"லோக்கல் கைகள்" தந்த சிக்னல்.. என்ன வேணா நடக்கட்டும்.. துணிந்து இறங்கிய ஸ்டாலின்.. ஓ இதான் மேட்டரா!
சென்னை: 24 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட கொடுக்க முடியாது என்று காங்கிரஸிடம் திமுக பிடிவாதம் காட்டி வருவதற்கு பின் மிக முக்கியமான காரணம் இருக்கிறது.. எதையும் பார்த்துவிடலாம் என்று துணிந்துதான் திமுக இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறுகிறார்கள்.
நீங்க என்ன வேணா சொல்லுங்கள்.. இவ்வளவுதான் கொடுப்போம்.. கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரசை திமுக இப்படித்தான் டீல் செய்து வருகிறது. காங்கிரஸ் எவ்வளவு பேசினாலும், என்ன சொன்னாலும் 24 தொகுதிக்கு மேல் கொடுக்கும் எண்ணம் திமுகவிற்கு இல்லை.
2019 லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தியை முதல் ஆளாக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் அளவிற்கு திமுக காங்கிரஸ் இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தது. ஆனால் இப்போது அதே காங்கிரசை பெரிய அளவில் மதிக்காமல் திமுக கறார் காட்ட தொடங்கி உள்ளது. திமுகவின் இந்த மாற்றத்திற்கு பின் முக்கியமான ஒரு காரணம் உள்ளது.
வரி ஏய்ப்பு புகார்.. தமிழகம் முழுவதும் லலிதா ஜுவல்லரி கடைகளில் ஐடி ரெய்டு!
என்ன நடந்தது
காங்கிரசுடன் நெருக்கமாக இருந்த திமுக இப்போது காங்கிரஸ் கூட்டணியில் வெளியே இருந்து சென்றாலும் கூட பிரச்சனை இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. தனியாக நின்று ஜெயிக்க வேண்டும் என்பதை தாண்டி திமுகவின் இந்த முடிவிற்கும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் கொடுத்த கிரீன் சிக்னல்தான் காரணம் என்கிறார்கள். காங்கிரஸ் வேண்டாம், தேர்தலை தனியாகவே எதிர்கொள்ளலாம் என்று சில நிர்வாகிகள் நேரடியாகவே கூறியதாக தெரிகிறது.
நிர்வாகிகள்
சில மாவட்ட நிர்வாகிகளின் கூற்றுப்படி, திமுக - காங்கிரஸ் கூட்டணி ஓகேதான். ஆனால் 40 இடங்கள் எல்லாம் தேவை இல்லை. தென் மாவட்டங்களை தவிர வேறு எங்கும் காங்கிரஸ் இல்லை. அதிகபட்சம் 20 தொகுதிதான் காங்கிரஸ் வலுவாக இருக்கும் தொகுதி. இதனால் அதை மட்டும் கொடுத்தால் போதும் என்று திமுக நிர்வாகிகள் சிலர் கூறியுள்ளனர்.
துணிச்சல்
அதோடு காங்கிரசுக்கு அதிக இடம் கொடுப்பதால் ஒவ்வொரு முறையும் திமுகவின் முக்கியஸ்தர்கள் வாய்ப்புகளை இழக்கிறார்கள். அதிருப்தியில் இவர்கள் வேலை செய்யாமல் புறக்கணிப்பதால் திமுக கூட்டணி தோல்வி அடைகிறது. மாவட்ட நிர்வாகிகளின் அதிருப்தியை திமுக இந்த முறையம் சம்பாதிக்க கூடாது. காங்கிரசை கவனமாக அணுக வேண்டும்.
அரவணைப்பு
இதனால் காங்கிரசை அரவணைப்பதற்கு பதிலாக சொந்த நிர்வாகிகளை திமுக அரவணைக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதோடு அதிமுகவின் கோட்டை என்று கருதப்படும் இடங்களில் முக்கியமாக மேற்கு மாவட்டங்களில் திமுகவை இறக்க வேண்டும். இங்கு காங்கிரசை களமிறக்குவதுதான் அதிமுகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.. அதை மாற்றி துணிச்சலாக திமுகவே களமிறங்க வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோரிக்கை
உறுதியாக காங்கிரஸ் வெல்லும் என்று நம்பப்படும் தொகுதிகளை மட்டும் அவர்களுக்கு கொடுத்தால் போதும், மற்ற இடங்களில் நாமே துணிந்து இறங்கலாம் என்று நிர்வாகிகள் பலர் திமுகவிற்கு சிக்னல் கொடுத்துள்ளனர். இதனால்தான் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று ஸ்டாலினும் துணிந்து களமிறங்கி விட்டார் என்கிறார்கள்.
ஸ்டாலின் மனநிலை
காங்கிரஸ் கூட்டணியை விட்டே போனாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கும் அவர் வந்துவிட்டாராம். காங்கிரஸ் போனால் அதிகபட்சம் 10 தொகுதிகள் வரை திமுகவிற்கு எதிராக திரும்பும். ஆனால் அதையும் கூட நன்றாக வேலை செய்தால் கைப்பற்றலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். 24க்கு கீழ் என்றால் டீலிங் ஓகே.. இல்லையென்றால் டாட்டா பைபை மனநிலையில்தான் திமுக இருக்கிறதாம்!