ஏறெடுத்து பார்த்த தினகரனை.. இன்று எடுப்பார் கைப்பிள்ளையாக்கிட்டாங்களே!
டிடிவி தினகரனின் பலம் குறைய என்ன காரணம்?
Recommended Video
சென்னை: அனைத்து கட்சிகளுமே ஏறெடுத்து பார்க்கும்வகையில் திகழ்ந்த அமமுக ஒரே வருடத்திற்குள் நைந்து போன துணியாக மாற ஆரம்பித்துவிட்டது.
ஆர்.கே. நகர் வெற்றிக்கு பிறகு தினகரனின் மாஸ் எங்கோ போனது. பல மூத்த அரசியல் கட்சி தலைவர்களே தினகரனின் அசுர வளர்ச்சியை கண்டு பிரமித்தார்கள், இன்னும் சொல்லப்போனால் பயப்படவே செய்தார்கள். எவ்வளவுதான் வாய் கிழிய பேசினாலும், தினகரன் என்றாலே உள்ளுக்குள் உதறல் இருக்கத்தான் செய்தது.
அந்த அளவுக்கு தினகரனின் பேச்சு, செயல், சுபாவம், அணுகுமுறை, வெளிப்படுத்தும் விதம், என ஒவ்வொன்றிலும் முதிர்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இதில் ஆர்.கே. நகரில் டெபாசிட்டை இழந்த திமுகதான் தினகரனை கண்டு ரொம்பவே நடுங்கியது. அங்கிருந்த சிறுபான்மை வாக்குகளை ஒட்டுமொத்தமாக அள்ளி கொண்டது அமமுகதான்.
அனுதாப அலை
இதுதான் ஸ்டாலினுக்கு முதல் அடியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சொத்து குவிப்பு, அன்னிய செலவானி என மத்திய அரசு ஒரு பக்கம் அழுத்தம் தர தர தினகரன் மீது ஒரு அனுதாப அலைதான் எழுந்தது. இது திமுகவுக்கு உட்பட அனைத்து கட்சிகளுக்குமே ஷாக்.
புளியை கரைத்தது
இது போதாதென்று, தேர்தல் நடக்கிறதா, இல்லையா என தெரிவதற்கு முன்னமே திருப்பரங்குன்றம், திருவாரூரில் டேரா போட்டுக் கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்ததும், அரசியல் கட்சியில் எல்லாருக்குமே வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. இரு தொகுதிகளிலும் சாதி ஓட்டுக்கள் உட்பட எல்லாவற்றையுமே அமமுகவுக்கு கிடைக்க பக்காவாக ஸ்கெட்ச் போட்டிருந்தார் தினகரன்.
செந்தில் பாலாஜி
இப்படித்தான் அசுர வளர்ச்சி பெற்றது அமமுக. இப்படி அமமுக இருந்தால், அது தங்களுக்கு எப்படியும் மைனஸ்தான் என்பதை பிரதான கட்சிகள் யோசித்தார்கள். அதன் விளைவுதான் தினகரன் தரப்பிலிருந்து செந்தில் பாலாஜியை கட்டம் கட்டி வெளியே கொண்டு வந்தது. அதன் விளைவுதான் அதிமுக, பிரிந்தவர்கள் சேரலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டது.
பிடிங்க தினகரனை
அது மட்டும் இல்லை, நல்ல ஆள் வேணுமா. பிடிங்க தினகரன் டீமை என்று முக்கியக் கட்சிகள் நினைக்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. அமமுகவை கரைக்கும் முயற்சியை இப்போது கட்சிகள் முன்னெடுத்து உள்ளன. அதன்படியே ஆளாளுக்கு அமமுகவிலிருந்து ஆட்களைப் பிரித்து கொண்டு போக முயற்சிகள் தீவிரமாகவும், மறைமுகமாகவும் உள்ளது.
கங்கணம் கட்டுகின்றன
பிரதான கட்சிகளின் இந்த அதிரடிகளால் அமமுக அடித்தளம் தடுமாற ஆரம்பித்து விட்டது. தனது செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. 2, 3-வது இடத்தை ஓராண்டுக்கு முன்பு பிடித்த அமமுக இப்போது பின்னாடி தள்ளப்பட்டு வருகிறது. கவுண்டர் சமூகத்திலிருந்து செந்தில் பாலாஜியை பிரித்து கொண்டுபோல், கொங்குமண்டலம், தேவர் சமூகத்தை சேர்ந்த பிரமுகர்களையும் இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு, கடைசியில் தினகரனை ஒன்றுமில்லாமல் செய்வதே இப்போதைக்கு அரசியல் கட்சிகள் கங்கணம் கட்டி கொண்டு இருக்கின்றன.
பல் பிடுங்கின பாம்பு
எதிரிக்கு எதிரி நண்பன்போல அதிமுகவும், திமுகவும் களம் இறங்கி விட்ட நிலையில், தினகரன் இன்று ஒரே வருஷத்தில் பல் பிடுங்கின பாம்பாக மாறி வருகிறாரோ என்றே நினைக்க தோன்றுகிறது. ஆனால் இதையும் சமாளிக்க ஏதாவது பிளான் வைத்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் தினகரன் குரூப்பில் உள்ளது.. !