ஒன்னு, ரெண்டை விடுங்க.. 3வது அணிக்கு ஏன் எப்போதும் மக்கள் ஆதரவு இருப்பதில்லை?.. என்னதான் காரணம்!
சென்னை: முதல் இரு கூட்டணிகளுக்கு இருக்கும் மவுசும் ஆதரவும் 3 ஆவது அணிக்கு ஏன் இருப்பதில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான காரணங்களையும் அரசியல் நோக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்துள்ளன.
அது போல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை அல்லாமல் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன.
அமமுக மக்கள் நீதி மய்யம்
இதில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அமமுகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியும் 3ஆவது அணி அமைக்க தீவிரம் காட்டி வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் சார்பில் அமைக்கப்படும் 3ஆவது அணியில் காங்கிரஸ் இணையும் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அக்கட்சி மறுத்துள்ளது. மேலும் 3ஆவது அணியில் நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் கூறுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல்
இந்த சட்டசபை தேர்தல் என்றில்லை, நாடாளுமன்றத் தேர்தல், மற்ற மாநில தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தலிகளில் 3ஆவது அணி மீது நம்பிக்கை இல்லாதது ஏன் என்றும் மற்ற இரு அணிகளுக்கு கிடைக்கும் மவுசு இந்த 3-ஆவது அணிக்கு கிடைக்காதது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நம்பிக்கையை கூட்ட கூடிய விஷயம் எதையும் இந்த அணி செய்யாததே ஆகும்.
திராவிடக் கட்சிகள்
தமிழகத்தை எடுத்துக் கொண்டோமேயானால் திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு எதிராக மாற்று அரசியல் செய்வோம் என்கிறார்கள் 3ஆவது அணியினர். அந்த மாற்று அரசியல் என்னவென்பதை அவர்கள் மக்களிடம் விளக்க வேண்டியது முக்கியமானதாகும். முதல் இரு அணிகளுக்கு வாக்களிக்க விரும்பாத மக்களுக்காகவே 3ஆவது அணி தொடங்கப்படுகிறது. அந்த வகையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆண்டதால் விரக்தியில் உள்ள மக்களுக்கு 3ஆவது மீது நம்பிக்கை ஏற்படும்படியான விஷயங்களை செய்ய வேண்டும்.
வாழ்வாதாரம்
இலவசங்கள் கொடுப்பதற்கு பதிலாக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான நல்ல திட்டங்களை அறிவிக்க வேண்டும். சாலை வசதி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத மக்களுக்கு அவற்றை கிடைக்க என்ன செய்வோம் என்ற திட்டத்தையும் சொல்ல வேண்டும். மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலையை மாற்ற இயந்திரம் கண்டுபிடிப்போம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
ஆட்சிக் காலம்
ஏற்கெனவே ஆண்ட கட்சிகள் செய்த தவறை மீண்டும் செய்யாமல் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனை என அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்தவதில் செயலாற்ற வேண்டும். ஏற்கெனவே ஆண்டவர்கள் கால சூழலுக்கேற்ப பல நல்லத் திட்டங்களை தங்கள் ஆட்சிக் காலத்தில் செய்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.
முதல்வர் வேட்பாளர்
அதே வேளையில் புதிதாக களம் காணும் 3ஆவது அணி ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இரு அணிகளுக்கும் 3ஆவது அணிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வாக்காளர்கள் தரம் பிரித்து பார்க்க வசதியாக இருக்கும். அதைவிட்டுவிட்டு நான்தான் முதல்வர் வேட்பாளர், நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர், என் தலைமையில்தான் கூட்டணி, உங்கள் தலைமையில்தான் கூட்டணி என அடித்துக் கொள்வதை நிறுத்த வேண்டும்.
ஈகோ
3ஆவது அணிக்கு தேவை ஈகோவை விட்டொழித்தல் ஆகும். கவுரவத்தை விட்டு விட்டு மக்களுக்காக ஒரே அணியில் நாங்கள் திரள்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்களை செய்து முடிப்போம் என 3ஆவது அணியினர் சொல்ல வேண்டும். ஆட்சிக்கு வந்தபிறகுதான் முதல்வர் வேட்பாளர் யார் என்ற முடிவை எடுக்க வேண்டும். இந்த குறைபாடுகளை களைந்தால் 1, 2 அணியை போல் 3ஆவது அணியும் ஒரு நாள் முதல் அணியாக மாறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.