சிதம்பரம் தொகுதியில் தேர்தல் முடிவு தாமதம்.. பின்னணியில் சதியா? நடந்தது என்ன? திருமாவளவன் பதில்
Recommended Video
சென்னை: சிதம்பரம் தொகுதியில் ஏன் அதிகாலை வரை தேர்தல் முடிவு அறிவிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பதிலளித்தார்.
திமுக கூட்டணி சார்பில், பானை சின்னத்தில், சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், தொல்.திருமாவளவன். இவருக்கும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகருக்கும் நடுவே துவக்கம் முதல் கடும் போட்டி நிலவியது. மாறி, மாறி இருவரும் முன்னிலை பெற்றனர். இறுதியாக அதிகாலை 2.45 மணியளவில்தான், வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாகின.
3219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் திருமாவளவன்.
போதும்.. அன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... இந்த முறை ஷாக் கொடுப்பது திமுக அல்ல அதிமுக!
திருமாவளவன் பேட்டி
இதன்பிறகு நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி: சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க, 50 கோடி முதல் 100 கோடி வரை வாரி இறைத்தார்கள். சாதிய பிரச்சாரங்களை முன்னெடுத்து கூர் தீட்டினார்கள். அதையெல்லாம் தாண்டி என்னை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். அவதூறு பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் சிதம்பரத்திலும், அதிகபட்சமான வாக்கு வித்தியாசத்தில் திண்டுக்கல்லிலும் இந்த அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஆதரவு
இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில், திமுக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வெற்றி பெற்ற இடங்களில் கூட குறைந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக தமிழகம், திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்துள்ளது என்றார்.
சிதம்பரம் தொகுதி
சிதம்பரம் தொகுதியில், வாக்கு எண்ணிக்கை தாமதமாக பின்னணியில் சதி இருந்ததா? என்ற நிருபர்கள் கேள்விக்கு, திருமாவளவன் அளித்த பதில்: சிதம்பரம் தொகுதியில், நான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடத்தில்தான் இருந்தேன் என்றாலும் ஏன் இவ்வளவு தாமதம் என்பது எனக்கே இன்னும் விளங்கவில்லை. தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இருவரையும் நேரில் சந்தித்து, வாக்கு எண்ணிக்கையை விரைவுபடுத்துங்கள் என்று நான் இரண்டு, மூன்று முறை முறையிட்டேன். இரு வேட்பாளர்களும், மிக நெருக்கமாக முன்னே பின்னே என்று இருப்பதால் துல்லியமாக நாங்கள் அறிவிக்க வேண்டி உள்ளது. எனவே அவசரம் முக்கியமல்ல. எண்ணிக்கையில் உள்ள துல்லியம்தான் முக்கியமானது என்று தேர்தல் பார்வையாளர் என்னிடம் சொன்னார்.
உள்நோக்கம் தெரியவில்லை
எனவே, அதிகாலை 2.45 மணிக்குத்தான் தேர்தல் முடிவை அறிவித்தனர். தபால் ஓட்டுக்களை கூட மாலை 5 மணிக்கு மேல்தான் எண்ணவே தொடங்கினார்கள். இதில், உள்நோக்கம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றாலும்கூட, வாக்கு எண்ணிக்கை, தாமதமானது ஏன் என்று இன்னும் தெரியவில்லை. அகில இந்திய அளவில் நாம் எதிர்பார்த்தது எதிர்பார்க்காதது நடந்துவிட்டது. நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதுவே பாஜக பெரும்பான்மை அமையக் காரணமாக அமைந்து விட்டது. தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணிக்கு மக்கள் மகத்தான வெற்றியை தந்துள்ளனர்.
பாமக அவதூறு
அனைத்து தரப்பு மக்களையும் நான் மதிக்கிறவன், நேசிக்கிறவன். ஆனால் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு நான் எதிராக இருப்பது போல ஒரு தோற்றத்தை பாமக பரப்பியது. அந்த அவதூறு முறியடிக்கப்பட்டுள்ளது. அதற்காக எல்லா மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சிதம்பரம் தொகுதி மக்களுக்கு எனது வெற்றியை காணிக்கையாக்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.