ஏன் குருமூர்த்தி அப்படி பேசினார்.. எடப்பாடியார் மறுக்க காரணம் என்ன.. இடையில் நடந்த ட்விட்ஸ்ட்!
சென்னை: அதிமுகவில் சசிகலா இணைய வேண்டும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் குருமூர்த்தி பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு இன்று விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா இணைய 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.
ஏன் குருமூர்த்தி அப்படி பேச வேண்டும். இடையில் இவ்வளவு நாள் அமைதியாக முதல்வர் ஏன் இருந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியை சந்தித்த பின்னரே சசிகலா குறித்த விவகாரத்திற்கு முதல்வர் எடப்பாடியார் விளக்கம் கொடுத்தது ஏன் என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
தமிழக அரசியல் அரங்கில் குருமூர்த்தியின் பேச்சுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழ காரணம், ஜேபி நட்டா முன்னிலையில் அவர் பேசியது தான்.
சசிகலா இணைய வேண்டும்
என்ன பேசினார் குருமூர்த்தி: துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி, வீடு தீப்பற்றி எரியும் போது, அதை கங்கை நீர் கொண்டு வந்துதான் அணைக்க வேண்டும் என்று காத்திருக்காமல் சாக்கடை நீரை கொண்டு சுத்தம் செய்யலாம் என்றார். அதாவது திமுகவால் ஆட்சியை பறிகொடுக்கும் ஆபத்தில் அதிமுக உள்ளதாகவும், அதை தடுக்க சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அவர் தனது பேச்சில் சாக்கடை என்று கூறியது ஒருபுறம் சர்ச்சை என்றால் மறுபுறம் அதிமுக அமமுக இணைகிறதா என்ற சந்தேகமும் எழுந்தது.
யாரும் பதில் இல்லை
சந்தேகம் ஏன் எழுந்தது என்றால், அதிமுகவில் பெரிய அளவில் குருமூர்த்தியின் பேச்சுக்கு பதில்கள் வரவில்லை. ஏன் டிடிவி தினகரன் கூட உடனடியாக பதில் அளிக்கவில்லை. அதேநேரம் அமமுக குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பின்னரே பதிலடி கொடுத்தார். அதிமுகவில் குருமூர்த்தியின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே பதிலளித்தார். முதல்வரோ துணை முதல்வரோ பதில் அளிக்காததால் ஊகத்தில் பல செய்திகள் பரவின.
ஓபிஎஸ் பேசிய பேச்சு
ஊகத்திற்கு வலு சேர்த்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேச்சு. சென்னையில் உள்ள அதிமுக தலைமைஅலுவலகத்தில் அம்மா பேரவை செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டததில், அதிமுகவில் உள்ள அண்ணன் தம்பி பிரச்சனையை மக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம், வெற்றி மட்டுமே நமது இலக்கு என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் கூறினார். இதன் மூலம் சசிகலா வருகைக்கும் அமமுக இணைப்புக்கும் பச்சைக்கொடியை ஓபிஎஸ் காட்டிவிட்டதா பல்வேறு ஊகங்களில் செய்திகள் பரவின.
சசிகலாவுக்கு வாய்பே இல்லை
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று மாலை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான நிதி மற்றும் அரசியல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இன்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், சசிகலா அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்றார். அவர் அதிமுகவின் உறுப்பினரே கிடையாது. அமமுகவில் இருந்த எல்லோரும் இணைந்து விட்டனர். இப்போது டிடிவி தினகரன் தனிமரமாக உள்ளார் என்றார் காட்டமாக...
ஏன் சொல்லவில்லை
இதன் மூலம் சசிகலா அதிமுகவில் இணைவது குறித்தும், அமமுக அதிமுகவில் இணைவது குறித்தும் பரவிய வதந்திகள், ஊகங்கள் அனைத்திற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஒரே பதிலில் கட்சியினரையும் வாயடைக்க வைத்துள்ளார். எனினும் இந்த பதிலை குருமூர்த்தி பேசிய போதே சொல்லவில்லை. அதேபோல் ஊகங்கள் கிளம்பிய போதும் சொல்லவில்லை.
சிக்கல் வரக்கூடாது
ஆனால் பிரதமர் மோடி மற்றும உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய பின்னர் தான் முதல்வரிடம் இருந்து வந்துள்ளது. இதுதான் பல்வேறு ஐயங்களை எழுப்பி உள்ளது. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கொடுத்த நம்பிக்கையால் இப்படி பேசினாரா என்பதை அவரே சொன்னால் தான் தெரியும். மொத்தத்தில் சசிகலா வருகையால் தனக்கு சிக்கல் வரக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார் என்பது அவரது பேட்டியில் தெளிவாக தெரிகிறது.