முட்டி மோதும் ஓபிஎஸ், எடப்பாடி.. “பாஜக குறியே வேற”.. டெல்லி தயங்குவது ஏன்? - தராசு ஷ்யாம் ‘பளிச்’!
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும் முட்டி மோதி வரும் சூழலில், பாஜக தேசிய தலைமை இதில் பெரிதாக ஆர்வம் காட்டாதது ஏன் என்பது பற்றி நமது ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே பாஜக மாநிலத் தலைமை தேர்தல் பணிக்குழுவை அமைத்தது. இதனால் பாஜக களமிறங்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், தேசிய தலைமை இதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பும் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புமே போட்டியிடுவதாக அறிவித்திருந்தாலும், இன்னும் வேட்பாளர் யார் என இறுதி செய்யவில்லை.
நமது ஒன் இந்தியா தமிழுக்கு இதுபற்றி பேட்டியளித்துள்ள மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் நிலவும் குழப்பம் பற்றி விளக்குகிறார். அவரது பேட்டி இனி..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. எங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.. அண்ணாமலை பரபர பேட்டி
எடப்பாடிக்கு பாதிப்பு?
கேள்வி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது எடப்பாடி தரப்புக்கு என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும்?
பதில் : எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது. அதுதான் பெரிய பாதிப்பு. நமது நாட்டின் தேர்தல் சட்ட விதி 29ஏ மற்றும் தேர்தல் சின்னங்கள் ஆணை விதியின்படி, கட்சி சின்னங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அதிமுகவில் 2017ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்களின்படி சின்னம் பெற ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என 2 கையெழுத்து வேண்டும். ஜூலை 11 பொதுக்குழு தீர்மானம் இன்னும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே இரட்டைக் கையெழுத்து அவசியம் தேவை. ஓபிஎஸ்ஸூடன் இணைந்து கையெழுத்து போட ஈபிஎஸ் தயாராக இல்லை. தேர்தல் ஆணைய விதிகளின்படி இருதரப்புக்கும் நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்க வேண்டும். அது காலதாமதம் ஆகும் நடைமுறை. எனவே இரட்டை இலை சின்னம் இருவருக்குமே கிடைக்காது.
எடப்பாடி திட்டம்
கேள்வி : இரட்டை இலை சின்னமே இல்லாமல் களமிறங்க முடிவெடுத்தால், எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட திட்டம் என்னவாக இருக்கும்? எதை முன்னிறுத்தி அவர்களின் பிரச்சாரம் அமையும்?
பதில் : ஏற்கனவே 2017ல் இதே பிரச்சனைதான் எழுந்தது. முதலில் அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் இரட்டை இலை கிடைக்கவில்லை. அதே நிலை தான் இப்போதும். சின்னம் கிடைக்காது என்று தெரிந்து தான் களமிறங்குகிறார்கள். பாஜக தேவையில்லை என்று எடப்பாடி முடிவெடுத்தால், அது அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களிடையே உற்சாகத்தைத் தரும். புதிய சின்னத்தை கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். ஈரோடு கிழக்கு ஒரு நகர்ப்புறத் தொகுதி. எனவே எளிதாக சின்னத்தை பதிய வைத்துவிடலாம் என எடப்பாடி பழனிசாமி நம்புகிறார்.
பாஜக அலுவலகத்திற்கே சென்று
கேள்வி : எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கமலாலயத்திற்கே சென்று ஆதரவு கேட்டுள்ள சூழலில் அவர்கள் எப்படி பாஜகவை கழற்றிவிடக்கூடும்?
பதில் : ஆதரவு கேட்கிறார்கள். ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால், 2 தரப்பையுமே பாஜக சமதூரத்தில் தான் வைக்கிறது. மாற்றி மாற்றி முக்கியத்துவம் தரப்படுகிறது. குஜராத் பொங்கல் விழாவில் ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது, அவர் கலந்துகொள்கிறார். ஓபிஎஸ், பாஜக நின்றால் ஆதரவு கொடுப்போம் என்கிறார். ஈபிஎஸ், தாங்கள் நிற்கிறோம் என அறிவித்து ஆதரவு கேட்கிறார். ஜெயலலிதா காலத்தில் இருந்தே என்ன வழக்கம் என்றால், இரண்டாம் கட்ட தலைவர்களை மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்க அனுப்பி வைப்பார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஜெயலலிதா காலத்தில் 5 பேர் கொண்ட குழு இருந்தது. அவர்கள் ஒவ்வொரு கட்சி அலுவலகத்திற்கும் சென்று பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
வேட்பாளர் தேர்வில் குழப்பம்
கேள்வி : ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்புமே வேட்பாளர் அறிவிப்பில் குழப்பத்தோடு இருப்பதாகவே தெரிகிறதே..
பதில் : ஜெயலலிதா காலத்தில் இருந்தே முதன்முதலில் தேர்தல் பணிகளைத் தொடங்குவது அதிமுகவாகத்தான் இருக்கும். இப்போது ஒரு குழப்பம் இருக்கிறது. அதற்குக் காரணம் இரட்டை இலை சிக்கல் தான் என்று நினைக்கிறேன். எந்தவொரு வேட்பாளராக இருந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் தேர்தலில் நிற்கிறார்கள். என்ன சின்னம் என்று தெரியாமல், தேர்தலில் இறங்குவதற்கு வேட்பாளர்களுக்குமே ஐயம் இருக்கும். எனவே இரு தரப்புக்குமே வேட்பாளர்களை அறிவிப்பதில் சங்கடங்கள் இருப்பதாகத்தான் நான் உணர்கிறேன்.
அதிமுக தொண்டர்களுக்கு வருத்தம்
கேள்வி : ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் ஆகிய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பாஜகவின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு என்கிறார்கள். இது பாஜக முன்னிலைப்படுத்தப்படுவதாக எடுத்துக்கொள்ளலாமா?
பதில் : ஏசி சண்முகத்திற்கு என ஈரோடு கிழக்கில் பெரிய வாக்கு வங்கி இல்லாவிட்டாலும், சில ஆயிரங்கள் வாக்கு என்றாலும் விடக்கூடாது என்பது எல்லாக் கட்சிகளுக்கும் தோன்றும் எண்ணம் தான். எனவே தான் இரு தரப்பினரும் அவரைப் போய் பார்த்திருக்கிறார்கள். ஏசி சண்முகத்தைப் பொறுத்தவரை ஆரம்பம் முதலே அதிமுகவுக்கு அணுக்கமானவராகத்தான் இருக்கிறார். எனவே அவர் அவ்வாறு அறிவிப்பதில் ஆச்சர்யமில்லை. ஜான் பாண்டியனுக்கு ஈரோடு கிழக்கில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. வேட்பாளர் முடிவாகாத சூழலில் இவர்களைச் சென்று சந்திக்க அவசியமில்லை தான். அதில் அதிமுக தொண்டர்களுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
அண்ணாமலை முடிவுக்கு மாறாக டெல்லி
கேள்வி : பாமக போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது. தேமுதிக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. பாஜக தங்கள் நிலைப்பாட்டை அறிவிப்பதில் ஏன் தயக்கம் காட்டுகிறது?
பதில் : அது தேசியக் கட்சிகளுக்கே உரிய தயக்கம் தான். என்னதான் மாநிலத் தலைமை சொன்னாலும், முடிவெடுக்க வேண்டியது தேசியத் தலைமை தான். டெல்லியைப் பொறுத்தவரையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலோடு அறிவிக்கப்பட்டுள்ள 3 மாநில சட்டமன்றத் தேர்தல் முக்கியம். குறிப்பாக, திரிபுராவில் வெற்றி வாய்ப்பு என்பது பாஜகவுக்கு கடினமானதாகத் தெரிகிறது. காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி அங்கு வலிமையானது. 3 மாநில தேர்தல்களில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தான் டெல்லி கவனம் செலுத்துகிறதே தவிர, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. அண்ணாமலை இங்கு என்ன சொன்னாலும், டெல்லி என்ன முடிவெடுக்கும் என்று யாருக்கும் தெரியாது. அண்ணாமலைக்கு மாறுபாடான முடிவையும் டெல்லி எடுக்கக்கூடும்.