வெளியூரில் முதல்வர்.. திடீரென கட்சி அலுவலகத்திற்கு வந்து ஆலோசித்த ஒபிஎஸ்.. ஏன்? பின்னணி
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் சென்றிருந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் திடீரென துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து ஆலோசனை நடத்தினார்,. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் ஏன் நேற்று கட்சி அலுவலகத்திற்கு வந்தார் என்பது குறித்த காரணங்களும் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கட்சியில் கடந்த சில வாரங்களாக விவாதங்கள் போய்கொண்டிருக்கின்றன. முதல்வர் எடப்பாடியை ஆதரித்து ஒரு பிரிவினரும், ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்து ஒரு பிரிவினரும் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தனர்.
கடந்த 18ம் தேதி சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அவசர உயர்மட்ட ஆலோசனை கூட்டமும் இதனால் நடந்தது. இந்த கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தாக கூறப்படுகிறது.
தடுமாறுகிறதா அதிமுக.. திமுக மீது முதல்வர் ஆவேசம்.. ராஜ்யசபாவில் மத்திய அரசு மீது பாய்ச்சல்.. ஏன்?
அப்போது முக்கிய விவாதம்
இதற்கு இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, இப்போது குழு அமைக்க அவசியம் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. .இந்நிலையில் வருகிற 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டத்தை கூட்டி இதுபற்றி விவாதித்து முடிவு எடுக்கலாம் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.
ராமநாதபுரத்தில் கூட்டம்
இதற்கிடையே கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆலோசனை நடத்தி வருகிறார். அத்துடன் த மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகளையும் சந்தித்து பேசி ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில்தான் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு பணிகளை சென்றுள்ளார். இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். இரவு மதுரையில் தங்கிய முதல்வர், இன்று கார் மூலம் ராமநாதபுரம் செல்கிறார். இன்று ராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. மாறாக சென்னையிலேயே தங்கி உள்ளார்.
திடீரென வந்து ஆலோசனை
இதனிடையே நேற்று மாலை 6.30 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் செம்மலை எம்எல்ஏ மட்டும் வந்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் கட்சி அலுவலக நிர்வாகிகளுடன் அவர் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர், கட்சி பணிகள் குறித்தும், கட்சி தலைமைக்கு வந்துள்ள புகார் கடிதங்கள் குறித்தும் படித்து தெரிந்து கொண்டதாக கூறப்படகிறது. அங்கிருந்தபடியே சில மாவட்ட நிர்வாகிகளுக்கு தொலைபேசி மூலம் பேசி கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார் என்றும் கூறப்படுகிறது. இரவு 8 மணி வரை கட்சி அலுவலகத்தில் இருந்த ஓ பன்னீர்செல்வம் அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
வாரம் 2 முறை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இல்லாத நேரததில் திடீரென துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, "அதிமுக அவசர ஆலோசனை கூட்டம் கடந்த 18ம் தேதி நடந்தது. அப்போது, வாரம் 2 முறை கட்சி அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளின் கருத்துக்கள் மற்றும் குறைகள், பிரச்னைகள் குறித்து கேட்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தார். அதன் அடிப்படையில் அவர் கட்சி அலுவலகத்துக்கு வந்து சென்றார்
ஆலோசனை நடத்த வந்தார்
மேலும், வருகிற 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் 250 முதல் 300 பேர் வரை கலந்து கொள்வார்கள். குறிப்பாக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு கடிதம் அனுப்புவது மற்றும் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்த ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்துக்கு வந்தார் என்று கூறினார்.