ள மக்களுக்கு கூடுதல் அதிருப்தி ஏற்பட்டு, கடைசியில் வேட்பாளரையே அறிவிக்க முடியாத நிலைக்கு ஆளும் தரப்பு திணறிவிட்டது.
சறுக்கல்கள்
திமுகவை பொறுத்தவரை, கருணாநிதி இறந்தபிறகு, தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றபிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இது. ஆனால் ஸ்டாலின் இடைத்தேர்தலை நடத்த அப்போதிருந்தே ஆர்வம் காட்டாமல், முழுக்க முழுக்க நாடாளுமன்ற தேர்தலையே ஃபோகஸ் செய்து வந்தார். திருவாரூர் சொந்த தொகுதி என்றாலும், தேர்தல் முடிவு எம்பி., தேர்தலின்போது தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எந்த இடைஞ்சலையும், சறுக்கலையும் தந்துவிடக்கூடாது என்பதிலேயே உஷாராக இருந்தார்.
விரும்பவில்லை
காங்கிரசுடன் கூட்டணி, ராகுல்தான் அடுத்த பிரதமர், நல்ல உறவுநிலை போன்றவை ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நம்பிக்கையை உடைக்க ஸ்டாலின் விரும்பவில்லை. இப்போதிருக்கும் இதே இமேஜை எம்பி தேர்தல்வரை காங்கிரசுடன் கை கோர்த்து கொண்டு போகவே ஸ்டாலின் விரும்புகிறார். இதுவும் கூட தேர்தலை திமுகவும் விரும்பாமல் போக ஒரு காரணமாக இருக்கலாம்.
எம்பி தேர்தல்
எப்படி பார்த்தாலும் பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விடும் சூழல் இருக்கிறது. அதனால் இடையில் இருக்கும் ஒரு மாதத்தில் இருக்கும் எந்த பெயரையும் கெடுத்துக் கொள்ளாமல் ஒரேயடியாக வரப்போகும் எம்பி தேர்தலை சந்திக்கவே இக்கட்சிகள் விரும்புகின்றன.
ஒருவித சுயநலமே
இதைதாண்டி மக்கள் மீது உள்ள பயமும் சேர்ந்து கொண்டுள்ளது. அதனால்தான் அதிமுக, திமுக, காங்கிரஸ் போன்றவை எச்சரிக்கையாக இருப்பதாக நினைத்து கொண்டு ஒத்து ஊதி இந்த விஷயத்தில் ஒன்றாக கை கோர்த்து வரவேற்றுள்ளன. ஆக மொத்தம் இப்படி"அலர்ட்டாக" இருப்பதுகூட ஒருவித அரசியல் சுயநலமே!!