"தர்மசங்கடம்".. அப்போ அமைச்சர் பதவி.. திடீரென உதயநிதி ஏன் அப்படி சொல்லணும்? ஓ இதுதான் காரணமா?
சென்னை: எனக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கூறி, தலைமைக்கு யாரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு திடீரென அறிக்கை வெளியிட்டார். உதயநிதியின் இந்த திடீர் அறிக்கை ஆளும் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் ஆளும் திமுக மாற்றங்களை ஏற்படுத்த போவதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. திமுக அரசு பதவி ஏற்று ஒரு வருடம் முடிந்துவிட்டது.
இந்த நிலையில் அமைச்சரவையில் இருக்கும் சில "செயல்படாத" அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் மாற்ற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்தன. சில அமைச்சர்களின் இலாக்கா குறைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

அமைச்சரவை மாற்றம்
அதோடு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்றும் செய்திகள் வந்தன. எம்எல்ஏ டிஆர்பி ராஜா உள்ளிட்ட பலருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் - விளையாட்டு துறை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்று செய்திகள் வந்தன. ஜூன் 3ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் வருகிறது. அப்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக அறிவிக்கப்படலாம் என்றும் கூட கூறப்பட்டது.

தீர்மானம்
இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென திருச்சி, திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் உதயநிதிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயற்குழுக் கூட்டத்திலும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் அறிக்கை
இந்த நிலையில்தான் நேற்று இரவு திடீரென எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், என்மீதுள்ள அன்பின் காரணமாக, 'எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாம் அளைவரும் அறிவோம்.
எனவே, பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அவர்களின் வழியில் வந்த நம் கழகத் தலைவர் அவர்கள் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும் தொடர்ந்து உழைத்திடுவோம், என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இல்லை
உதயநிதி ஸ்டாலின் இப்படி திடீரென அறிக்கை வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பே அன்பில் மகேஷ் தொடங்கி பல்வேறு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்கள். அமைச்சர் பதவியை உதயநிதிக்கு கொடுக்க வேண்டும் என்று பல இடங்களில் பேசி இருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் உதயநிதி ஸ்டாலின் அதை வெளிப்படையாக இப்படி அறிக்கை வெளியிட்டு எதிர்க்கவில்லை. சில பேட்டிகளில் கூட "தலைவர்"தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

ஒரே பேச்சு
ஆனால் இப்போது திடீரென அமைச்சரவை பதவி பற்றி தீர்மானம் எதையும் நிறைவேற்ற வேண்டாம் என்று அவர் கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் போன்றவர்கள் தீர்மானம் நிறைவேற்றுவது தலைமைக்கு தெரியாமலா.. அவர்களின் அனுமதி இன்றியா நடந்து இருக்கும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இப்போது ஏன் திடீரென உதயநிதி இப்படி சொல்ல வேண்டும்.. அமைச்சரவை பதவியில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் உண்மை என்ன?
இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் விசாரித்ததில்.. உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு பின் வேறு காரணம் எதுவும் இல்லை. தலைமைக்கு யாரும் அழுத்தம் தர கூடாது என்று நினைக்கிறார். கட்சிக்குள் இரண்டு டீம் இருக்க கூடாது என்று நினைக்கிறார். தனக்கு ஆதரவாக அமைச்சர்கள், நிர்வாகிகள் கூட்டம் ஒன்று உருவானால்.. அது கட்சியில் இரண்டு டீம் இருப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். அப்படி கட்சியில் டீம் எதுவும் இல்லை.. அதனால் அதை அவர் விரும்பவில்லை. தலைமையே இதில் நல்ல முடிவு எடுக்கும் என்று அவர் நம்புகிறார் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

லேட்டாகலாம்
முன்னதாக ஜூன் 3ம் தேதி உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. அதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. வெள்ளிக்கிழமை அமைச்சர் பதவியை அளிப்பது கஷ்டம் என்றே கருதப்படுகிறது. முதல்வர் வேறு டெல்டாவில் இருக்கிறார். இதனால் உதயநிதி அமைச்சரவை பதவி வழங்குவது தள்ளிபோகுமா.. அல்லது ஜூன் 3 தேதியே வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று தனக்கு ஆதரவாக யாரும் தீர்மானம் போட வேண்டாம் என உதயநிதி கேட்டுகொண்ட நிலையில் இன்று நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பாக உதயநிதியை அமைச்சராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications