அடிமடியிலேயே கைவைத்த திமுக.. கொதித்துபோன அதிமுக.. கிராம சபை கூட்டத்தின் தடை பின்னணி!
சென்னை: திமுகவின் கிராம சபை கூட்டத்தை தொடங்கிய இரண்டாவது நாளிலேயே அதற்கு தடை விதித்துள்ளது முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு. கிராம சபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்று கண்டித்து தடை விதித்துள்ளது. கிராம சபை கூட்டம் என்ற பெயரே முக்கிய காரணம். இன்னொரு காரணம் அதிமுகவின் கிராமப்புற வாக்குகளை குறிவைத்து திமுக இறங்கியது தான்.
பொதுவாக கிராம சபை கூட்டம் என்ற பெயரில் கூட்டம் அரசால் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படும். முறையே குடியரசு தினம், சுதந்திர தினம், மே 1, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் நடக்கும். இதுவே நடைமுறை. ஆனால் திமுக அதிரடியாக 16,500 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டத்தை நடத்த முடிவு செய்த போது இதற்கு எந்த எதிர்ப்பும் அதிமுக தரப்பில் வரவில்லை.
இந்நிலையில் திமுக சார்பில் 'அதிமுகவை நிராகரிப்போம்' என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 23ம் தேதி தொடங்கி பல்வே ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடக்க தொடங்கின. 10 நாட்கள் தமிழகம் முழுவதும் 16,500 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிற உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தல்- ராமதாசுடன் அமைச்சர்கள் சந்திப்பு- பாமகவை தக்க வைக்க அதிமுக பகீரத பிரயத்தனம்
கிராம சபை கூட்டம்
23ம் தேதி பெரும்புதூர் தொகுதியில் உள்ள குன்னம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. திரளான கிராம மக்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் ஆளும் அதிமுக அரசின் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
அதிமுகவுக்கு சந்தேகம்
இந்த கிராம சபை கூட்டத்தை மக்கள் தவறாக புரிந்து கொள்வார்கள் எனறு கருதி முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு அதிர்ச்சி அடைந்தது. அடுத்துடன் தொடங்கிய இரண்டே நாளிலேயே அதிரடியாக தடை விதித்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் திட்டப்படி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் அதிமுக நிர்வாகிகளுக்கு உள்ளது. இதனால் முறியடிக்கும் முயற்சியாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தடை விதிப்பு
எனவே தான் அரசியல் கட்சிகள் நடத்தும் கிராம சபை கூட்டத்துக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்ளாட்சி துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ன் படி கிராம சபைகள் செயல்படும் விதம் குறித்து விரிவான விதிகள் அரசால் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் குறைந்தபட்சம் நான்கு முறை,அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்களில் நடந்த அரசு வழிமுறைகள் வெளியிட்டுள்ளது.
என்ன சொல்கிறது
உள்ளாட்சி நிர்வாகத்தில் மிக முக்கிய பங்காற்றும் கிராம சபைகள் ஊரக பகுதி மக்களின் குறைகளை களைந்து கிராமம் முன்னேற்றம் காண வழிவகுக்கிறது. இத்தகைய சபைகள் அரசியல் சார்பு அற்றவை. இந்நிலையில் சில அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் மக்கள் குழப்புவதற்காக அரசியல் சார்ந்த பொது கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஊராட்சி சட்ட விதிகளுக்கு முரணானது மட்டுமல்லாமல் அந்த அமைப்பை இந்த நடவடிக்கை கொச்சைபடுத்துவதாக அமைந்துள்ளது.கிராம சபை என்பது அரசியல் அமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பாகும். கிராம சபையை கூட்டும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே உள்ளது.
சட்டப்படி நடவடிக்கை
அவர் கிராம சபையை கூட்ட தவறும்பட்சத்தில் ஊராட்சிகளின் ஆய்வாளர், மாவட்ட ஆட்சி தலைவர் கிராம சபை கூட்டத்தை கூட்ட வேண்டும். எனவே மேற்படி சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களைத் தவிர, கிராம சபை கூட்டம் என்ற பெயரில், தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ கூட்டங்களை கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது. எனவே இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் சபைகளை கூட்ட முடிவு எடுக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சி அல்லது தனிநபர் கூட்டங்களை நடத்துவது பொதுமக்களை பெரும் குழப்பத்திற்கு ஆளாக்கும் என்பதால் இத்தகைய நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அனுமதிக்ககூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கிராம சபை கூட்டம் நடத்த அரசால் அனுமதிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி இது போன்ற அரசியல் பொதுக் கூட்டம் கூடினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்." என்று அறிவிப்பு வெளியிட்டார்.
ஸ்டாலின் திட்டவட்டம்
இந்த அறிவிப்பு வந்த உடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன் அவர் வெளியிட்ட அறிவிப்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கிராம/வார்டுசபைக் கூட்டங்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து மிரண்டுவிட்டது தமிழகஅரசு! கிராமசபை என்ற பெயரில் கூட்டம் நடத்தக் கூடாதாம்! இனி, 'மக்கள் கிராம சபைக் கூட்டம்' என்ற பெயரில் மக்கள் சந்திப்பு தொடரும்! எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றார்.
அதிமுக அதிர்ச்சி
பொதுவாக அதிமுகவுக்கு பலமே கிராமபுற வாக்குகள். நகர்புறங்கள், படித்தவர்கள், நடுத்த வர்க்கத்தினர் திமுகவை அதிகம் ஆதரிப்பதாக பேச்சு உண்டு. எனவே எடுத்த எடுப்பிலேயே கிராமப்புற வாக்குகளை கவர திமுக களம் இறங்கி இருப்பது அதிமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தடை அறிவிப்பு வந்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.