பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணிப்பது ஏன்.. வெளிநடப்பு செய்தபின் துரைமுருகன் ஆவேச பேட்டி
சென்னை: திமுக ஆட்சியில் கடன் குறைவாக தான் இருந்தது. ஆனால் தற்போது 5.7 லட்சம் கோடி அதிகமாக இருக்கிறது.இந்த ஊழல் அரசு, உதவாக்கரை அரசின் நிதிநிலையில் கலந்து கொள்ள வேண்டாம் என திமுக கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம் என்று துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில் பல்வேறு பிரச்சனை குறித்து பேச வாய்ப்பு கேட்டு சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் இன்று கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த துரைமுருகன், ஓபிஎஸ் பட்ஜெட் தாக்கல் செய்ய எதிப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார்.
அப்போது சலசலப்புக்கு மத்தியில் பட்ஜெட் உரையை ஓபிஎஸ் வாசிக்க தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரிகளின் மைக் அணைக்கப்பட்டது. இதையடுத்து திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள். பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
திமுக ஆட்சியில் குறைவு
வெளிநடப்பு செய்த பின் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக ஆட்சியில் கடன் குறைவாக தான் இருந்தது. ஆனால் தற்போது 5.7 லட்சம் கோடி அதிகமாக இருக்கிறது. இந்த ஆட்சி மிகமிக மோசமாக இருக்கிறது.
நிதிநிலை அறிக்கை
தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து சென்று விட்டனர். அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்து செல்வோரின் கடைசி நிதிநிலை அறிக்கை தான் இது. கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சி என்ற ஒன்று இல்லை.
புறக்கணிக்கிறோம்
புதுவையில் நடந்துள்ள அரசு படுகொலை, பாஜக எந்தவிதத்திலும் கொலை செய்ய தயங்காது என்பதற்கு இதுதான் சாட்சி. இந்த ஊழல் அரசு, உதவாக்கரை அரசு நிதிநிலையில் கலந்து கொள்ள வேண்டாம் என திமுக கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
திசை திருப்பும் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியும் பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக கூறியுள்ளது. காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் ராமசாமி இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில், மிக மோசமான நிலைமையில் தமிழகம் இருக்கிறது. 5 லட்சம் கோடி பற்றாக்குறை தமிழகத்தில் உள்ளது. 2 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களை திசை திருப்பும் வகையில் அறிவிப்புகளை அரசு வெளியிடுகிறது. ஏன் என்று கேள்வி கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அறிவிப்புகளில் ஆர்வம் காட்டுவது போன்று திட்டங்களை செயல்படுத்த காட்டுவதில்லை. காங்கிரஸ் கட்சியும் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறது" என்றார்.