"ஆழம்" பார்க்கிறதா திமுக.. எடப்பாடியே பரவாயில்லையாமே.. சைஸா நுழையும் பாஜக.. என்ன நடக்குது தமிழகத்தில்
பத்திரிகையாளர் மணி ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் திமுக குறித்து கருத்து கூறியுள்ளார்
சென்னை: ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு எதிராக திமுக இன்னும் தீவிரம் எடுக்க வேண்டும்.. விசிக இடதுசாரிகளை களத்தில் இறக்கிவிட்டிருக்காமல், திமுகவே முதல் நபராக இறங்கியிருக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
தமிழகத்தில் ஒரு பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.. ஒருபக்கம் ரெய்டுகள், மறுபக்கம் பெட்ரோல் குண்டுவீச்சுகள் என பரபரப்புகள் தொற்றிக் கொண்டுள்ளன.
மற்றொருபக்கம், ஆர்எஸ்எஸ் 2ம் தேதி பேரணி நடத்த போவதாக அறிவித்துள்ளது.. இந்த பேரணிக்கு விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை.. சரியான முடிவு.. ஆனால் விசிக பேரணியை அனுமதியுங்கள்.. சிபிஎம் கோரிக்கை
எக்ஸ்ட்ரா பாயிண்ட்கள்
இந்நிலையில், மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான மணி, ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், தமிழகத்தில் நிலவும் தற்போதைய சூழல்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது.. மேலும், ஃபிரண்ட் ஆப் இந்தியா ரெய்டுகள், பெட்ரோல் குண்டு வீச்சு, ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம் என்பன உட்பட பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.. அவைகளுக்கு மணி நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இவைதான்:
ஊடுருவல்
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி தருவது, அனுமதி மறுப்பது என்பதெல்லாம் பெரிய பிரச்சனை இல்லை.. அதேசமயம் இந்த ஊர்வலத்தை மட்டுமே வைத்து இந்த அரசியலை பார்க்கவும் கூடாது.. ஆர்எஸ்எஸ் என்ற பெரும்பான்மை மதவெறி தமிழகத்தில் மெல்ல மெல்ல ஊடுருவி கொண்டிருக்கிறது.. சராசரி இந்து, இந்த மதவெறிக்கு பலியாகி கொண்டிருக்கிறான்.. இதைதான் ப சிதம்பரம் சொல்கிறார்.. "பெரும்பான்மையான இந்துக்கள் ஹிந்துத்துவா மயக்கத்தில் இருக்கிறார்கள் என்கிறார்.. ஒருவேளை ப.சிதம்பரம் வடஇந்தியாவை சொல்கிறார் என்றே தெரிகிறது..
வெற்றிடம்
ஆனால், தமிழகத்தில் அப்படி எந்த இந்துக்களும் இந்துத்துவாவுக்கு பலியாகவில்லை.. பலியாக துவங்கி உள்ளனர்.. இது நிச்சயம் வளரும்.. இந்துத்துவா எங்கு வளருகிறது என்றால், ஜெயலலிதா, கலைஞர் இருவரும் இல்லாத சமயத்தில் வெற்றிடம் ஒன்று இங்கு உருவாகியது.. அதை ஓரளவு ஸ்டாலின் இட்டு நிரப்பினார்.. ஆனாலும் வெற்றிடம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.. இந்த அரசுக்கு எதிரான போக்கு, மக்கள் மத்தியில் இப்போது வர ஆரம்பித்துவிட்டது.. மின்கட்டண உயர்வு, சொத்து உயர்வு, சிறுகுறு தொழில் பாதிப்பு, பள்ளிக்கல்வி துறையில் பிரச்சனை இருக்கு, போக்குவரத்து துறையில் பிரச்சனை இருக்கு..
எடப்பாடியே பரவாயில்லை
கீழ்மட்டத்தில் கட்சிக்காரர்கள் செய்யக்கூடிய அட்டகாசம், இதெல்லாம் சேர்ந்து, இந்த அரசுக்கு எதிரான மனநிலை ஒன்று களத்தில் உருவாக தொடங்கிவிட்டது.. எந்த ஒரு அரசுமே மக்களின் எல்லா எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய முடியாது.. ஆனால், மக்களின் கொந்தளிப்புகளை எல்லைதாண்டாமல் ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதுதான் ஆட்சியாளர்களின் அழகு.. கடைசி ஒரு வருடத்தில் வரக்கூடிய எதிர்ப்பு இந்த ஒன்றரை வருஷத்திலேயே திமுகவுக்கு வந்துவிட்டது.. எடப்பாடியே பரவாயில்லையே என்று திமுகவுக்கு ஓட்டு போட்டவர்கள் பலர் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்..
வீர்யம் + ப்ளஸ் பாயிண்ட்
இவ்வளவு சீக்கிரம் இந்த அவப்பெயரை திமுக எடுத்திருக்க கூடாது.. எங்கெல்லாம் பாஜக வளரும் என்றால், இதுபோன்ற எதிர்ப்பார்ப்பு இருக்கும் இடங்களில்தான் வளரும்.. கடந்த காலத்தில் என்ன நடந்தது? திமுகவுக்கு எதிராக அதிமுகவும், அதிமுகவுக்கு எதிராகவும் செய்த அரசியல் இன்று இல்லை.. அதிமுக செயலிழந்து போய்விட்டது.. மக்கள் பிரச்சனைகளுக்காக அதிமுக போராடுவது கிடையாது.. அப்படியே போராடினாலும், அது வீர்யத்துடன் இல்லை.. காரணம், அழற்சி ஒருவித கட்சிக்குள் வந்துவிட்டது.. இந்த இடத்தையும் பாஜக இட்டு நிரப்புகிறது..
முதுகெலும்பு
பாஜக வளர்கிறது என்றாலே ஆர்எஸ்எஸ் வளர்கிறது என்று அர்த்தம்.. ஆர்எஸ்எஸ்தான் பாஜகவுக்கு முதுகெலும்பு.. ஆர்எஸ்எஸ் இல்லாமல் பாஜக இல்லை.. ஆனால், பாஜக இல்லாமல் ஆர்எஸ்எஸ் இயங்கும்.. காரணம் அது 97 ஆண்டுகால இயக்கம்.. 97 ஆண்டு கால தத்துவம்.. ஒரு தத்துவம் என்றால் அது நிச்சயம் பரவும்.. எனவே, களத்தில் ஆர்எஸ்எஸ் தீவிரமாக இறங்கிவிட்டார்கள்.. இப்படி ஒரு சூழலில், மென்மையான அறிக்கையை தமிழக அரசு விடலாமா? 50 இடங்களில் ஊர்வலம் என்றால், தமிழக போலீசுக்கு அழுத்தம் அதிகரிக்கும்..
வெண்சாமரம்
ஏற்கனவே இந்த இயக்கத்தின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன... கடந்த காலங்களில் ஊர்வலம் என்ற பெயரில் இவர்கள் என்ன செய்தார்கள் என்று நமக்கு தெரியும்.. இந்த சமயத்தில் என்ஐஏயும் சோதனை நடத்தியுள்ளது.. எப்படி இந்த ஊர்வலத்துக்கு அனுமதி தருவது? அதுவும் 50 இடங்களுக்கெல்லாம் அனுமதி தரவே கூடாது.. "எந்த பாதையில் ஊர்வலம் என்பதை சொல்லுங்கள், நாங்கள் பரிசீலிக்கிறோம்" என்று அரசு சொல்லியிருக்க வேண்டும்.. திமுகவில் உள்ள குழப்பத்தை வைத்து ஆர்எஸ்ஸை கையாள முடியாது.. காரணம், உங்கள் எதிரி தெளிவான சித்தாந்தம் கொண்டவன்.. 97 ஆண்டு கால வரவரலாறு கொண்டவர்கள்.. மகாத்மா காந்தி படுகொலையை பார்த்தவர்கள்.. அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை, அந்த கொலையில் இருந்து விடுதலையானவர்களின் வாக்குமூலங்களை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்..
ராஜபாட்டை
அந்த தேசப்பிதாவின் பிறந்தநாள் அன்று ஊர்வலம் எடுக்கிறார்கள் என்றால் என்ன ஒரு விஷமத்தனம் இது? என்ன ஒரு அரசியல் திட்டம்? இதைகூட புரிந்து கொள்வதற்கும், எதிர்வினையாற்றுவதற்கும் ஒரு அசாத்தியமான அரசியல் ஆளுமை தேவைப்படுகிறது.. ஆர்எஸ்எஸ்ஸின் ஆபத்தை திமுக புரிந்து கொண்டுள்ளது.. ஆனால் கையாள முடியாமல் குழம்பி போயுள்ளனர்.. மதவெறியர்கள் முன்னேறி வரும்போது ஒதுங்கிவிட கூடாது.. நீங்கள் ஒதுங்கிவிடுகிறீர்கள் என்றால், மதவெறியர்களுக்கு வெண்சாமரம் வீசுவதாகவே அர்த்தம்.. ராஜபாட்டை விரிப்பதாக அர்த்தம்..
சண்டை செய்யுங்க
களத்தில் திமுகவை இறக்காமல், விசிகவையும், 2 இடதுசாரிகளையும் உசுப்பிவிடறீங்க.. திருமா கோர்ட்டுக்கு போறார்.. இதுவா தீர்வு? இந்த 3 கட்சிகளுக்கும் என்ன வாக்கு வங்கி இங்கு உள்ளது? பலம்வாய்ந்த ஓட்டு வங்கியை பெற்றுள்ள திமுக தானே இதில் முதலில் இறங்கியிருக்க வேண்டும்? நீங்களே ஒதுங்கிவிட்டால், எப்படி? அதனால், மென்மையாகவும், நாசூக்காகவும் ஒதுங்கி நின்று ஆர்எஸ்எஸ்ஸை திமுக எந்த காலத்திலும் ஜெயிக்க முடியாது.. களத்துக்கு வாங்க.. வந்து சண்டை செய்யுங்க.." என்றார்.