ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன? ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி
Recommended Video
சென்னை: திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்ட முடிவை ஆளுநருடனான சந்திப்புக்குப் பின் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென ஒத்திவைப்பதாக அறிவித்திருப்பது ஏன் என்பதுதான் அரசியல்வட்டாரங்களின் ஹாட் விவாதம்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் திமுகவின் போராட்டங்கள், கூட்டணி முடிவுகள் எதுவும் சட்டென எந்த ஒரு சந்திப்பின் மூலமும் அவர் அறிவித்துவிடுவதில்லை. எந்த ஒரு கேள்வியை கேட்டாலும் 'ஆலோசித்து முடிவெடுப்போம்' 'செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்' 'உயர்நிலை செயல்திட்டக் குழுவில் விவாதிப்போம்' என்றுதான் புன்னகையுடன் பதில் வரும்.
தற்போது இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தப் போகிறோம்; தயாராகுங்கள் என தொண்டர்களுக்கு முதலில் அழைப்பு விடுத்தார் திமுக தலைவர் ஸ்டாலின். பின்னர் திருவண்ணாமலை முப்பெருவிழாவில் அனைத்து தமிழர்களும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ஆளுநர் சந்திப்பும் கேள்விகளும்
இந்நிலையில் திடீரென ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஸ்டாலின் சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. முதலில் ஆளுநரை சந்திக்க ஸ்டாலின் நேரம் கேட்டிருந்தாரா? அல்லது ஆளுநர் தரப்பில் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததா? என்கிற கேள்வி எழுந்தது.
சந்திப்புக்கு காரணம் என்ன?
பின்னர் ஆளுநர் மாளிகைதான் ஸ்டாலினை அழைத்தது என்கிற விளக்கம் கிடைத்தது. பின்னர் திடீரென ஸ்டாலினை ஆளுநர் ஏன் அழைத்திருக்கிறார்? அதுவும் திமுக போராட்டத்தை அறிவித்திருக்கும் இந்த நேரத்தில் ஆளுநரின் அழைப்பு ஏன்? என்கிற கேள்வியும் எழுந்தது.
முதலில் பரவிய தகவல்
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் நிலவிய ஒரே கருத்து, அதிமுக அரசின் ஊழல் விவகாரங்கள் தொடர்பான புகார் மனு மீதான ஆலோசனையாக இருக்கலாம் என்பதுதான். ஆளுநர் மாளிகைக்கு டி.ஆர். பாலுவுடன் ஸ்டாலின் சென்றார். பின்னர் கனிமொழி உள்ளிட்டோரும் ஆளுநர் மாளிகை சென்றனர்.
அமித்ஷா விளக்கம்
ஆனால் ஸ்டாலிடனை மட்டும் ஆளுநர் பன்வாரிலால் அழைத்து பேசினார். இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது முதலில் டைம்ஸ் நவ் டிவி சேனல்தான், இந்தி திணிப்பு தொடர்பான அமித்ஷாவின் விளக்கத்தை ஒளிபரப்பியது.
ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
பின்னர் இது ஊடகங்கள் அனைத்திலும் பரபரப்பாக ஒளிபரப்பாகின. இதனிடையே ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர் உடனடியாக முரசொலி அலுவலகத்துக்கு ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு என்கிற செய்தி வரப்போகிறது என தகவலைத் தெரிவித்துவிட்டு பின்னர் டி.ஆர். பாலு உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் ஸ்டாலின்.
ஸ்டாலின் திடீர் முடிவு
உயர்நிலை செயல்திட்டக் குழு கூடி ஆலோசித்த முடிவை திடீரென ஸ்டாலின் ரத்து செய்துவிட்டு அதன் பின்னர் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியிருப்பதுதான் ஏன் என்கிற கேள்வியை எழுப்பியது. அப்படியானால் ஆளுநர் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டதா? ஆளுநர் சொன்ன செய்தி, அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்பது மட்டும்தானா? ஏன் இப்படி தடாலடியாக போராட்ட அறிவிப்பை ஸ்டாலின் வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் அனைவரது கேள்வி.
மோடி- ஜின்பிங் சந்திப்பு எதிரொலி
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, ஊடகங்கள் மிகைப்படுத்துவது போல திமுகவுக்கு எந்த நெருக்கடியும் தரப்படவில்லை. பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு இன்னும் சில வாரங்களில் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம் என தொடருவது சரியாக இருக்காது. இது நமது நாட்டைப் பற்றிய தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் என மத்திய அரசு கருதுகிறது என்பதுதான் ஆளுநர் தரப்பில் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்ட ஒரே செய்தியாம். இதனை ஏற்றுக் கொண்டுதான் உடனடியாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக ஸ்டாலின் அறிவித்தாராம்.