ஓரங்கட்டப்படுகிறாரா ஓ.பி.எஸ். மகன்... பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு மறுப்பு..?
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பிரதமருடனான முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் எம்.பி. பங்கேற்றது அக்கட்சியின் உள்வட்டாரத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
தேனி தொகுதி எம்.பியும், துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுமான ரவீந்தரநாத் குமார் தான் பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என அக்கட்சியினர் எதிர்பார்த்தனர்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நவநீதகிருஷ்ணனை பங்கேற்க வைத்து இந்த முறையும் எதிர்பார்ப்புகளையும், கணிப்புகளையும் பொய்யாக்கி உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முக்கிய கூட்டம்
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், அது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் பற்றி நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கும் மேல் உள்ள கட்சிகளில் இருந்து ஒருவர் கலந்துகொண்டனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுக சார்பில் டி ஆர் பாலுவும், அதிமுக சார்பில் நவநீத கிருஷ்ணனும் பங்கேற்றனர்.
பியூட்டிஃபுல் காஷ்மீர்
அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நவநீதகிருஷ்ணனை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் நாடாளுமன்றத்தில் காஷ்மீர்.. பியூட்டிஃபுல் காஷ்மீர்.. என்ற பாடலை பாடியோடு தனக்கே உரித்தான பாணியில் ஸ்போக்கன் இங்கிலீஷில் பேசி அவ்வப்போது அவையில் சிரிப்பொலிகளை ஏற்படுத்துவார். சார்.. திஸ் வாஸ் சார்.. ஐ சார்.. என அவர் பேசும் அழகும், உடல்மொழியும் தனி ரகமாகத்தான் இருக்கும்.
பதவியேற்கவில்லை
பொதுவாக பிரதமருடனான ஆலோசனைக் கூட்டம் போன்ற முக்கிய அலுவல் சார்ந்த விவகாரங்களில் அதிமுக சார்பில் தம்பிதுரை தான் பங்கேற்பார். இப்போது அவர் ராஜ்யசபா உறுப்பினராக ஆகியிருந்தாலும் கூட இன்னும் அவர் மாநிலங்களவையில் பதவியேற்றுக்கொள்ள வில்லை. கொரோனா பதற்றம் தணிந்த பின்னரே அவர் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பி.க்களும் பதவியேற்க முடியும். இதனால் பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வரின் மகனும், தேனி எம்.பியுமான ரவீந்தரநாத் தான் கலந்துகொள்வார் என நேற்று முன் தினம் மாலை வரை கூறப்பட்டது.
திடீர் ட்விஸ்ட்
இந்நிலையில் ஜெயலலிதா பாணியில் திடீர் டிவிஸ்ட் ஒன்றை செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நவநீதகிருஷ்ணன் எம்.பி.யை அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வைத்து பேச வேண்டிய விவகாரம் என்னவென்பது பற்றியும் குறிப்பு அனுப்பியுள்ளார். அதன்படி உற்சாகமாக கலந்துகொண்ட நவநீதிகிருஷ்ணன், முதல்வர் தரப்பில் அனுப்பப்பட்ட குறிப்பை அப்படியே பிரதமரிடம் வலியுறுத்தினார். இதனிடையே ரவீந்தரநாத் எம்.பி.க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் எடப்பாடி தரப்பு மீது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.