அடப்பாவமே.. தினகரனை பார்த்து திமுகவும், அதிமுகவும் இப்படியா பயந்து ஓடுவது?
சென்னை: மதுரை மண்டலத்தில் டிடிவி தினகரன் ஆதிக்கம் செலுத்துவதால் தங்களால் வெற்றி பெற முடியாது என திமுக மற்றும் அதிமுக நினைக்கிறதா என்ற கேள்வி அவர்கள் தொகுதி பட்டியலை பார்த்தால் எழுகிறது.
மதுரை மண்டலம் என்பது, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய லோக்சபா தொகுதிகளை உள்ளடக்கியது. இவை அனைத்திலும் கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.
இதன்பிறகு, 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும், இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பெருவாரியான சட்டசபை தொகுதிகளில் அதிமுகதான் வென்றது.
மாஸ்டர் பிளான்.. 7 தொகுதிகளில் 6ல் திமுகவுடன் பாமகவை மோத விட்ட அதிமுக...!
அதிமுக ஆதரவு மண்டலம்
உதாரணத்திற்கு, தேனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை எடுத்துக்கொள்ளலாம். கம்பம், போடிநாயக்கனூர், பெரியகுளம் (தனி), ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய மொத்தமுள்ள 6 தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது. அதுவும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.
தினகரன் ஆதிக்கம்
இந்த நிலையில்தான், இந்த மக்களவை தேர்தலில் திமுகவும், அதிமுகவும் மதுரை மண்டலத்தில் பெருவாரியான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்குதான் வாரி வழங்கியுள்ளன. இதற்கு முக்கியமான காரணம், இங்கு தினகரன் ஆதிக்கம் இருப்பதுதான் என்கிறார்கள். அதிமுக பெருவாரியான செல்வாக்கை கொண்டுள்ள மதுரை மண்டலத்தில், இப்போது அதிமுகவின் முகமாக டிடிவி தினகரன்தான் மக்களால் பார்க்கப்படுவதுதான் இதற்கு காரணமாம்.
தேனியில் அதிமுக
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை ஆகிய 5 தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது, திமுக. திண்டுக்கல்லில் திமுக களமிறங்குகிறது. அதேநேரம், திண்டுக்கல்லை பாமகவிடம் கொடுத்துள்ள அதிமுக, பதிலாக தேனியில் களம் காண்கிறது. ஓபிஎஸ் செல்வாக்கை நம்பிதான். வேறென்ன.
கூட்டணி கட்சிகள்
அதேநேரம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளை பாஜகவுக்கும், விருதுநகர் தொகுதியை தேமுதிகவுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளது அதிமுக. மதுரையில் அதிமுக களமிறங்குகிறது. ஆக, எங்கே அதிமுக பலமான கட்சி என பறைசாற்றினார்களோ, அந்த, மதுரை மண்டலத்தில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே அதிமுக நேரடியாக களம் காண்கிறது. எப்படியும், பெருவாரியான வாக்குகளை தினகரன் கட்சி வாங்கிவிடும் என்ற அச்சத்தால், இரு பெரும் திராவிட கட்சிகளுமே, தங்கள் கூட்டணி கட்சிகளை இங்கே பலிகடாவாக களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.