161 வருட பிளான்.. சீனாவிற்கும் செக்.. முதல்வர் ஸ்டாலினின் சேது சமுத்திர கோரிக்கை.. ஏன் முக்கியம்?
சென்னை: சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டும், கைவிடப்பட்ட இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து இருக்கிறார்.
Recommended Video
சேதுசமுத்திர திட்டத்தை கடந்த நீண்ட வருடங்களாக எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று திமுக உறுதியாக இருக்கிறது. தமிழ்நாடு முதல்வராக கருணாநிதி இருந்த போதும் கூட இந்த திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக முயன்றார்.
ஆனால் பல்வேறு தடைகள், எதிர்ப்புகள், பின் ஆட்சி மாற்றம் காரணமாக இந்த திட்டம் செயல்படுத்தபடாமலே போனது. சேதுசமுத்திர பகுதியை ஆழப்படுத்தி, அங்கு கப்பல்கள் வேகமாகவும், அதிகமாகவும் செல்லும் வகையில் கால்வாய் ஏற்படுத்துவதே இந்த திட்டம் ஆகும்.
நதிநீர் முதல் சுற்றுச்சூழல் திருத்த சட்டம் 2020 வரை மோடியிடம் ஸ்டாலின் வைத்த 25 கோரிக்கைகள்
திட்டு
இங்கு இருக்கும் திட்டு போன்ற பகுதியால் கப்பல்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்திய பெருங்கடலில் இருந்தும், அரபிக்கடல் பகுதியில் இருந்தும் வங்கக்கடல் செல்ல வேண்டும் என்றால், இலங்கையை சுற்றி செல்ல வேண்டியது இருக்கிறது. இதனால் பல கோடி கூடுதல் செலவும் ஆகிறது, அதேபோல் பாதுகாப்பு குறைபாடும் உள்ளது.
ஆழம்
அதுவே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருக்கும் பகுதியை ஆழப்படுத்தினால், இந்த போக்குவரத்தை எளிதாக, பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும். சேது சதுர பகுதியில் 300 மீ அகலமும் 12 மீ ஆழமும் 167 கி.மீ நீளமும் கொண்டதாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.1860ல் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான ஏ.டி.டெய்லர் மூலம் இந்த திட்டத்திற்கான ஆலோசனைகள் நடந்தது.
அடிக்கல்
அதன்பின் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஜூலை 2, 2005ல் இதற்கான திட்டப்பணிகள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் மதுரையில் துவக்கி வைக்கப்பட்டது. ஆனால் அதன்பின் திட்டம் மொத்தமாக கைவிடப்பட்டு, கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
161 வருட
161 வருடமாக திட்டமிடப்படும் ஒரு திட்டத்தை எப்படியாவது செயலுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். இது பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெரிய உதவியாக இருக்கும். அதேபோல் சென்னை துறைமுகம், தூத்துக்குடி, குமரி கடல் பகுதிகள் அதிக முக்கியத்துவம் பெறும். எல்லாம் போக சீனாவிற்கு இது மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கும்.
கொழும்பு
கொழும்பு போர்ட் சிட்டி மூலம் இந்திய பெருங்கக்கடலில் சேது சமுத்திரம் அருகே கால் பதிக்கும் எண்ணத்தில் சீனா உள்ளது. பாதுகாப்பு ரீதியாக சீனாவின் இந்த திட்டம் இந்தியாவிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்ற நிலையில் சேது சமுத்திர திட்டம் வந்தால் கடற்படைக்கு அது வசதியாக இருக்கும். இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலினின் இந்த கோரிக்கை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.