நீங்களே ஏதாவது கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.. செய்தியாளர்களை சந்திக்காதது குறித்து விஜயபாஸ்கர்!
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். இத்தனை நாட்களாக சந்திக்காதது ஏன் என்பது குறித்த கேள்விக்கும் இன்று விளக்கம் அளித்தார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 15ம் தேதி நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேசும் உடன் இருந்தார். வழக்கமாக கடந்த சில நாட்களாகவே பீலா ராஜேஷ் தான் கொரோனா பாதிப்பு குறித்தும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்து வந்தார்.
ஆனால் இன்று அந்த வழக்கம் மாறி இருந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். அவர் அருகில் பீலா ராஜேஷ் நின்று கொண்டிருந்தார். விஜய பாஸ்கர் தனது பேட்டியில், தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த நீண்ட விளக்கம் அளித்ததுடன், தமிழகத்தில அதிகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். முதல்வரின் ஆலோசனைகள் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.
தமிழகத்தில் மருந்து கையிருப்பு, சோனை செய்யும் திறன், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பதையும் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசினார். அப்போது செய்தியாளர்கள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 15 நாட்களாக செய்தியாளர்களை சந்திக்கவில்லையே ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 1242 ஆக உயர்வு.. விஜயபாஸ்கர் விளக்கம்
அதற்கு பதில் அளித்த அவர், நான் நேற்று கூட செய்தியாளர்களை சந்தித்தேன். புள்ளி விவரங்களை முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் செயலாளர் தெரிவித்து வருகிறார். அமைச்சர் என்ற முறையில பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அதனால் தான் வரவில்லையே தவிர நீங்கள் வேறு எதுவும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்" என்றார்.