ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லாமல் விஜய் மெளனம் காப்பது ஏன்?
அரசை விமர்சிக்கும் ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை வழங்காமல் இருக்கிறார்.
Recommended Video
சென்னை: இலவச பொருட்கள் வழங்குவதை தொடர்ந்து கேலி, கிண்டல்களும் செய்து வரும் தனது ரசிகர்களிடம் விஜய் ஏன் மவுனத்தையே கடைபிடித்து வருகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
விடலை பருவத்தில் தந்தையின் கையை பிடித்து உள்ளே நுழைந்தவர்தான் விஜய்! வந்தது என்னவோ தந்தையின் தயவால்தான். ஆனால் திறமை இருந்தால்தான் தமிழ் மக்கள் அடையாளமும், அங்கீகாரத்தையும் தருவார்கள். அதனை உணர்ந்த விஜய், தன் அசராத உழைப்பு, அர்ப்பணிப்பு, மிகையில்லாத நடிப்பு காரணமாக உச்ச நிலைக்கு வந்துள்ளார்.
அரசியல் நெடி
விஜய் நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே அரசியல் கணக்கை போட்டவர்தான் எஸ்.ஏ.சந்திரசேகர்!! ஆனாலும் சூழல் கைகூடி வரவில்லை. தற்போது ஜெயலலிதா, கருணாநிதி மறைவு நிறைய மாற்றத்தை உண்டு பண்ணி வருகிறது. குறிப்பாக சர்க்கார் படத்துக்கு பிறகு அரசியல் நெடி தூக்கலாகவே இருக்கிறது.
தொடர்ந்து விமர்சனம்
சர்க்கார் பட விவகாரத்தில் அதிமுக அரசு நுழைய, விஜய்யின் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் வெட்டப்பட, அதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகள் பல்வேறு மாவட்டங்களிலும், இணையத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது. அதிலும் விஜய் ரசிகர்கள் இலவசப் பொருட்களை தொடர்ந்து விமர்சித்து வருவது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
யதார்த்த பேச்சு
இதிலிருந்து இரண்டு விஷயம் புலப்படுகிறது. ஒன்று, விஜய் போலவே விஜய் ரசிகர்களும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இளைய தளபதி என்ற பெயர் இருந்தாலும், "தளபதி" என்ற சொல்லுக்கு ஏற்ற கம்பீரமான, முகத்தோற்றமோ, அல்லது புயலென தெறிக்கும் அனல் கக்கும் வார்த்தைகளோ இவரிடமிருந்து ஒருகாலும் வெளிப்பட்டதில்லை. சாந்தமான முகம்.. யதார்த்தமான பேச்சுக்கள்தான் விஜய்யின் இயல்பு.
விஜய் விரும்ப மாட்டார்
ஆனால் அவரது ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் இருந்து பார்க்கும்போது, நேர் மாறாக இருக்கிறார்கள். ஒருசிலர் வன்முறை கொப்புளிக்கும் வார்த்தைகளை உபயோகிக்கவும் செய்தனர். யதார்த்தம் என்னவென்றால், ரசிகர்களின் இந்த ஆவேசமாக பேசுவதை விஜய்யே விரும்ப மாட்டார் என்பதுதான்.
கட்டுப்படுத்தலாமே?
மற்றொன்று, விஜய்க்காக தங்கள் இன்னுயிரை கொடுக்க எத்தனையோ ஆயிரம் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த அளவுக்கு விஜய் மீது பாசம், வெறி, அன்பு, ஈர்ப்பு, கவர்ச்சி என அனைத்துமே கலந்து கிடக்கிறது. ஆனால் ரசிகர்கள் தன் மேல் உள்ள அதீத பாசத்தால் வெறுப்பை உமிழ்ந்து தகாத வார்த்தைகளை பேசுவதை விஜய் இதுவரை கண்டிக்காதது ஏன் என்று தெரியவில்லை. நாளை அரசியலுக்கு ஒருவேளை வந்தால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன் என்று சொன்ன விஜய், முதலில் ஒரு நடிகராக இருந்து தன் ரசிகர்களை கட்டுப்படுத்த தவறியது ஏனோ? என்றும் புரியவில்லை.
கர்சீப் முகம்
விஜய்யின் முகத்தை ஒரு கணம் பார்த்துவிட மாட்டோமா என ஏங்கும் ரசிகர்கள் மத்தியில், அனிதா வீட்டுக்கு ஒரு அண்ணனாக ஆறுதல் சொல்ல போனார் விஜய். தூத்துக்குடியில் மக்கள் எழுச்சி போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல பைக்கில் சென்று வந்தார் விஜய். இந்த இடங்கள் எல்லாம் விஜய் முகத்தை கர்சீப்பை கட்டிக் கொண்டு ஆரவாரமின்றி, ஆர்ப்பாட்டமின்றி, களேபரமின்றி தன் இருப்பையும் தன்மான உணர்வினையும் தொடர்ந்து பதிவு வருவதைதான் காட்டியது. அவர் அனைத்து இடங்களுமே இருளில்தான் சென்று வந்தார்.
நல்லியல்புகள்
இப்படி விஜய், தன்னுடைய நல்லியல்புகள் மூலம், தமிழன் என்கிற உணர்வினையும், மனிதன் என்கிற மனிதாபிமானங்களையும் தக்க சமயத்தில் உரியவர்களிடம் கொண்டு சேர்த்து அவர்களின் இல்லங்களிலும்-மனங்களிலும் என்றுமே வாழ்ந்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இன்றைய ரசிகர்களின் ஆவேசத்தை கட்டுப்படுத்துவதும் இன்றியமையாத ஒன்றுதானே?
ஒத்த வார்த்தை போதுமே
பொறுமையை கையாண்டு, வார்த்தைகளை அடக்கி, விமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவத்தை ரசிகர்களுக்கு ஊட்டுவதும் விஜய்யின் கடமையினுள் ஒன்றாகதானே இருக்க முடியும்? இன்றைய ரசிகர்கள் அனைவருமே நாளைய தொண்டர்களாகி விட்டால், அப்போது தமிழகத்தின் நிலை என்னாகும்? ரசிகர்களின் கோபத்தையும், வன்மத்தையும், ஆத்திரத்தையும் கன நொடியில் தூக்கி எறிய விஜய்யின் ஒத்த வார்த்தை போதுமே... அடுத்த கணம் கட்டுண்டு விழுந்துவிடுவார்களே அத்துணை பேரும்... விஜய் செய்வாரா?