புயல் பாதித்த மக்களை முதல்வர் இன்னும் சந்திக்காமல் இருப்பது ஏன்?.. படையெடுக்கும் கேள்விகள்!
புயலில் பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் சந்திக்காதது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் ஏன் இன்னும் சந்திக்க செல்லவில்லை என்ற கேள்வி தற்போது பலமாக எழுந்து வருகிறது.
கஜா புயல் வரப்போகிறது என்று தெரிந்தவுடனும், கஜா புயல் வந்த அன்றும் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைககளை எடுத்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கதுதான். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இன்னும் பல உயிர்கள் கஜாவுக்கு பலியாகி இருக்கும் என்பதும் வாஸ்தவம்தான்.
ஆனால் கஜா போன வேகத்தோடு அரசின் செயல்பாடும் கூடவே சேர்ந்து கஜா காற்றோடு போய்விட்டதோ என சந்தேகமாக உள்ளது. ஏனெனில் நிறைய மாவட்டங்களில் இயல்பு நிலை இன்னும் திரும்பவே இல்லை. திரும்பவும் நாளாகும் என்று சொல்லப்படுகிறது.
இயல்பு நிலை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழந்ததை திருப்பி தர முடியாவிட்டாலும், அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தருவது என்பது அடிப்படை மனிதாபிமானம் அல்லவா? அரசின் தார்மீன கடமை அல்லவா? புயல் அடித்து 3 நாள் ஆகிறது. ஆனால் எந்த மாவட்டத்தையாது எந்த அமைச்சராவது சீர்செய்து பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்களா? அவ்வளவு எதற்கு, பசி... தாகம்... என்று கேட்டுக் கொண்டே இருக்கும் குரல்களுக்கு யாராவது பதில் அளித்தார்களா?
கூக்குரல்கள்
எந்த மாவட்டத்தை எடுத்து கொண்டாலும் நாங்கள் சாப்பிட்டு, நாளாகிறது, தண்ணி இல்லை... குழந்தைகளுக்கு காய்ச்சல்.. பால் இல்லை.. கரண்ட் இல்லை.. என்ற கூக்குரல்கள் கேட்டு கொண்டே இருக்கிறது. தமிழக அமைச்சர்கள் இப்படியெல்லாம் மக்களை புலம்ப விடலாமா? இந்நேரம் முதல்வர் முதல் ஆளாக களத்தில் இறங்கியிருக்க வேண்டாமா? ஆனால் ஏன் முதல்வர் தாமதப்படுத்துகிறார்? என தெரியவில்லை. எனவே இது சம்பந்தமான கேள்விகள் சமூகவலைதளத்தில் எழுந்து வருகிறது.
கேள்விகள் எழுகின்றன
"கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செல்லாதது ஏன்? மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்ற அச்சமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதை விட வேறு என்ன முக்கியப் பணி அவருக்கு?"
|
கோபத்தை காட்டினர்
அதேபோல, பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் விட்டுவிட்டு, தாமதமாக வந்து ஆறுதல் சொன்ன அமைச்சர் ஓ.எஸ். மணியனையும் ட்விட்டர்வாசிகள் விட்டு வைக்கவில்லை. வந்த அமைச்சரை முற்றுகையிட்டு கோபத்தை காட்டி உள்ளனர்.
|
நிவாரண பணிகள்
"அமைச்சர் ஓ.எஸ். மணியனை பொதுமக்கள் முற்றுகை. வாகனங்கள் மீது தாக்குதல்: செய்தி - கஜா புயலால் பாதிக்கப்பட்டு உதவிகள் கிடைக்காததால் மக்கள் எந்த அளவுக்கு கோபத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்!"
இது ஒரு இயற்கை சீற்றம்
இப்படி கண்டன கேள்விகள் இணையத்தில் எழுந்து வருகிறது. முதலில் இந்த சம்பவம் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் போல் கிடையாது. ஏனெனில் இந்த விஷயத்தில் முதல்வர் மீது மக்களுக்கு கோபம் எழ வாய்ப்பே இல்லை. இது ஒரு இயற்கை சீற்றம். இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாதுதான்.
அரசுக்கு இழுக்கு
ஆனால் பாதிக்கப்பட்டவர்களை கை தூக்கி விடாமல் இருந்தால் அதுதான் தவறாக எழுந்துவிடுகிறது. அதுதான் விமர்சனமாக பகிரங்கப்பட்டு விடுகிறது. நிர்க்கதியானவர்களுக்கு உடனடியாக கிடைப்பதுதானே உதவி? நாட்களையும் நேரங்களையும் கடத்த கடத்த, அது அரசுக்கு மேலும் இழுக்கைதான் கொண்டு வந்து சேர்க்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.
வடுவாக பதிந்துவிடும்
பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காமலும், கண்டுக்காமலும், கவனிக்காமலும் இருப்பது தங்களுக்கு எவ்வளவு பெரிய சறுக்கலை தரும் என்றுகூடவா முதல்வரும், அமைச்சர்களும் தெரிந்து கொள்ளாமல் உள்ளனர். இப்படி அரசின் ஒரு பாராமுகம் அடுத்தடுத்து வரும் காலங்களில் வடுவாக மக்கள் பதிந்து விடாமல் பார்த்துகொள்வது அரசின் கையில்தான் உள்ளது!!