விஜயகாந்த் உடல் நிலை.. மியாட் ஒன்று சொல்கிறது.. தேமுதிக வேறு சொல்கிறது.. குழம்பி போன தொண்டர்கள்
விஜயகாந்த் உடல்நிலைக்கு என்னதான் பிரச்சனை?
சென்னை: தேமுதிக ஒன்று சொல்கிறது.. மியாட் ஆஸ்பத்திரி வேறு ஒன்று சொல்கிறது.. உண்மையிலேயே விஜயகாந்த் உடம்புக்கு என்ன? என்று தேமுதிக தொண்டர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களுமே கூட சற்றுக் குழம்பிப் போய் விட்டனர். காரணம், தேமுதிக தலைமை வெளியிட்ட அரைகுறை அறிக்கைதான்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சில வருஷங்களாகவே உடம்பு சரியில்லை.. உடம்பில் நிறைய பிரச்சனை உள்ளது.. அதற்காக அமெரிக்காவுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்தும், பூரணமாக குணமாகவில்லை.
சென்னையிலும் அதற்கான சிகிச்சை நடந்து வருகிறது.. அவரால் சரியாக பேச முடியவில்லை.. இந்த கொரோனா சமயத்தில் ஒன்றிரண்டு முறை அவரது போட்டோக்களை காண நேர்ந்தது.. நிர்வாகி வீட்டு கல்யாணத்தை தன் வீட்டிலேயே நடத்தி வைத்தார்.. அப்போதும் சரி, இந்த 6 மாதத்திலும் சரி, எல்லா போட்டோவிலும் அவர் மாஸ்க் அணிந்துதான் இருந்தார்... சரியான பாதுகாப்பு முறைகளைதான் கடைபிடித்து வந்தார்.
கொரோனா: விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு
விஜயகாந்த்
இவ்வளவு பாதுகாப்பாக இருந்தும் எப்படி திடீரென அவருக்கு தொற்று வந்தது என்று தெரியவில்லை.. நேற்றிரவே அவருக்கு தொற்று என்ற செய்தி வந்ததுமே தமிழக மக்கள் அதிர்ந்து விட்டனர்.. ஆனால் இன்று காலை வரை அதிகார்ப்பூர்வமாக எதுவும் வரவில்லை. மாறாக தேமுதிக தலைமை ஒரு அறிக்கை வெளியிட்டது.
அறிகுறி
அதில், வழக்கமாக வரும் பரிசோதனையின்போது கொரோனா அறிகுறி தென்பட்டதாகவும், ஆனால் உடனே அது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தேமுதிக அறிக்கை கூறியது.. இதுதான் அனைவரையும் குழப்பி விட்டது. கொரோனா அறிகுறியை உடனடியாக எப்படி சரி செய்ய முடியும் என்று அனைவருமே குழம்பி விட்டனர். ஆனால் விஜயகாந்த்துக்கு கொரோனா வந்திருப்பதை மியாட் மருத்துவமனை முறைப்படி உறுதிப்படுத்தி தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.
மியாட்
வழக்கமாக உடம்பு சரியில்லை என்றால், மியாட்டில்தான் ட்ரீட்மென்ட்டுக்கு வருவார் விஜயகாந்த். அதனால் தற்போதும், அவருக்கு அங்குதான் சிகிசிசை தரப்பட்டு வருகிறது.. விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், அவரது உடல்நிலை சீராக இருக்கிறது எனவும், ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.
உடல்நிலை
பொதுவாக, தலைவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும்போது, அவ்வப்போதுஅவர்களின் உடல்நிலை குறித்த தகவலையும், தற்போதைய நிலைமையையும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையாக வெளியிடுவது வழக்கம்.. காரணம், தலைவர்கள் மக்களுக்கு சொந்தமானவர்கள்.
நிலவரம்
எனவே அவர்களின் உடல் நிலை குறித்து அறிவிக்க வேண்டிய கடமை சம்பந்தப்பட்டவர்களுக்கு உண்டு. கட்சியினருக்கும் அந்த உரிமை உண்டு. உண்மை நிலவரத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவும், பீதியை கிளப்ப கூடாது என்பதற்காகவும், தங்கள் மருத்துவமனை மீது குற்றச்சாட்டு வந்து விடக்கூடாது என்பதற்காகவும் மருத்துவமனைகளும் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இது இயல்பானதும் கூட.
விஜயகாந்த்
ஆனால் தேமுதிக வெளியிட்ட அறிக்கைதான் குழப்பமாக்கி விட்டது. விஜயகாந்த்துக்கு கொரோனாவே இல்லை என்பது போல அவர்கள் சொன்னது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. விஜயகாந்த் மீது அக்கறை கொண்டவர்கள் தமிழகத்தில் அதிகம். அவருக்கு உடம்பு சரியில்லை என்ற வருத்தம் தமிழக மக்களிடம் இன்று வரை உண்டு. விஜயகாந்த் நன்கு குணமாகி வர வேண்டும் என்று ஸ்டாலின் முதல் ஜிகே வாசன் வரை ட்வீட் போட்டுள்ளனர்.. முதல்வர் எடப்பாடியர் போனில் பிரேமலதாவிடம் பேசியதாக ட்வீட் போட்டிருக்கிறார்.
அதிருப்தி
இவ்வளவும் அப்பட்டமாக நடந்த நிலையில், விஜயகாந்த்துக்கு கொரோனாவே இல்லை என்பது போல ஏன் தேமுதிக சொன்னது என்று தெரியவில்லை. இதனால் தொண்டர்களின் அதிருப்தியை தேமுதிக தலைமை தற்போது சம்பாதித்துள்ளது. கேப்டனின் உடல் நிலை குறித்துக் கூட ஏன் இப்படி பூசி மெழுக வேண்டும் கட்சித் தலைமை என்று அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பிரார்த்தனை
தேமுதிக என்றில்லை, விஜயகாந்த்துக்கு எப்போது உடம்பு சரியில்லை என்றாலும், தமிழக மக்கள் அவருக்காக கட்சி வித்தியாசம் பாராமல் பிரார்த்தனை செய்வது வழக்கம்.. அந்த அளவுக்கு விஜயகாந்த் மீது பாசம் வைத்திருப்பவர்கள்.. இதைகூட புரிந்து கொள்ளாமல், தேமுதிக தலைமை தொடர்ந்து குழப்புவது சரியில்லை என்றே மக்கள் முணுமுணுக்கிறார்கள்.