எல்லாம் சரி.. ஏன் விஜயபாஸ்கரை கேள்வி கேட்கவில்லை அமைச்சர் சி.வி.சண்முகம்?
விஜயபாஸ்கரை ஏன் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டவில்லை என தெரியவில்லை
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று அமைச்சர் சிவி சண்முகம் அளித்துள்ள பேட்டி பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
சசிகலா குடும்பம் மீதான விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும், இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையும், முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் பெயர்களை உள்ளே இழுத்து போட்டுள்ளார்.
ஏற்கனவே ஆணையத்தின் விசாரணை பிடியில் ராதாகிருஷ்ணன் இருக்கும்போதும், ஆணையத்ரிதல் ஆஜராகி விளக்கங்கள் அளித்துள்ளபோதும், திரும்பவும் எதற்காக ராதாகிருஷ்ணன் பெயரை அமைச்சர் மேற்கோள் காட்டி உள்ளார் என தெரியவில்லை.
விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை செயலாளரையே திரும்ப திரும்ப சொல்லும்போது, அப்போலோ ஆஸ்பத்திரியில் அமைச்சர் என்ற முறையிலும், டாக்டர் என்ற முறையிலும் கூடவே இருந்த விஜயபாஸ்கரின் பெயரை ஏன் சிவி சண்முகம் தெரிவிக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
ஏன் சொல்லவில்லை?
ஜெயலலிதா சிகிச்சையின்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் கூடவே இருந்தார் என்று இதுவரை பல அமைச்சர்கள் அன்றைய நாளில் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்கள். எனினும் அவரை சிவி சண்முகம் ஏன் சொல்லவில்லை என தெரியவில்லை.
எதிர்மனுதாரர்கள்
2 தினங்களுக்கு முன்புகூட, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில், முன்னாள் தலைமை செயலர், தற்போதைய சுகாதாரத் துறை செயலர் ஆகியோரை, எதிர்மனுதாரர்களாக சேர்க்கக் கோரி, கமிஷன் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்திருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் கிட்டத்தட்ட 20 ஆவணங்களில், ராதாகிருஷ்ணன், சசிகலா கையெழுத்திட்டு உள்ளதாக கூறப்பட்டது. என்றாலும், ஒரு அமைச்சரையும் தாண்டி, பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் தாண்டி இது எந்த அளவுக்கு உண்மை என்பது புதிராக உள்ளது.
விளக்கம் அளித்தாரா?
அதற்கேற்றார் போல், இதுவரை ஜெயலலிதா உடனிருந்த அமைச்சர் பிரமாண பத்திரத்தை இதுவரை தாக்கல் செய்யவில்லை. ஆணையத்திலும் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. மரணம் குறித்து ஆணையமே விரைவில் விசாரித்து முடியும் நிலை வந்தும், இதுவரை அமைச்சர் மீது மட்டும் ஏன் கமிஷன் எந்த விசாரணையும் ஆரம்பிக்கவில்லை என தெரியவில்லை.
அதிர்ச்சி
ஒரு மாநில சுகாதாரத்துறை அமைச்சரையும் தாண்டி, அவருக்கு கீழ் பொறுப்பில் உள்ள சுகாதாரத்துறை செயலாளர்தான் சிகிச்சை சம்பந்தமான எல்லா முடிவுகளையும் எடுத்தாரா என்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.