பாஜகவைவிட அதிமுக வீக்காவா இருக்கு.. திடீருன்னு இப்படி சொல்லிட்டாரே வி.பி.துரைசாமி.. என்ன லாஜிக்?
சென்னை: அதிமுக மற்றும் திமுக இடையே இனிமேல் போட்டி கிடையாது.. பாஜக vs திமுக என்றுதான் போட்டி மாறும் என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி.
துரைசாமி பேட்டி திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காது என்று எதிர்பார்க்கலாம். ஆனால், அதிமுக நிர்வாகிகளிடையே பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது பாஜக எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. மாறாக, பல இடங்களிலும் டெபாசிட்டை இழந்ததுதான் மிச்சம். ஆனால் மறுபக்கம், அதிமுக ஆலமரம் போல விஸ்வரூபம் எடுத்தது.
அதிமுக வலிமை
கருணாநிதி போன்ற தலைவர் இருந்த போதிலும் கூட, மறுபடியும் ஆட்சிக்கு வந்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக. கடந்த வருடம் நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போதுகூட, தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றிருந்தாலும் கூட, அதன் வாக்கு வங்கி பெரிய அளவுக்கு சரியவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் தலைமையிலான அணியினர் வாக்குகளை பிரித்த போதிலும் அதிமுகவின் வாக்கு வங்கி பெரிய அளவு சரிவடையவில்லை. சட்டசபை இடைத் தேர்தலிலும் கூட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கான தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது.
கொந்தளிப்பு
இந்த நிலையில் விபி துரைசாமி எந்த அடிப்படையில் இப்படி ஒரு பேட்டியை அளித்தார் என்ற கொந்தளிப்பு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால், தமிழகத்தில், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாகத்தான் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில், பாஜகவுக்கு பெரிய ஓட்டு வங்கி கிடையாது. ஆனால் தங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று விபி துரைசாமி பேசியுள்ளது எப்படி நியாயமாகும் என்று கேட்கிறார்கள் அவர்கள்.
அருளாசி ஆட்சி
மேலும், அதிமுகவை சேர்ந்த மறைந்த பெரிய தலைவர் ஒருவர், திண்டுக்கல் அருகே நாடி ஜோதிடம் பார்த்த போது, தமிழகத்தில், 'அருளாசி ஆட்சி' அமையும் என்று சொன்னதாக ஒரு தகவல் உண்டு. எனவேதான், அதிமுக பத்திரிகைகளில் எம்ஜிஆர் காலந்தொட்டு அருளாட்சி என்ற ஒரு வார்த்தை அவ்வப்போது இடம்பெறுவதை அனைவரும் கவனித்திருப்பீர்கள். அந்த அளவுக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சி அது.
கொல்லூர் முகாம்பிகை பக்தர்
திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்தது வந்து அதிமுகவை தொடங்கியிருந்தாலும்கூட, அவர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டார். ஜெயலலிதாவின் ஆன்மீக நம்பிக்கை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. திமுகவை போல தீவிர கடவுள் மறுப்பு கொள்கை அதிமுகவுக்கு துளியும் கிடையாது. ஆனால், சமூக நீதி, பெண் விடுதலை, மாநில சுயாட்சி, சமத்துவம் போன்ற விஷயங்களில் திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையில் பல்வேறு விஷயங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரே மாதிரியான கொள்கை கொண்டவை.
பாஜகவின் திடீர் பேச்சு
இப்போது, பாஜக vs திமுக என்று போட்டி மாறும் என்று துரைசாமி கூறியுள்ளதன் அர்த்தம், வலதுசாரி சித்தாந்தம் vs திராவிட சித்தாந்தம் என்றுதான் பொருள்படும் என்கிறார்கள் திராவிட சித்தனைவாதிகள். கந்தசஷ்டிகவசம் பிரச்சினையில் பாஜக முன்னால் வந்து குரல் கொடுத்தது, போராட்டம் நடத்தியது போன்றவற்றுக்கு கிடைத்த ஆதரவை மனதில் வைத்து இதுபோல தடாலடியாக ஒரு கருத்தை பாஜக துணைத் தலைவர் கூறியிருக்கலாம் என்று தெரிகிறது.
அதிமுக அதிருப்தி
ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணி என்றால் அடுத்து பாஜக சார்பில் ஒருவர்தான் முதல்வர் வேட்பாளரா என்ற கேள்வி அதிமுகவினர் மனதில் கொந்தளிப்பாக எழுந்துள்ளது. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சி, தமிழகத்தை அதிக முறை ஆட்சி செய்த.. ஆட்சி செய்து வரும் கட்சியை, தங்கள் கூட்டணியில் வந்து சேர்ந்து கொள்ளுமாறு அழைக்க என்ன அடிப்படை?, என்ன முகாந்திரம் இருக்க முடியும் என்ற கொந்தளிப்பு அதிமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.