சாதித்த அதிமுக... சறுக்கிய திமுக... என்ன காரணம்?
Recommended Video
சென்னை: நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வெற்றி முகத்தில் இருக்கின்றனர்.
ஆனால் திமுகவோ ஏற்கனவே தன் வசம் வைத்திருந்த இரண்டு தொகுதிகளையும் இழந்து அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
இடைத்தேர்தல் முடிவுகளால் அதிமுகவினர் மத்தியில் உற்சாகம் பீறிடத் தொடங்கியுள்ளது.
நாங்குநேரியில் காங்கிரஸ் பின்னடைவு.. எப்படி நடந்தது மாற்றம்.. அதிமுக வெற்றிக்கு உதவிய 6 காரணங்கள்!
நம்பிக்கை
நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி தங்களுக்குத்தான் என திமுகவும், அதிமுகவும் மார்தட்டின. பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை இரு கட்சிகளும் முன்வைத்தன. போதாகுறைக்கு காங்கிரஸ் வேறு நாங்குநேரியில் போட்டியிட்டு அறிக்கைகள் மூலம் நாள்தோறும் அதிமுகவை காய்ச்சி எடுத்தது.
வலிமை
இரண்டு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை அதிமுக தலைமையும், திமுக தலைமையும் கவுரவப் பிரச்சனையாக கருதியது. விக்ரவாண்டியில் எப்படியாவது வெற்றிபெற்று பாமகவிற்கு தனது வலிமையை நிரூபிக்க கடுமையாக முயற்சித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் இப்போது வெளியாகிய முடிவுகளை பார்த்தால் பாமகவின் வாக்கு வங்கி தான் விக்ரவாண்டியில் அதிமுகவை கரை சேர்த்ததாக தெரிகிறது.
பின்னடைவு
நாங்குநேரியை பொறுத்தவரை அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் காங்கிரஸ் கடும் போட்டியை தந்தது உண்மை. இதனால் அதிமுகவினரே அப்போது சற்று அதிர்ச்சியடைந்தனர். ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸ் தரப்பில் இருந்த அதீத நம்பிக்கையே அவர்களை இன்று பின்னடைவை சந்திக்க வைத்துள்ளது.
பயனில்லை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தலா நான்கு நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்படியிருந்தும் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. இத்தனைக்கும் அதிமுக தலைவர்கள் பிரச்சார கூட்டங்களை காட்டிலும், திமுக தலைவரின் பிரச்சார கூட்டங்களில் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.
செல்வாக்கு
அதிமுகவை பொறுத்தவரை பாமக, தேமுதிக, பாஜக என வலிமையாக கூட்டணி அமைத்து இடைத்தேர்தலை சந்தித்தது. பாமக, தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் வடதமிழகத்தில் அதுவும் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கணிசமான செல்வாக்கு இருக்கிறது என்பதை இந்த இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளது. மேலும், இதுவும் அதிமுக வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தாமத முடிவு
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தொகுதி முழுவதும் ஒரு ரவுண்டு அடித்துவிட்ட நிலையில், மிகவும் காலதாமதமாக காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவித்தது. அதுவும் சென்னையை சேர்ந்த தொழிலதிபரை வேட்பாளராக்கியது லோக்கல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. வெளியூர்க்காரர் வேட்பாளர் என்ற அதிமுகவின் தொடர் பிரச்சாரம் ஓரளவும் அவர்களுக்கு கை கொடுத்து உதவி ரெட்டியார்பட்டி நாராயணனை கரை சேர வைத்திருக்கிறது.
ஏமாற்றம்
அதிமுகவை பொறுத்தவரை இரண்டு தொகுதிகளிலும் பிரச்சார வியூகத்தை பலமாக அமைத்திருந்தது. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ராமதாஸ், அன்புமணி, விஜயகாந்த், பிரேமலதா, என அனைத்து தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டனர். ஆனால் திமுக தரப்பில் ஸ்டாலின் ஒருவர் மட்டுமே அனைத்து இடங்களையும் சுற்றிவந்தார். கூட்டணிக் கட்சித்தலைவர்கள் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை.
பிரச்சாரம்
வைகோவிற்கு உடல்நலமில்லாததால் அவரின் பிரச்சாரத்தில் சுரத்து குறைந்திருந்தது. தலா ஒரு நாள் மட்டும் இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸை பொறுத்தவரை குஷ்பூ கூட பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டாமல் லண்டன் சென்றுவிட்டு, கடைசியாக வந்து ஒரு நாள் மட்டும் அதுவும் நாங்குநேரியில் மட்டும் பரப்புரை செய்தார். கனிமொழியோ சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில்கலந்துகொள்வதற்காக செர்பியா சென்றுவிட்டார். இப்படி ஆளாளுக்கு ஒதுங்க நேரிட்டதால் ஸ்டாலின் ஒருவர் மட்டுமே இரண்டு தொகுதிகளையும் சுற்றி வந்தார்.