மு.க.ஸ்டாலினின் 'நமக்கு நாமே'.. வெர்ஷன் 2 ரெடி.. மீண்டும் மக்களை சந்திக்க போகிறார்!
கிராம சபை கூட்டம்.. மக்களை ஸ்டாலின் சந்திக்க பின்னணி காரணம்?
சென்னை: ஸ்டாலின் மீண்டும் மக்களை பார்க்க போகிறார். லேட்டான செய்தி என்றாலும் ஸ்வீட்டான செய்திதான்.
"மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்கள் மனங்களை வெல்வோம்" என்று அறிவித்துள்ளார். எதற்காக இந்த அறிவிப்பு?
தேர்தலை முன்னிறுத்தியா? வாக்கு வங்கிகளை நிரப்பவா? என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இதுதான் சரியான பாதை என்பதை ஸ்டாலின் சரியாக புரிந்து கொண்டுள்ளார்.
எம்ஜிஆர்
கடைசிவரை எம்ஜிஆர் மக்களோடு மக்களாகவே இருந்தார். முதல்வர் என்ற உயர்ந்த பதவியில் இருந்தபோதும் தன்னை மக்களிடமிருந்து அப்பாற்பட்டவராக அவர் நினைத்ததோ, செயல்பட்டதோ இல்லை. அதனால்தான் இன்றுவரை அவர் பேசப்பட்டு வருகிறார்.
கென்னடி ஸ்டைல்
ஆனால் எம்ஜிஆரின் இந்த ஃபார்முலா, அமெரிக்க ஜனாதிபதி கென்னடிக்கு சொந்தமானது. தினந்தோறும் காலையில் மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் கென்னடி. அவரது ஸ்டைலைதான் எம்ஜிஆர் அரசியலில் புகுத்தினார் - வெற்றி பெற்றார்.
அன்புமணியாகிய நான்
சமீப கால உதாரணமாக சொல்ல வேண்டுமானால், அன்புமணியின் "அன்புமணியாகிய நான்", மு.க.ஸ்டாலினின் "நமக்கு நாமே" இரண்டுமே அசுர வெற்றி பெறவும், இன்றளவும் அந்தந்த கட்சிகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கவும் காரணம் என்ன? இரண்டு பேருமே மக்களிடம் இறங்கினார்கள். மக்களோடு மக்களாக கலந்தார்கள். மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டார்கள், அதனை தார்மீக அடிப்படையில் அணுகுகிறார்கள்.
பாமகவால் தோற்றது
ஆனால் ஒரு கட்டத்தில் ஸ்டாலின் மக்களிடம் உள்ள நெருக்கத்தை விட்டுவிட்டார். ஆனால் அன்புமணி இன்னமும் தொடர்கிறார். விடாமல் மக்களை விரட்டி பிடித்து பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். போன தேர்தலில் திமுகவின் பின்னடைவுக்கு பாமகவின் இந்த மக்களின் சந்திப்பு முக்கிய காரணியாக இருந்தது. பாமகவால்தான் முக்கிய தொகுதிகளை இழந்து திமுக தோற்றதை நாடறிந்தது.
செல்வாக்கு கூடியுள்ளது
இப்படி மக்களை நேரடியாக சந்திக்க, சந்திக்க 2 விஷயங்கள் தானாக நடக்கும். ஒன்று, தன் கட்சி மேல் மக்களுக்கு உள்ள வெறுப்புணர்வோ, தவறான கண்ணோட்டமோ, நிர்வாக ரீதியான சந்தேகங்கள், போன்றவை அகலுகின்றன. இரண்டாவது, கட்சிக்கு புது பலம் வந்து சேருகிறது. தன் பொதுக்கூட்டத்துக்கு வரும் மக்கள் தலைகளிலிருந்தே கட்சியின் பலம், வளர்ச்சியை நேரடியாக அறிய முடியும். அதைதான் பாமக செய்து வருகிறது. இதுவரை யாருடன் கூட்டணி என்றுகூட சொல்லாமல் உள்ள அளவுக்கு மக்களின் செல்வாக்கும் கூடியுள்ளது.
கடைசிவரை வேண்டும்
இதை இப்போது ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். அன்புமணியின் ஃபார்முலாதான் சரியென்பதை லேட்டாக உணர்ந்திருக்கிறார். ஆனால் இப்படி மக்களை சந்திப்பதை தேர்தலுக்காக முன்னெடுக்காமல், எப்போதுமே ஸ்டாலின் ஒரு கொள்கையாகவே கடைசிவரை கடைபிடித்தால், கருணாநிதி வார்த்தெடுத்த கட்சிக்கு மேலும் பலத்தை தரும். அது மட்டும் இல்லை, அழகிரி அளவுக்கு ஸ்டாலின் மக்களிடம் இறங்கி போவதில்லை என்பது உள்ளிட்ட பல சந்தேகங்களும் இதனால் உடைத்தெறியப்படும்.
பொறுத்திருந்து பார்க்கலாம், நடக்குதான்னு.