நெருப்பில்லாமல் புகையாதே.. ஆதாயம் இல்லாமல் சசிகலாவை தேமுதிக ஆதரிப்பது ஏன்?.. காரணம் இருக்கு!
சென்னை: அதிமுக மூத்த தலைவர்களே சசிகலாவுக்கு எதிராக பேசி வரும் நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவோ அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன் என விவேக் காமெடி ஒன்று உள்ளது. அது யாருக்கு பொருந்தும் என்றால் தேமுதிகவுக்குத்தான். அரசியல்வாதிகளுக்கு எதிராக தீவிரவாதிகளுக்கு எதிராக சினிமாவில் நடித்த விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு கட்சியை தொடங்கிய போது அவரை மக்கள் தூக்கி வைத்து கொண்டாடினர்.
பின்னர் 2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 44 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உருவெடுத்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல்
அதன் பிறகு தேமுதிகவுக்கு 2016 சட்டசபை தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல் என தோல்வியே விஞ்சியது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு குறைந்த தொகுதிகளையே கொடுத்தது. அதில் ஒன்றில் கூட தேமுதிக வெற்றி பெறவில்லை.
மருத்துவமனை
தற்போது தமிழகத்தின் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே சசிகலா வரும் 27-ஆம் தேதி விடுதலை ஆகிறார். அதற்கு முன்னதாக கொரோனா தொற்றால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சசிகலா எதிர்ப்பு
சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளார்கள். ஆனால் யார் வெளியே வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என அதிமுக மூத்த நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டையே கொண்டுள்ளார்கள்.
அதிமுக தலைமை
இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவோ, சசிகலா பூரண குணமாகி அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் அவரால் அரசியலில் உருவாக்கப்பட்டவர்களே தற்போது எதிர்ப்பது வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளது கூட்டணி கட்சியான அதிமுக தலைமையை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
அதிக சீட்டு
இதற்கு காரணம் என்னவெனில் 2011 -ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேமுதிக பெற்ற சீட்டுகளையும் வெற்றிகளையும் பெற வேண்டும் என்பதற்காக சசிகலாவுக்கு பிரேமலதா தூபம் போடுகிறார் என்றே சொல்லப்படுகிறது. அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்றே சசிகலா விஷயத்தில் பிரேமலதா தலையிடுவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
தொகுதி பங்கீடு
தேர்தல் நேரத்தில் இது போல் பேசி அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்தால் கூடுதல் இடங்களை கேட்டு பெற முடியும் என அக்கட்சி நம்பி வருவதாகவும் அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பிரேமலதாவின் அரசியல் காய் நகர்த்தல் எந்த அளவுக்கு கை கொடுக்கிறது என்பது தொகுதி பங்கீட்டின் போது தெரியவரும்.