இப்போது கேட்ட கேள்வியை சசிகலா இருந்தபோதே ஏன் கேட்கவில்லை சிவி.சண்முகம்??
சென்னை: அப்பல்லோவில் இருந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்க்கவும் ஆஞ்சியோ சிகிச்சையும் அளிக்க ஏன் முன்வரவில்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்வியை அவர் அப்பவே கேட்டிருக்கலாமே என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜெயலலிதா மரணம் குறித்து அன்றாடம் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பல்லோ நிர்வாகம் ஜெயலலிதா சிகிச்சை மற்றும் உணவு செலவு ஆகியற்றை ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்தது.
அப்போது ஜெயலலிதாவின் உணவு செலவை கேள்விப்பட்ட அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஒரு நோயாளி, அதிலும் அனுமதிக்கப்பட்ட போது மயக்கத்தில் இருந்தவர், ரூ. 1.17 கோடிக்கு உணவு உண்டதாக கணக்கு காட்டப்பட்டது. இதனால் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் தெறித்தன.
மரணத்தில் மர்மம்
இன்னும் சிலரோ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிஆர் சரஸ்வதி உள்ளிட்டோர் கூறியதன்படி ஜெயலலிதா சாப்பிட்ட இட்லியின் விலை கோடிக்கணக்கா என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுகையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது.
முதல் முறையாக
அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க சசிகலா குடும்பத்தினர் தடுத்து விட்டனர். அது போல் ஆஞ்சியோகிராம் செய்யவும் விடவில்லை. இதை தடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளித்திருந்தால் அவர் இன்று உயிரோடு இருந்திருப்பார் என்று தமிழக அமைச்சர் சிவி சண்முகம் முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
வாய் திறக்காமல்
நியாயமான கேள்விதான்.. ஆனால் இதை இவர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதல்லவா கேட்டிருக்க வேண்டும். அன்று சசிகலா குடும்பத்தினர் மீதான பயத்தாலும் பதவி ஆசையாலும் வாய் திறக்காமல் இருந்துவிட்டு இன்று சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்ததால் இப்போது இது போல் பேசுகிறார்கள் என மக்கள் கருதுகின்றனர்.
சிவி சண்முகம் ஆவேசம்
மேலும் ஓபிஎஸ் தர்மயுத்தம் ஆரம்பித்து சசிகலாவுக்கு எதிராக கருத்தை தெரிவித்த போது போயஸ் தோட்டத்தில் இருந்த சசிகலாவை பார்க்க அமைச்சர்கள் ஒன்று திரண்டனர். அப்போது அங்கு வந்த இதே சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஓபிஎஸ் ஒரு துரோகி என கூறிவிட்டு சின்னம்மா இல்லை, அம்மா என ஆவேசமாக கூறிய சிவி சண்முகம் இது போல் மாற்றி கூறுவது முறையா.
இதையெல்லாம் செய்திருக்கலாம்
எங்கோ கடைக் கோடியில் உள்ள தொண்டர்களுக்கும் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை கொடுத்து அழகுபார்த்த ஜெயலலிதாவின் உயிரை அதிமுக அமைச்சர்கள் நினைத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்பதே மக்களின் நிலைப்பாடு. இவர்கள் நினைத்திருந்தால் தங்களை ஜெயலலிதாவை பார்க்க விட வேண்டும் என கோரி சாலையில் அமர்ந்து தர்ணா செய்திருந்திருக்கலாம், மக்களிடம் முறையிட்டிருக்கலாம், எதிர்க்கட்சியினரை ஒன்று திரட்டியிருக்கலாம், இவ்வளவு ஏன் நீதிமன்றம் கூட சென்றிருக்கலாமே.
எப்படி முடிந்தது
இப்படி எதையும் செய்யாமல் இன்று அடுத்தவர் மீது பழி போடுவது எந்த வகையில் சரியாகும்? ஜெயலலிதா இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கட்சியை வழி நடத்த சரியான ஆள் இல்லை என கூறி அதிமுகவின் பொதுச் செயலாளர் பொறுப்பை தூக்கி சசிகலாவிடம் ஒப்படைத்த இவர்கள் தற்போது சசிகலா இல்லாமல் எப்படி கட்சியையும் ஆட்சியையும் நடத்த முடிகிறது.
வெளிச்சம்
எனவே எல்லாம் சந்தர்ப்பவாதம் என்பதை தவிர வேறென்ன சொல்வது? சசிகலா தலைமையை ஏற்க இருந்த போது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை என்று கூறிய இவர்கள் தற்போது மர்மம் இருக்கிறது என்கின்றனர். அமைச்சர்களையே உள்ளே விடவில்லை என்றால் தமிழக சுகாதார துறை செயலாளரை குறை கூறுவதில் என்ன நியாயம். என்னவோ எல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.