சென்னையில் மட்டும் ஏன் கொரோனா பாதிப்பு அதிகம் தெரியுமா? எடப்பாடியார் விளக்கம் இதுதான்
சென்னை: சென்னையில் எதற்காக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது என்பது குறித்து ஒரு விளக்கத்தை கொடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
Recommended Video
கொரோனா பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது சென்னையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்பிறகு மாலை 6 மணியளவில் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார் முதல்வர் எடப்பாடியார்.
அப்போது, அவர் கூறியதில், சென்னையில் ஏன் கொரோனா அதிகம் என்பதற்கு கொடுத்த விளக்கம் கவனிக்கத் தக்கதாக இருந்தது. அதைப் பற்றி பாருங்கள்:
ஜூன் மாதமும் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணை.. எடப்பாடியார் அதிரடி
மக்கள் தொகை
சென்னையில் மக்கள் தொகை அதிகம். குறுகலான தெருக்கள் உள்ளன. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவுகிறது. மேலும், பொதுக் கழிப்பறைகளை இங்கு அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவைதான் கொரோனா சென்னையில் அதிகம் பரவ காரணம். தடை செய்யப்பட்ட பகுதிகளில், தினமும், காலையிலும், மாலையிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பொது கழிப்பறைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகிறது.
சென்னையில் நடமாடும் சிகிச்சை
தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நேரடியாக வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நடமாடும் பரிசோதனை வாகனங்கள் அவர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கே செல்கிறது. சென்னை அதிகமான மக்கள் வசிக்கக்கூடிய பகுதி என்பதால் அவர்கள் மருத்துவமனை சென்று மருத்துவ சிகிச்சை பெறுவது என்பது கடினமான விஷயம் என்பதால், நடமாடும் வாகனங்கள் சென்று, அவர்களை பரிசோதனை செய்து, நோய் அறிகுறி இருந்தால் அவர்களை அழைத்து சென்று உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தயார் நிலையில் மருத்துவமனை
சிகிச்சை அளிக்கக் கூடியவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொள்வதற்காக, சென்னை மாநகரத்தில் 4000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நோயை கட்டுப்படுத்துவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்க வேண்டும் என்பதற்காக வைட்டமின் மாத்திரைகள் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. இதையெல்லாம் அருந்துகிற போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் பரவலை தடுக்க முடியும். மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு வருகை தந்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டி உள்ளது. சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 50 பரிசோதனை மையங்களை அமைத்து உள்ளோம். தினமும் 12,000 பேருக்கு பரிசோதனை செய்கிறோம். இதனால்தான், பாதிப்பு அதிகமாக தெரிகிறது.
அச்சம் தேவையில்லை
அதிகம் பேருக்கு பரிசோதனை செய்வதால்தான் நோய் பாதிப்பு அதிகமாக தெரிகிறது. எனவே மக்கள் பயப்பட வேண்டாம். பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை பிற மாநிலங்களை விட மிக அதிகம். அதிகம் பேரை பரிசோதனை செய்வதும் நமது மாநிலம்தான். எனவே யாரும் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.