கவனிச்சீங்களா.. ஊரே சொல்லுது கோ பேக் மோடி.. ஆனா திமுக கப்சிப்னு இருக்கே.. என்னவாம்?
பிரதமரின் வருகைக்கு திமுக எதிர்ப்பு சொல்லாதது ஏன் என தெரியவில்லை
Recommended Video
சென்னை: பிரதமர் மோடி சென்னை வந்ததற்கு, திமுக பக்கம் இருந்து ஒரு எதிர்ப்பும் காணவில்லையே ஏன்... வழக்கமாக பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், ஆழமான கண்டன பதிவுகளும் இன்று தென்படவில்லையே.. ஏன்?
மோடி தமிழகம் வருகிறார் என்றாலே திமுகவின் செயல்பாடுகள், எதிர்ப்புகள் உற்றுநோக்கப்படும். அதன்படியே வைகோ உட்பட கூட்டணி கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளும் கவனிக்கப்படும்.
ஆனால் இன்று அது எல்லாமே மிஸ்ஸிங்! கோ பேக் மோடி ஹேஷ்டேக் ட்ரெண்டானதே தவிர, எதிர்க்கட்சிகள் கப்-சிப் என்றே இருந்தன. என்ன காரணம் என்றும் தெரியவில்லை.
தற்காலிக வாபஸ்
ஏற்கனவே, இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தப் போகிறோம்; தயாராகுங்கள் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டு, கடைசி நேரத்தில் திமுக தலைவர் தற்காலிகமாக வாபஸ் என்றார். ஆளுநருடன் திடீரென நடத்திய சந்திப்புக்கு பிறகுதான் இந்த போராட்டம் வாபஸ் ஆனது.
ஊழல் புகார்
போராட்டம் அறிவித்த நிலையில், ஸ்டாலினை ஆளுநர் ஏன் அழைத்தார்? போராட்டம் பற்றியா அல்லது அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை திமுக தந்திருந்ததால், அது சம்பந்தமான விளக்கம் கேட்கவா? என்று தெரியவில்லை.
அமித்ஷா
ஆனால் அமித் ஷாவின் விளக்கத்தை தெரிவிப்பதற்காக ஆளுநர் அழைத்ததாக ஸ்டாலின் சொல்லி இருந்தார். அப்படியானால், திமுகவின் போராட்டம் அமித்ஷாவை வெலவெலக்க வைத்துவிட்டதா அல்லது பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டாம் என்று ஆளுநர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதா என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை.
கண்டனங்கள்
இந்த நிகழ்வுக்கு பிறகு, பாஜக மீதான வார்த்தை தாக்குதல்கள், கண்டனங்கள் திமுக தரப்பில் இருந்து குறைவாகத்தான் வெளிப்பட்டு வருகிறது. குறைவு என்று சொல்வதை விட வீரியம் இழந்து போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் முதல் பகிரங்க வெளிப்பாடுதான் இன்று மோடியின் சென்னை வருகையின்போது திமுக மயான அமைதி காத்தது.
நிர்வாகிகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினாகட்டும், கனிமொழியாகட்டும், முன்னணி நிர்வாகிகளாகட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வந்து டிவீட் செய்து வைரலாக்கி வருவார்கள். திமுகவினரும் போட்டி போட்டுக் கொண்டு டிரெண்ட் செய்வார்கள்.. ஆனால் இன்று ஒரு திமுக பிரமுகரின் டிவீட்டைக் கூட காண முடியவில்லை. திமுக நிர்வாகிகள் யாருமே பலமான எதிர்ப்பை இன்றைய தினம் பதிவு செய்யவில்லை. அன்று ஆளுநர் அழைத்து பேசியதற்கும், இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்றும் புரியவில்லை.
காரணம்?
மோடி எதிர்ப்பை ஒரே நாளில் திமுக கைவிட்டு விட்டதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. திமுக மட்டுமல்ல.. அதன் கூட்டணிக் கட்சிகளின் பிரமுகர்களும் கூட மோடிக்கு எதிர்ப்பை காட்டியதாக தெரியவில்லை.. ஆச்சரியம்தான்!