திட்டமிடப்பட்டு செருப்பு வீச்சு! நேராக பிடிஆர் வீட்டுக்கே போன சரவணன்! 12 மணி நேரத்தில் நடந்தது என்ன?
மதுரை: பிற்பகல் 12 மணிக்கு நேற்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட நிலையில் இரவு 12 மணிக்கு பாஜக நிர்வாகி சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
Recommended Video
மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கத்தின் போது நடைபெற்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவினர் அத்துமீறி நடந்து கொண்ட காரணத்தால் ஒரு ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம் பற்றிய செய்திகள் அடங்கி போய்.. அமைச்சர் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தற்போது தலைப்பு செய்தி ஆகி உள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்தார். இரண்டு நாட்களுக்கு முன் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் லட்சுமணன் வீர மரணம் அடைந்தார்.
இவரின் உடல்தான் நேற்று (சனிக்கிழமை) அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
பிண அரசியல் செய்பவர்கள் பற்றி பேச விரும்பவில்லை.. காலணி வீசிய பாஜகவினரை கடுமையாக தாக்கிய பிடிஆர்
ஏர்போர்ட் மோதல்
நேற்று காலை அவரின் உடல் டெல்லியில் இருந்து ஹைதராபாத் வழியாக மதுரைக்கு வந்தது. பின்னர் அவரின் உடல் டி புதுப்பட்டி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் உடலுக்கு இன்று அரசு மரியாதையை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்விற்கு வந்த நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் வந்து இருந்தனர். இதற்காக பிடிஆர் ஏர்போர்ட் வந்த போதுதான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மோதல்
இதில் பாஜக உறுப்பினரும், திமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவுமான சரவணன், பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்க காத்து இருந்தார். அதோடு அங்கு வரும் லட்சுமணன் உடலுக்கு விமான நிலையத்திலேயே மரியாதை செலுத்தவும் திட்டமிட்டு இருந்தனர். இதை பார்த்த பிடிஆர் பாஜகவினர் ஏன் இங்கே இருக்கிறார்கள். உடலை இங்கு பார்க்க கூடாது. இது புரோட்டோகால் கிடையாது. இங்கே நிற்க இவர்களுக்கு தகுதி இல்லையே என்று கூறி உள்ளார். இதனால் பாஜகவினர் அங்கே கோவம் அடைந்த நிலையில், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி உள்ளனர்.
உண்மையான மோதல்
இதன்பின் அரசு மரியாதை செலுத்தும் போது பாஜகவினர் உள்ளே புகுந்து முன்னாள் நிற்க முயன்று உள்ளனர். அப்போது இது அரசு மரியாதையை செலுத்தும் இடம். கட்சிக்காரர்களுக்கு இடமில்லை என்று அங்கிருந்த போலீசார் கூறி உள்ளனர். இதனால் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் காக்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்பின் பிடிஆர் அங்கே அஞ்சலி செலுத்தினார். இதை பார்த்து அண்ணாமலையை பிடிஆர் வேண்டுமென்றே காக்க வைத்ததாக பாஜகவினர் கோபம் அடைந்துள்ளனர்.
வெளியே தாக்குதல்
இதையடுத்தே வெளியே வந்த பிடிஆரை அவரின் அலுவலகம் செல்லும் வழியில் மறைத்து தாக்கி உள்ளனர். இதையும் கூட அவர்கள் திட்டமிட்டு செய்தது வீடியோ மூலம் உறுதியாகி உள்ளது. பாஜக நிர்வாகி ஒருவர்.. நீ இங்கே நின்று வீசி ஏறி.. நாம் வேன் மீது ஏறி நின்று வீசினால் நன்றாக இருக்கும் என்று கூறும் காட்சிகள் பதிவாகி உள்ளன. அதோடு பிடிஆர் வந்த சமயத்தில் திட்டமிட்டு அவரின் காரை நிறுத்தி மறைத்து உள்ளனர். பின்னர் சூழ்நிலை பார்த்து அவரின் காரில் செருப்பை பெண் ஒருவர் வீசி உள்ளார்.
பிடிஆர் வீட்டிற்கு போனார்
இதையடுத்து பிடிஆர் நேராக தனது அலுவலகம் சென்று பின்னர் வீட்டிற்கு சென்றார். இதை திமுகவினர் கடுமையாக கண்டித்தனர். பாஜக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். இவர்களை சட்டப்படி விசாரிக்க வேண்டும். பின்னால் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். திமுகவினரை இந்த சம்பவம் கொதிப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சனையாது. பிடிஆர் தேசிய அளவில் பிரபலம் என்பதால் தேசிய டிரெண்டிங்கில் இந்த விவகாரம் இடம் பிடித்தது.
கைது - நீதிமன்ற காவல்
இதையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சியை சேர்ந்த கோபிநாத், ஜெயகிருஷ்ணா, முகமது யாகூப் மற்றும் பாலா, மார்க்கெட் குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதில் செருப்பு வீசிய பெண் மட்டும் தலைமறைவாகிவிட்டார். மஞ்சள், காவி புடவை அணிந்த அந்த பெண் பிடிஆரை கொச்சை வார்த்தையிலும் திட்டி இருக்கிறார். இதனால் போலீசார் அவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை விளக்கம்
இந்த விவகாரம் கையை மீறி போனதால் அண்ணாமலை வேறு வழியின்றி விளக்கமும் கொடுத்தார். அதில், நான் வன்முறையை ஆதரிக்க மாட்டேன். நம்முடைய கட்சி வன்முறையை ஆதரிக்கும் கட்சி அல்ல. அதற்காக நாம் கட்சி நடத்தவில்லை. வன்முறையை நாம் சொல்லி கொடுக்க போவதில்லை. நமக்கு ஆழமான தேசிய கலாச்சரத்தின் மீது நம்பிக்கை உள்ளது, என்று கூறினார்.
சரவணன் மீது புகார்
இந்த விவகாரத்தில் சரவணன்தான் கூட்டத்தை திரட்டினார். அவர்தான் விமான நிலையத்தில் முதலில் பிடிஆருடன் வாக்குவாதம் செய்தார் என்று புகார்கள் வந்தன. இந்த நிலையில்தான் நிலைமை கைமீறி சென்றதும் சரவணன் நேரடியாக பிடிஆரை சென்று சந்தித்தார். நடந்த விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அதோடு அமைச்சரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். பிடிஆர் இவரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது.
கட்சியில் இருந்து விலகல்
இதையடுத்து வெளியே வந்த சரவணன், பாஜகவின் கொள்கைகள் எனக்கு ஒத்துவராது. பாஜக பிரிவினை அரசியலை செய்கிறது. மன உளைச்சலோடுதான் நான் பாஜகவில் இருந்தேன். அமைச்சர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மன உளைச்சலை ஏற்படுத்தியது. தூக்கம் வரவில்லை. இதனால் அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு தெரிவித்தேன். பாஜகவில் இருந்து விலகுகிறேன், என்று சரவணன் தெரிவித்தார்.