ராகுல் தோல்விக்கு பயந்து ஓடும் கோழையா..?.. தமிழக எம்.பி.யின் தடாலடி விளக்கம்!
சென்னை: ஆக்சுவலாக நம்ப முடியவில்லைதான். ஆனாலும் 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை! நிரந்தர எதிரியும் இல்லை!' எனும் இன்ஸ்டண்ட் விளக்கத்தை சட்டைப் பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு அலைவதால், தமிழக அரசியலில் இந்த கூட்டணி அமையவே அமையாது! என்று எதையும் சொல்லவே முடியாது.
இவ்வளவு ஏன்? "இ.பி.எஸ்.ஸும், ஸ்டாலினும் கூட இணைந்து 'ஆரியத்துக்கு எதிரான திராவிட கைகள்'ன்னு ஒரு கூட்டணியை போட்டாலும் ஆச்சரியமில்லை." அப்படின்னு ஒரு குறும்புக்கார நெட்டிசன் கொளுத்திப் போட்டதை நினைவில் கொள்க.
ஆக, சூழ்நிலை இப்படியிருக்கும் நிலையில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி.யான செல்லக்குமார் சமீபத்தில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வந்திருக்கிறார். இது பல விதமான யூகங்களை கிளப்பிவிட்டிருக்கிறது தமிழக அரசியலரங்கில்.
'இன்னும் எத்தனை காலத்துக்குதான் காங்கிரஸை சுமந்து கொண்டே திரிவது?' என்று தி.மு.க.வின் முக்கிய முகமான கே.என்.நேரு பேசியதும், 'நாங்குநேரி இடைத்தேர்தலில் அத்தொகுதியை தி.மு.க.வுக்கு கேட்டு வாங்க வேண்டும். அதேபோல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மிக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்.' என்று உதயநிதி பேசியதையும் வைத்தும், ராகுலுக்கு நெருக்கமான தமிழக காங்கிரஸாரில் ஒருவரான செல்லக்குமார் இப்படி முதல்வரை சந்தித்ததையும் முடிச்சுப் போட்டுவிட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலின் மெகா வெற்றிக்குப் பின் தி.மு.க.வுக்கு கர்வம் அதிகரித்துவிட்டது. காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜெயித்தது ஸ்டாலினின் செல்வாக்கால் மட்டுமே! என்றுகொக்கரிப்பவர்கள், இப்போது உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் தங்களை கழட்டிவிட முடிவு பண்ணிவிட்டதாக பொருமுகிறது தமிழக காங்கிரஸ்.
இதை உணர்ந்திருக்கும் ராகுலுக்கு ஸ்டாலின் மீது ஏக எரிச்சல். அதனால் சேஃபாக சில முடிவுகளை எடுக்கவே தமிழக முதல்வரை சந்திக்க செல்லக்குமாரை அனுப்பியிருக்கிறார்! ஆக கூடிய விரைவில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்குள் சில அதிரடி திருப்பங்களை எதிர்பார்க்கலாம்! என்று விமர்சகர்கள் முணுமுணுக்கின்றனர்.
இந்த நிலையில், இந்த சந்திப்பு மற்றும் ராகுல் மீதான விமர்சனங்கள் பற்றி பதிலளிக்கும் செல்லக்குமார்..."தமிழக முதல்வருடனான எனது சந்திப்பை சிலர் தவறாக பார்ப்பது பற்றி எனக்கு கவலை இல்லை. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதி எனும் அடிப்படையில், முதல்வரை சந்தித்து தொகுதி பிரச்னைகள் பற்றி சொல்லியிருக்கிறேன். மாநில அரசுடன் இணைந்துதான் செயலாற்ற முடியும். எங்கள் கட்சி தலைமைக்கு இதை தெரிவித்துவிட்டுதான் சென்றேன்.
ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தது, தேர்தல் தோல்வியால் அல்ல. அவரது முடிவை விமர்சிக்கும் இடத்தில் நான் இல்லை. ஆனாலும் ஒன்றை மட்டும் தெளிவாக சொல்கிறேன், கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்தால் கட்சியின் ஒவ்வொரு விஷயத்தையும் தினமும் கண்காணிக்க வேண்டும். இதனால் பா.ஜ.க.வை கவனிக்க முடியாது.
மோடி ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கவனித்து, அதற்கு செக் வைக்கவே தன்னை முழுமையாக தயார் செய்து கொள்ள இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதை கோழைத்தனமான முடிவு!என்பவர்களுக்கு அரசியல் புரியவில்லை என்று அர்த்தம்." என்கிறார். ஆனாலும், 'முதல்வரை நான் சந்தித்தது பற்றி விமர்சனம் செய்பவர்களை பற்றி எனக்கு கவலையில்லை' என்று செல்லக்குமார் சொன்னது, தி.மு.க.வையும், ஸ்டாலினையும் சாடுவதாகவே படுகிறது! என்கின்றனர் விமர்சகர்கள்.
- ஜி.தாமிரா