சட்டசபை தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணிதான்.. தனித்தே பிரசாரம் செய்யும் பாஜக.. என்ன கணக்கோ?
சென்னை: தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் பாஜக தலைவர்கள் தனித்தே பிரசாரம் செய்து வருவது பல்வேறு யூகங்களுக்கு வழியேற்படுத்தி கொடுத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என அறிவித்தனர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கூட்டணி தொடர்பாக அமித்ஷா எதுவும் கூறவில்லை.
இருந்தபோதும் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருடனும் அவர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி சென்னை வருகை தந்தார். அந்த விழாவில் அரசியல் பேசப்படவில்லை. அதேநேரத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருடன் கரம் கோர்த்து கைகளை உயர்த்தி பிடித்தார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகை.. அர்பணிக்க போகும் ரூ.12,400 கோடி திட்டங்கள் இவைதான்!
பிரதமர் மோடி மீண்டும் வருகை
பின்னர் ஈபிஎஸ் உடன் மட்டும் தனியே பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இன்று மீண்டும் தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார் பிரதமர் மோடி. பாஜகவின் இந்த தேர்தல் பிரசார கூட்டங்களில் அதிமுக தலைவர்கள் பங்கேற்கவில்லை.
அதிமுக அணி
அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்டது பாஜக. ஆனால் 20 ப்ளஸ் தொகுதிகள்தான் என்றது அதிமுக. இதனால் அதிமுக- பாஜக இடையேயான தொகுதி பங்கீட்டு சிக்கல் தொடருகிறது. அதேபோல் பாமகவுடனான அதிமுக பேச்சுவார்த்தையும் அப்படியே நிற்கிறது. அதிமுக கூட்டணியில் தமாகா மட்டும் இப்போது வரை உறுதியாக இடம்பெறுகிற கட்சியாக உள்ளது.
திமுக பேச்சுவார்த்தை
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக உம்மன் சாண்டி, தினேஷ் குண்டுராவ் சென்னையில் நேற்று முதலே முகாமிட்டுள்ளனர்.
பாஜக திட்டம்தான் என்ன?
இந்த நிலையில் அதிமுக அணியில் இருந்தும் பாஜக தனி ஆவர்த்தனம் செய்வதுதான் ஏன் என்கிற கேள்வியை எழுப்பி வருகிறது. பாஜகவின் இந்த தனி ஆவர்த்தனத்தின் பின்னணியில் வேறு சில திட்டங்கள் இருக்கிறதோ என்கிற சந்தேகத்தையும் அதிமுக தலைவர்கள் எழுப்புகின்றனர்.