ஆமா, எல். முருகன் எதற்காக விழுந்தடித்து கொண்டு போய் முதல்வரை சந்திக்கணும்?
பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்
சென்னை: "அதிமுக தனித்து போட்டி என்று ஓஎஸ் மணியன் சொன்னதுமே, எல்.முருகன் எதற்காக விழுந்தடித்து கொண்டு முதல்வரை சந்தித்து பேச வேண்டும்? "கண்ணு மாறாமல் இருந்தால் காட்சிகள் மாறாது.. கண்ணுக்கு காமாலை ஏற்பட்டால் கட்சிகளின் காட்சிகள் மாறும்" என்று ஓஎஸ் மணியன் சொன்னதற்கு காரணமே பாஜக தலைவர்களின் மாறுபட்ட கருத்துக்களால்தான்" என்ற பரவலான பேச்சு அரசியல் களத்தில் எழுந்து வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.. இருபெரும் திராவிட கட்சிகள் கூட்டணி கட்சிகளை இணைத்து ஒவ்வொரு முறையும் களம் காணுவது இயல்பான விஷயம்தான்.. அந்த வகையில், அதற்கான வேலைகளில் இந்த கட்சிகள் இறங்கி இருக்கின்றன.. மேலும், தங்கள் கட்சியை பலப்படுத்தும் வேலைகளிலும் மும்முரமாக இறங்கி வருகின்றன.
இப்போதைக்கு அதிமுகவில் கூட்டணியில் உள்ளது பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள்.. சென்ற முறை கூட்டணியில் பாமகவை உள்ளே கொண்டு வந்து சீட்களை அள்ளி தந்து அணைத்து கொண்டது அதிமுக.. இந்த முறை அதற்கான வேலைகளில் இன்னும் இறங்கவில்லை போல் தெரிகிறது.
வேட்டியை மடிச்சு கட்டி வயலில் நாற்று நட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி... இது வேற லெவல் அரசியல்
தேமுதிமுக
அதேபோல, கடந்த தேர்தலில் தேமுதிக கடைசியாக வந்து கூட்டணியில் இணைந்த கட்சி.. இப்போது அவர்கள் தனித்து போட்டி என்று சொல்லி இருக்கிறார்கள்.. ஆனால், அதை பற்றி மறுபடியும் பேச்செடுக்கவில்லை. விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லாமல் இருப்பதால், தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வு பற்றி வெளிப்படையாக தெரியவில்லை.
கூட்டணி
இதில் ரெம்பவும் ஆர்வமாக இருப்பது பாஜகதான்.. அதிமுக-பாஜக தலைவர்களின் சந்திப்புகள், பேட்டிகளும் குழப்பத்தை தந்தபடியே இருக்கின்றன.. ஆனால், இவர்கள் கூட்டணி தொடருமா, தொடராதா? எதிர்பார்த்த சீட் அதிமுக ஒதுக்குமா? என்பது பற்றியெல்லாம் சில அரசியல் நோக்கர்களிடம் கேட்டோம். அவர்கள் சொன்ன உத்தேச கருத்து இதுதான்:
கோரிக்கை
பாஜகவை பொறுத்தவரை தனியாக நின்று தேர்தலை சந்திக்க முடியாது.. திராவிட கட்சிகள் உதவி இல்லாமல், தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என்று அந்த கட்சி நன்றாகவே உணர்ந்திருக்கிறது.. அதனால்தான், கூட்டணி வைக்க முயன்று வருகிறது.. ஆனால், எதிர்பார்த்த சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், முருகன் 60 சீட் கேட்டார்.. இந்த கோரிக்கையை நேரடியாகவே வைத்திருக்கலாம்.. கோட்டையில் காவி கொடி மலரும் என்று சொல்லி அதிமுக தரப்பை ஏன் உசுப்பேத்த வேண்டும்?
வானதி சீனிவாசன்
இருமொழி கொள்கைக்கு ஆதரவான விஷயத்திலேயே அந்த கட்சிகளுக்குள் கொஞ்சம் முரண்பாடுதான்.. ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் அப்படி ஒரு பேட்டியை தந்ததுதான் இவர்களுக்கு கடுப்பேற்றி இருக்கும்.. அதிமுகவிலேயே கூட்டணி தொடரும் என்றால் திமுக என்ற வார்த்தையை அவர் ஏன் இழுக்க வேண்டும், பிறகு ஏன் பின்வாங்க வேண்டும்? அதனால்தான் ஆளாளுக்கு கருத்து சொல்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் ஒரு வார்த்தையை குறிப்பிட்டார்.. அப்போதும் இந்த வீரியம் குறையவில்லை.. வானதி சீனிவாசனின் பேச்சு இன்னும் அதிமுகவை அதிருப்திக்கு உள்ளாக்கிவிட்டது.. முதல்வர் வேட்பாளர் யார் என்று பாஜக தலைமை எப்படி முடிவு செய்ய முடியும்?
ஓஎஸ் மணியன்
அதனால்தான், பாஜகவின் மறைமுக இந்த மிரட்டல் போக்குக்கு அமைச்சர் ஓஎஸ் மணியன் பதிலடி தந்திருக்கிறார்.. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று சொன்னதுமே, முருகன் ஏன் முதல்வரை சந்திக்க சென்றார்? வேளாண் சட்டங்களை வரவேற்கவும், கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய, கருப்பர் கூட்டம் பின்னணியில் உள்ளவர் மீது, நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துவதை சொல்வதற்காகத்தான் முதல்வரை சந்திக்க வந்தேன் என்கிறார்.
திடீர் சந்திப்பு
வேளாண் சட்டம் இயற்றப்பட்டு இத்தனை நாள் ஆகிறதே? கருப்பர் கூட்டம் விவகாரம் வெடித்து மாசக்கணக்கில் ஆகிறதே? அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக முதல்வர் வேட்பாளரா? அல்லது அதிமுக கூட்டணி வேட்பாளரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் ஏன் பதில் சொல்ல மறுத்துவிட்டார்? இப்படி பல சந்தேகங்கள் எழுகின்றது.. பாஜகவை அதிமுக பணிய வைக்கிறா? அல்லது அதிமுகவை பாஜக பணிய வைக்கிறதா என்று தெரியவில்லை.. ஆனால், பாஜக எதிர்பார்த்த அளவுக்கு சீட் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
ஆளுமை
இதுக்கு காரணம், கட்சிக்குள் தனக்கான செல்வாக்கை உயர்த்திவிட்டார் எடப்பாடியார்.. வரப்போகிற தேர்தலில் தன் ஆளுமையை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்திலும் அவர் உள்ளார்.. அதேசமயம் ஓஎஸ் மணியன் சொல்வது போல 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்பது, சற்று சந்தேகம்தான்.. பலம் பொருந்தி வரும் திமுகவை வீழ்த்த கூட்டணி என்பது நிச்சயம் அதிமுகவுக்கு தேவைதான்.. குறிப்பாக, இந்த முறையும் பாமகவை உள்ளே இழுத்து கொண்டு வந்துவிடுவது அதிமுகவுக்கு பிளஸ்.
யோசனை
ஆனால், பாஜகவுடன் மறுபடியும் கூட்டணி வைத்தால் மக்களின் அதிருப்தியை அறுவடை செய்ய வேண்டி வருமே என்ற யோசனையும் அந்த கட்சிக்கு இல்லாமல் இல்லை.இப்போதைக்கு அதிமுகவின் முழு கவனம், மக்களின் செல்வாக்கை மேலும் தக்க வைத்து கொள்வதிலேயே இருப்பதாக தெரிகிறது.. மேலும் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தி, கட்சியை பலப்படுத்தும் முயற்சியிலும் இறங்கி வருவதால், பாஜக கூட்ணி பற்றி இப்போதைக்கு யோசிக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை.. ஆனால், இனி பாஜக தலைவர்களின் பேச்சு சற்று அடக்கத்துடனேயே இருக்கும்" என்றனர்.