விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. வெல்ல வேண்டிய தொகுதியை தலைக்கனத்தால் இழந்த திமுக
Recommended Video
சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் திமுக தலைமையை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதேநேரத்தில் எளிதில் வெற்றி பெறக் கூடிய விக்கிரவாண்டி தொகுதியை மிதமிஞ்சிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியவர்களை நம்பி கட்சி மேலிடம் பறிகொடுத்து நிற்கிறது என்கின்றனர் சீனியர் திமுக தலைவர்கள்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ராதாமணி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதியில் திமுகவின் நா, புகழேந்தி வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.
திமுகவிடமிருந்து அதிமுகவுக்கு கை மாறிய விக்கிரவாண்டி.. வீழ்ச்சிக்கு இதுதான் காரணம்
நம்பிக்கையுடன் திமுக
விக்கிரவாண்டி தொகுதியைப் பொறுத்தவரை திமுகவுக்கு சாதகமான தொகுதி. வேட்பாளர் புகழேந்தி வெல்லக் கூடிய வாய்ப்புள்ளவர். இப்படித்தான் தேர்தல் களத்தின் தொடக்கத்தில் அக்கட்சி தொண்டர்களும் சீனியர் தலைவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.
புஸ்வானமான வியூகம்
ஆனால் விக்கிரவாண்டி தேர்தல் களத்தை கையிலெடுத்து கட்சி தலைமைக்கு நம்பிக்கையூட்டியவர்கள் வகுத்த வியூகம் புஸ்வானமாகிப் போனது. நாங்குநேரியிலும் விக்கிரவாண்டியிலும் அதிமுக ஒட்டுமொத்தமாக இறங்கி வேலைபார்த்தது. ஆனால் திமுக அப்படி செய்யவில்லை.
கட்சியினருக்கு முட்டுக் கட்டை
அதுவும் விக்கிரவாண்டி தேர்தலுக்கு பொறுப்பானவர்கள் பிற மாவட்ட நிர்வாகிகளை தொகுதிக்குள்ளேயே எட்டிப்பார்க்காத வகையில் தொடக்கத்திலேயே முட்டுக்கட்டை போட்டுவிட்டனர். அதேநேரத்தில் தங்களுக்கு வரவேண்டிய தொகையை பாக்கி இல்லாமல் பிற மாவட்டங்களிடம் வசூலித்துவிட்டனர்.
அலட்சியமாக இருந்த திமுக
உள்ளூர் கட்சிக்காரர்களை மட்டுமே நம்பி வெற்றி பெற முடியும் என கணக்குப் போட்டனர் திமுக நிர்வாகிகள். அதனால் விக்கிரவாண்டி பொறுப்பாளர்களின் கருத்துகளுக்கு கட்சித் தலைமையும் ஆமாம் சாமி போட்டது. அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது அக்கட்சிக்கு கூடுதல் பலம்.
களப்பணி குறைவு
இதை புரிந்து கொண்டாவது தங்களது வாக்குகளையாவது சிந்தாமல் சிதறாமல் கரைசேர்க்க வேண்டிய களப்பணியை திமுக செய்திருக்க வேண்டும். ஆனால் எல்லாம் எங்களுக்கு தெரியும்.. நாங்க பார்க்காத தேர்தலா? நாங்களே எல்லாமும் செய்துவிடுவோம் என மேலிடத்தை குளிர்விக்கும் பொதுக் கூட்டங்களில் மட்டுமே விக்கிரவாண்டி பொறுப்பாளர்கள் அக்கறை செலுத்தினார்கள்.
மிதமிஞ்சிய தன்னம்பிக்கை
இதனால் திமுக வேட்பாளர் புகழேந்தி தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறார். விக்கிரவாண்டியை திமுக பறிகொடுத்து கொண்டிருப்பது அதன் மிதமிஞ்சிய தன்னம்பிக்கைக்கு விழுந்த சம்மட்டி அடி என்பதில் மிகையே அல்ல என்கின்றனர் சீனியர் தலைவர்கள்.