திடீர்ன்னு ஏற்பட்ட பரபரப்பு.. லீகல் டீமை வரச்சொன்ன ஸ்டாலின்.. டாப் தலைகளுடன் அவசர பேச்சு.. என்னாச்சு
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீரென நடத்திய ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. டாப் தலைகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பலர் நேற்று நடந்த இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி - முதல்வர் ஸ்டாலின் இடையிலான மோதல் தீவிரம் அடைந்துள்ளது. ஆளுநர் ஆர். என் ரவியும் டெல்லிக்கு இதற்காக பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதோடு தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்ற சொல்லவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 27ம் தேதி இந்த தேர்தல் நடக்க உள்ளது. இந்த அறிவிப்பிற்கு இடையில்தான் முதல்வர் ஸ்டாலின் லீகல் டீமுடன் நேற்று முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தி உள்ளார்.
சட்டம்-ஒழுங்கு நிலவரம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை.. ஏன்?
ஆலோசனை
அவரின் இந்த ஆலோசனைக்கும், தற்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனை நீட் தேர்வு தொடர்பானது என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் விலக்கை ஆளும் திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கொண்டு வந்தது. அதன்படியே ஆட்சிக்கு வந்தது நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா பல நாட்களாக ஆளுநர் ஆர். என் ரவியால் டெல்லிக்கு அனுப்பப்படாமல் முடங்கி கிடந்தது. அதன்பின் இந்த மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி இருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு மசோதாவில் மாற்றம் செய்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது.
ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி மீண்டும் இதில் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வந்தார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக திமுக தலைவர்கள், ஆளும் கூட்டணி தலைவர்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர். அதோடு ஆளுநர் ஆர். என் ரவி பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த மோதலை தொடர்ந்து ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்பினார். நீட் நுழைவு தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மசோதா இன்னும் டெல்லியில் நிலுவையில்தான் உள்ளது. இந்த நிலையில்தான் நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட தமிழ்நாடு அரசின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளது.
விசாரணை
கடந்த டிசம்பர் 3-ந்தேதி நடந்த விசாரணைக்கு பின் வழக்கு மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளது. நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவர் பரிசீலனையில் உள்ளதால் கடந்த முறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த முறை தமிழ்நாடு அரசு வாதத்தில், நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவர் பரிசீலனையில் உள்ளது. அதனால் இதை விசாரணை செய்ய கூடாது, என்று கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த வழக்கை நீண்ட காலம் தள்ளி வைக்க தயாராக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அதோடு வழக்கை 4 வாரங்களுக்கு மட்டும் ஒத்திவைத்து உள்ளது. இந்த நிலையில்தான் நீட் வழக்கில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
உத்தரவு
குடியரசுத் தலைவர் இதில் முடிவு எடுக்கும் முன் நீட் தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏதாவது உத்தரவை பிறப்பித்தால் அது சிக்கலாகும். இதனால் ஆளும் திமுக தரப்பு இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பான நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். மூத்த வழக்கறிஞர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். அடுத்த விசாரணையில் என்ன வாதம் வைக்க வேண்டும், வழக்கில் என்ன செய்ய வேண்டும், குடியரசுத் தலைவர் இதில் முடிவு எடுக்க தாமதம் ஆனால் என்ன செய்வது என்பது தொடர்பான ஆலோசனைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று மேற்கொண்டு இருக்கிறார். இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.