மருத்துவமனையில் அட்மிட் ஆன அடுத்த சில நாளிலேயே மரணம்.. உயிரிழப்பு அதிகரிப்பின் பகீர் பின்னணி
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளார்கள்.. தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,079 உயர்ந்துள்ளது.
கடந்த இருவாரத்தில் மட்டும் கொரோனாவால் 500க்கும் அதிகமானோர் கொரோனா உயிரிழந்துள்ளனர். இந்த வாரத்தில் மட்டும் சுமார் 300 பேர் இறந்துள்ளார்கள்.
முன்பு சென்னையில் மட்டும் தான் அதிகம் பேர் கொரோனாவால் இறந்தார்கள். இப்போது தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை, விழுப்புரத்தில் உயிரிழப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 3940 பேருக்கு கொரோனா.. 54 பேர் மரணம்.. . மதுரையில் மோசமான பாதிப்பு
சென்னையை சுற்றி அதிகம்
கொரோனாவால் உயிரிழந்த 1,079 பேரில் 809 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டில் 80 பேர், திருவள்ளூரில் 61 பேர், காஞ்சிபுரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 960 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மதுரையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலையில் 9 பேர், விழுப்புரத்தில் 14 பேர், வேலூர், திருச்சி ,தூத்துக்குடியில் 4 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். தமிழகத்தின் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுமார் 270 பேர் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டில் 5 பேர்
இன்று கொரோனாவால் உயிரிழந்த 54 பேரில், 33 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். மதுரையில் 5 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், திருவள்ளூரில் 2 பேரும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவரும், திருநெல்வேலியில் ஒருவரும், திண்டுக்கலில் ஒருவரும், ராணிப்பேட்டைச் சேர்ந்த ஒருவரும், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்த பலரும் 50 வயதை கடந்தவர்கள் ஆவர்.
மூச்சுத்திணறல்
செங்கல்பட்டில் 29 வயது ஆண் எந்த இணை நோய் பாதிப்பும் இல்லாத நிலையில் காய்ச்சல் மற்றும் தலைவலியுடன் தனியார் மருத்துவமனையில் 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. முதல் மூன்று நாள் இருமல் தலைவலி இருந்தது. அடுத்த மூன்று நாள் மூச்சுவிடுவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்ட நிலையில் 28ம் தேதி காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏன் மரணம்
இதேபோல் 58 வயது ஆண் சென்னையில் கடந்த 19ம் தேதி காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 27ம் தேதி உயிரிழந்தார். இவருக்கு எந்த இணை நோயும் இல்லை. இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு உள்ளாகவே உயிரிழந்துள்ளனர். நோய் பாதிப்பு முற்றிய பின் வருவதால் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது,
கொரோனா உதவி எண்கள்
பலரும் நோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்த அடுத்த நிமிடங்களிலேயே மருத்துவமனைக்கு சென்று சேர்ந்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்க முடியும் என்றும், ஆனால் நோய் முற்றிய பிறகே பலரும் மருத்துவமனையில் சேருவதால் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இன்னொரு புறம் தனிமைப்படுத்துதலுக்கு பயந்து பலரும் உண்மையை மறைப்பது விபரீதத்திற்கு காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே காய்ச்சல், சளி அறிகுறி இருந்தால், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் உடனே மாநில உதவி எண்களான 24*7 Control Room: 044-29510400, 044-29510500, 9444340496, 8754448477
District Control Room - 1077. Toll Free Number - 1800 1205 55550 இவற்றிக்கு அழைப்பது சிறப்பு ஆகும். தவல் தெரிவிக்க மறுத்து , தாமதிப்பது உயிரிழப்பை ஏற்படுத்தலாம்.