அப்செட் ஆரம்பம்.. காங்கிரஸ் 'கோட்டை' நெல்லை திமுகவுக்கு தாரை வார்க்கப்பட்டது ஏன்?
சென்னை: காங்கிரசின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் நெல்லை லோக்சபா தொகுதி இம்முறை திமுகவிற்கு சென்றதில், பெரும் அப்செட் நிலவுகிறது.
லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதி என்பது அனைத்து கட்சிகளாலும் மிகவும் எதிர்பார்க்கப்படக்கூடிய தொகுதிகளில் ஒன்று.
நெல்லை லோக்சபா தொகுதியில், ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நான்குநேரி, ராதாபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 7 தனி தொகுதிகள்.. திமுக போட்டியிட போவது ஒன்னே ஒன்னுதான்.. அதிருப்தியில் தலித்துகள்!
5 முறை வென்ற காங்கிரஸ்
ஆரம்பம் முதலே இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உண்டு. எங்கு காங்கிரசுக்கு செல்வாக்கு குறைந்தாலும், நெல்லையில் குறைந்தது இல்லை. காங்கிரஸ் இங்கே 5 முறை வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ஆனால் திமுகவுக்கு இங்கு 2 முறை மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. இருமுறையும் சிவபிரகாசம் என்ற வேட்பாளர் வென்றார். ஆனால் அதிமுக மொத்தம், 7 முறை வெற்றி பெற்றுள்ளது. பெருவாரியாக நாடார் வாக்குகள் இங்கே உள்ளது, 'காமராஜரின்' காங்கிரசுக்கு ஆதரவு அலை வீச ஒரு காரணாகும்.
அதிமுக எம்பி
தற்போது திருநெல்வேலி தொகுதி எம்.பி.யாக, அதிமுகவின் கே.ஆர்.பி.பிரபாகரன் பதவி வகித்து வருகிறார். 2014ம் ஆண்டு தேர்தலில், 3 லட்சத்து 98 ஆயிரத்து, 139 வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடினார். இது, அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் தேவதாச சுந்தரமைவிட, 1 லட்சத்து 26 ஆயிரத்து 99 வாக்குகள் அதிகமாகும்.
கூட்டணி
கடந்த லோக்சபா தேர்தலின்போது திமுக-காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டன. எனவே, அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு அது வசதியாகிவிட்டது. இம்முறை காங்கிரஸ், திமுக கூட்டணி என்பதால், நெல்லையில், காங்கிரஸ் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிது என கருதப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில், திமுகவே நெல்லையில் களமிறங்க முடிவு செய்துள்ளது.
போராட்டம்
இதனால் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் அப்செட்டில் உள்ளனர். நெல்லை லோக்சபா தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்காமல் திமுக போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு இன்று தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி முழுக்கவுமே இதுபோன்ற மனநிலைதான் உள்ளது. காங்கிரஸ் எளிதாக வெற்றி பெறும் ஒரு தொகுதியை எப்படி விட்டுக்கொடுத்தது என அவர்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள்.
குடிநீர், வேலைவாய்ப்பு
நெல்லை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ராதாபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை தாலுகா பகுதிகளான குட்டம், உவரி, இடையன்குடி உள்ளிட்டவை கடும் குடிநீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளன. நாங்குநேரி தொகுதியிலும் பெரும்பாலும், இதே நிலைதான். அதே போல, கருணாநிதி காலத்தில் அறிவிக்கப்பட்ட நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் மக்கள் ஆளும் கட்சி மீது கோபத்தில் உள்ளனர். இதை சரியாக அறுவடை செய்யும் எண்ணத்தோடு திமுக, நெல்லையில் களமிறங்கியிருக்க கூடும் என்று தெரிகிறது.