"என் கிட்ட வாங்க"..கட்சி ஆரம்பிச்சு ரஜினி ரசிகர்களை கூப்பிடும் அர்ஜுன மூர்த்தி.. கமல்,ஸ்டாலின் திக்!
புதுக்கட்சி தொடங்குகிறார் அர்ஜுன மூர்த்தி
சென்னை: எதிர்பார்த்தபடியே அர்ஜுன மூர்த்தி ஒரு புது கட்சியை ஆரம்பிக்க போகிறார்.. அந்த கட்சி பாஜகவுக்கு மாற்றாக இருக்கும் என்றும் சொல்கிறார்.. இதை நம்பலாமா என்று தெரியவில்லை.. அதேசமயம், ரஜினி ரசிகர்களை மறக்காமல் தன்னுடைய புது கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.. இதுதான் இடிக்கிறது!
அர்ஜூன் மூர்த்திக்கு தமிழகத்தில் கொஞ்சம் கூட ஆதரவு கிடையாது.. அவர் யார் என்றே 99 சதவீதம் பேருக்குத் தெரியாது. அப்படிப்பட்ட நிலையில் யாரை நம்பி களம் இறங்குகிறார்.. இறக்கி விடப்படுகிறார்.. எதனால் இப்படி ஒரு முடிவு? ஏன் திடீரென ஒரு புதுக்கட்சி? இத்தனை கேள்விகள் எழுகின்றன.
நேற்று அர்ஜுன மூர்த்தி தன்னுடைய ட்வீட்டில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "ரஜினி என்னை, நாட்டிற்கு அறிமுகம் செய்தது, அனைவரும் அறிந்ததே.. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பி, என்னை நாட்டிற்கு அறிமுகம் செய்தவரின் பாதம் தொட்டு வணங்கி, நான் மாற்றத்தின் வழியில் பயணித்து, நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன்.. ரஜினியின் ஆசீர்வாதம் மட்டும் போதும்... மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன்" என்று தெரிவித்திருந்தார்.
ரஜினி
அதாவது அந்த அறிக்கை முழுக்க ரஜினியை மையப்படுத்தியிருந்தது. கிட்டத்தட்ட ரஜினியே மாறு வேடத்தில் வந்து இந்த அறிவிப்பை வெளியிட்டது போலவே ஒரு பிரமை ஏற்பட்டது. ரஜினி ரசிகர்களை மையமாக வைத்தே அத்தனை வார்த்தைகளும் இருந்தன. பாஜக முகம் என்று அறியப்பட்ட அர்ஜுன மூர்த்தி, பாஜகவை பற்றி ஒரு வார்த்தையைகூட அந்த அறிக்கையில் சொல்லவில்லை.. மொத்தமும் ரஜினியை மையப்படுத்தியே அறிக்கை இருந்ததால், சந்தேகம் வலுவாகி கொண்டே போனது.
குழப்பம்
இவ்வளவு நாள் அமைதியாக இருந்தவர் ஏன் திடீரென இந்த அறிக்கை வெளியிட்டார்? சும்மா இருக்கும் ரஜினியை ஏன் சீண்டுகிறார்? ரஜினி ரசிகர்களை ஏன் குறி வைக்கிறார்? ஒருவேளை ரஜினி மறுபடியும் தன் முடிவை மாற்றி கொண்டு அரசியலுக்கு வர போகிறாரா? என்பன போன்ற பல சந்தேகங்கள் எழுந்தன..இந்த நிலையில்தான் எதிர்பார்த்தபடியே, புது கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார் அர்ஜூன மூர்த்தி.. தன்னுடைய புது கட்சி பாஜகவுக்கு மாற்றாக இருக்கும் என்றும் சொல்கிறார்?
அழைப்பு
அத்துடன் ரஜினி ரசிகர்களையும் தன்னுடைய புது கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.. எதனால் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் பரவலாக எழுகிறது. இங்குதான் இடிக்கிறது. அர்ஜூன் மூர்த்தி தொடங்கப் போகும் கட்சி பாஜகவுடையது கிடையாது.. பாஜக சாயல் கிடையாது.. பாஜக ஆதரவும் கிடையாது... அதேசமயம், ரஜினியையும் பயன்படுத்துகிறார்கள்.. ரஜினி ரசிகர்கள் இங்கு வர வேண்டும்.. இவரை ஆதரிக்க வேண்டும்.. வேறு கட்சிகளுக்குப் போய்விடக் கூடாது.. ஓட்டுக்கள் அப்படியே இந்தப் பக்கம் தக்க வைக்கப்பட வேண்டும்.. ரஜினியை ஆதரிப்பவர்களும் இந்தப் பக்கம் வர வேண்டும்.. இந்த தோற்றத்தை்ததான் அர்ஜூன் மூர்த்தியின் அவதாரம் உணர்த்துகிறது.
ஆதரவு
முதலாவதாக, ரஜினி கட்சியை தொடங்க போவதில்லை என்று அறிவித்த உடனேயே ரசிகர்கள் பெரும் அப்செட்டாகி விட்டனர்.. அத்துடன், யாரெல்லாம் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்று மேலும் சொல்லிவிடவும், ரசிகர்கள் அப்போது முதல்தான் தங்கள் போக்கை மாற்றி கொள்ள துவங்கினர்.. ஆனால், ரஜினி முடிவை அறிவித்த உடனேயே காய்களை நகர்த்ததொடங்கிவிட்டது திமுக.. அதன்படி சில முக்கிய பிரமுகர்களையும் தங்கள் பக்கம் இழுத்து வந்தது. குறிப்பாக, தூத்துக்குடி ரஜினி ரசிகர் மாவட்ட தலைவரையும் தூண்டில் போட்டு அள்ளியதுதான் பெரிய விஷயம்... அதைவிட, கட்சியில் சேர்ந்த உடனேயே முக்கிய பொறுப்பை தூக்கி தந்து அடுத்த அதிர்ச்சியை தந்தது திமுக.
பரபரப்பு
இது ரஜினி ரசிகர்களிடையே சலசலப்பையும், பரபரப்பையும் உண்டு பண்ணியது... இதையடுத்து, வேறு சில மாவட்ட பொறுப்பாளர்களையும் இழுக்க திமுக தொடர்ந்து முயன்று வருகிறது.. இதை தடுத்து நிறுத்தவே அர்ஜுன மூர்த்தி "மூலம்" ரசிகர்களை தக்க வைக்கும் முயற்சி தொடங்கப்பட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இப்படி கட்சி தொடங்குவதற்கு ரஜினியும் மறைமுக ஆதரவு தந்திருக்கலாம் அல்லது இனி தரலாம் என்று தெரிகிறது.. காரணம், அர்ஜுன மூர்த்தி அளவுகடந்த நம்பிக்கையை வைத்திருந்ததால்தான், ஆரம்பிக்கப்படாத தன் கட்சியில் முக்கிய பொறுப்பை தந்தார் ரஜினி.
பேச்சுவார்த்தை
ரஜினி ரசிகர்களுக்கு பகிரங்கமாகவே அர்ஜுன மூர்த்தி அழைப்பு விடுத்திருப்பதாலும், ரஜினி தாராளமாகவே இவருக்கு இந்த முறை வாய்ஸ் தரலாம் என்று நம்பப்படுகிது.. ஸோ, கமல் கூறுவது போல அவருக்கு வாய்ஸ் கிடைக்காது.. மாறாக அர்ஜூன் மூர்த்திக்கு வாய்ஸ் கொடுத்து தனது ரசிகர்களை ரஜினி சமாதானப்படுத்த முயற்சிக்கலாம் என்று தெரிகிறது. , ரஜினி கட்சி துவங்குவது பற்றி அர்ஜுன மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் நேரடியாகவே பலமுறை பேச்சுவார்த்தை, ஆலோசனையை நடத்தியவர் என்பதால், அந்த இணக்கம் இனியும் தொடரலாம் என தெரிகிறது.
தமிழ்நாடு
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. பாஜகவுக்கு மாற்று என்று தன் கட்சியை சொல்கிறார் அர்ஜூன மூர்த்தி.. இங்குதான் ஒரு விஷயம் இடிக்கிறது.. "எனது இரண்டு கண்களில் ஒரு கண் நரேந்திர மோடி.. இன்னொரு கண் ரஜினிகாந்த்... இந்த இருவருமே தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள்" என்று ஒருமுறை சொன்னவர்தான் அர்ஜுன மூர்த்தி..
நல்லுறவு
அதாவது பாஜகவின் விசுவாசி.. ரஜினி கட்சி தொடங்குவதில்லை என்று சொன்னவுடன், மீண்டும் அவரை தங்கள் கட்சியில் இணைத்து கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை என்று பாஜகவும் சொல்லி இருந்தது.. அந்த வகையில், பாஜகவுடன் நல்லுறவை இப்போதுவரை பேணுபவர்.. ஆனாலும் பாஜகவுக்கு மாற்றாக தன் கட்சி இருக்கும் என்று ஏன் சொல்ல வேண்டும்? ஒருவேளை ரஜினியே கட்சி ஆரம்பித்திருந்தாலும், நிச்சயம் பாஜகவுக்கு ஆதரவாக சென்றிருக்க மாட்டார்.. தமிழக மக்கள் பாஜக மீது அதிருப்தி கொண்டுள்ளார்கள் என்பது ரஜினிக்கே நன்றாக தெரியும்.. அதனால்தான், மக்களின் வெறுப்பை சம்பாதிக்க அவர் ஒருபோதும் விரும்பவில்லை.. இப்போதுகூட, பாஜகவுக்கு ஆதரவாக அர்ஜுன மூர்த்தி கட்சியை ஆதரம்பித்திருந்தால், அதற்கு ரஜினி ஆதரவு தருவது சந்தேகம்தான்..
சப்போர்ட்
பாஜக சப்போர்ட்டுடன் கட்சியை தொடங்கினால் அர்ஜுன மூர்த்திக்கே அது சறுக்கலாகிவிடும்.. அந்த புது கட்சிக்கும் நோட்டாதான்... அதனாலேயே பாஜகவுக்கு மாற்று என்பதை சொல்லி, வாக்குகளை அள்ள முயல்கிறாரோ என்று தோன்றுகிறது. ஆனால் இதில் திமுகவுக்கு பாதிப்பு வருமா என்ற கேள்வி எழும்.. ரஜினியே நேரடியாக வந்திருந்தால் அதைப் பற்றி யோசிக்க வாய்ப்பு உண்டு, லாஜிக்கும் உண்டு..
சந்தேகம்
ஆனால் அர்ஜூன் மூர்த்தியால் திமுகவின் ஒரு செங்கல்லையாவது நகர்த்த முடிந்தால் அது மிகப் பெரிய உலக சாதனைதான்.. எனவே அர்ஜூன் மூர்த்தியின் திடீர் கட்சியால் திமுகவுக்கு லேசான அதிர்வு கூட ஏற்படாது என்றே நம்பப்படுகிறது.. காரணம், ரஜினி நேரடியாக வராமல் அர்ஜூன் மூர்த்திக்கு ஆதரவு தந்தால் அதை அவரது ரசிகர்களே முதலில் ஏற்பார்களா என்பது சந்தேகம்தான்!