ராகுல் காந்தி செய்த தப்பு இதுதான்.. உடனடி தேவை அமித் ஷா போன்ற திட்டமிடல் திறமை!
காங்கிரஸ் கட்சி தோல்வி அடைய என்ன காரணங்கள் உள்ளன
Recommended Video
சென்னை: காங்கிரஸ், பாஜக இரண்டுமே சரிக்கு சரி வாக்குகளை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் முதலுக்கு மோசமாகி விட்டது அதிர்ச்சிதான். ராகுல் இப்படி தோல்வியை என்ன காரணங்கள்?
மீண்டும் ராகுலுக்கு தோல்வி கிடைத்துள்ளது! இன்னமும்கூட அமைப்பு ரீதியாக பலவீனமாக காங்கிரஸ் இருப்பதைத்தான் இது வெளிப்படுத்தி உள்ளது. 6 மாசத்துக்கு முன்னாடி கிடைத்த வெற்றியைக்கூட காங்கிரஸ் கட்சியால் தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் இவை இந்தி மொழி பேசும் மாநிலங்கள்தான்!
இதுஎல்லாவற்றையும் விட, அசோக் கெலாட், கமல்நாத் போன்ற கட்சியின் மூத்த தலைவர்களின் அட்வைஸ்படிதான் எல்லா தேர்தல் வேலைகளும் நடந்தது. ஆனால், அடிமட்டத் தொண்டர்களை பலப்படுத்தவும், கட்சியை தொடர்ந்து வலுப்படுத்தவும் காங்கிரஸ் தவறிவிட்டதாகவே தோன்றுகிறது. இதற்கு என்ன காரணங்களாக இருக்க முடியும்?
சிதம்பரத்தில் மாபெரும் இழுபறிக்குப் பின் வெற்றியை ஈட்டிய திருமாவளவன்!
முதல் காரணம்
ஒன்று, ராகுல் காந்தியின் தலைமை மக்களிடம் (வட இந்தியா குறிப்பாக) எடுபடவில்லை. காரணம், அவர் கடைசி நேரத்தில்தான் ரபேல் விவகாரத்தை கையில் எடுத்து சற்று பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு முன்பு வரை அவர் எந்த தாக்கத்தையும் மக்களிடம் ஏற்படுத்தவில்லை.
இரண்டாவது காரணம்
இரண்டு, ரபேல் விவகாரம் மட்டுமே கட்சிக்கு வெற்றிதேடித் தரும் என்று அவர் போட்ட கணக்கு தப்பாகி விட்டது. மக்களை அதை அதிகம் பாதிக்கவில்லை. ரபேல் விவகாரத்தில் பாஜகவை சிக்க வைக்கும் வகையி்ல உறுதியான நடவடிக்கையையும் ராகுல்காந்தி எடுக்கத் தவறி விட்டார்.
மூன்றாவது காரணம்
மூன்று, வலிமையான கூட்டணி அமையவில்லை. தமிழகத்தில் திமுக அதிரடியாக அமைத்த கூட்டணி போல தேசிய அளவில் ஒரே அணியில் எதிர்க்கட்சிகளை ராகுல் காந்தி திரட்டத் தவறியது பெரிய தவறு. அது நடந்திருந்தால் நிச்சயம் பாஜகவுக்கு இத்தனை பெரிய வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
நான்காவது காரணம்
நான்கு, மோடி போன்ற வலிமையான சக்தி, அமித்ஷா போன்ற வலிமையான திட்டமிடல் சக்திக்கு முன்பு ராகுல் காந்தி மிக மிக சாதாரணமாக தெரிந்திருக்கிறார். மக்கள் ராகுல் காந்தியை ஒரு சக்தியாகவே பார்க்கவில்லை. சோனியா காந்திக்கு இருந்த பவர் ராகுல் காந்தியிடம் இல்லை. ஒரு வேளை பிரியங்கா காந்தியை முன்பே களம் இறக்கி அதிரடி காட்டியிருந்தால் ஒரு வேளை காங்கிரஸ் கூட்டணிக்கு கூடுதல் இடம் கிடைத்திருக்கலாம்.
ஐந்தாவது காரணம்
ஐந்து, காங்கிரஸ் வீசிய அத்தனை எதிர்ப்புகளையும் பாஜக திறம்பட சமாளித்தது. இதுவும் ஒரு காரணம், பாஜக வெல்ல. ராகுல் ஸ்டண்ட் அடித்தால் பதிலுக்கு பாஜகவும் அதிரடி காட்டி ஸ்டண்ட் அடித்தது. பாஜகவின் கடைசி நேர அஸ்திரங்கள், காங்கிரஸை காலி செய்து விட்டன. செளக்கிதார் என்று கிண்டல் அடித்தார் ராகுல். ஆனால்அதையே ஒரு பிரச்சாரமாக்கி மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது பாஜக. இது காங்கிரஸ் எதிர்பாராத ஒன்று.
ஆறாவது காரணம்
ஆறு, குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்யும் நியாய் திட்டத்தை முன்வைத்தாலும், அதை மக்களிடம் முறைப்படி கொண்டு போய் சேர்க்கவில்லை என்று காங்கிரஸ் தொண்டர்களே குற்றஞ்சாட்ட ஆரம்பித்தனர். அப்போதும் இந்த குறை சரி செய்யப்படவில்லை. மக்களுக்கு இந்தத் திட்டம் புரியவில்லை.
ஏழாவது காரணம்
ஏழு, காவலாளி திருடன் என்ற மோடியை நோக்கிய ராகுல் காந்தியின் கோஷமும் வாக்காளர்களை கவரவில்லை. இதன்மூலம் வாக்காளர்களும் எதிர்மறையான விமர்சனங்களை விரும்பவில்லை என்பதையே ராகுலின் தோல்வி எடுத்து காட்டுகிறது.
பொறுமை
அதனால் ஆதி, அந்தம், அடிப்படையில் இருந்து காங்கிரஸ் கட்சியை கட்டமைப்பது அவசியமாகிறது, கட்டாயமாகிறது. அதுவரை எதிர்கட்சி வரிசையில் வேண்டுமானால் உட்கார்ந்து பொறுமை காக்க வேண்டும்!