"அவங்கதான் காரணம்".. என் பெயர், போட்டோவை பயன்படுத்தாதீங்க.. ரஜினி போட்ட ஆர்டர்.. இதுதான் பின்னணி
இந்த கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஜினியின் வழக்கறிஞர் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படத்தை அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது என்று அவரின் வழக்கறிஞர் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் இந்த படம் தயாராகி வருகிறது. கடைசியாக வெளியான ரஜினியின் தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன.
இதனால் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் ஹிட் செய்ய வேண்டும் என்று கவனமாக படம் தயாராகி வருகிறது. தேசிய அளவில் பான் இந்தியா படமாக இதை எடுக்க வேண்டும் என்று பணிகள் நடந்து வருகின்றன. முதலில் சிறிய அளவில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தற்போது டாப் தென்னிந்திய ஸ்டார்களின் வருகையால் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
சன் பிக்சர்ஸ்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார் ஆகியோர் இந்த படத்திற்காக ஒப்பந்தம் ஆகி உள்ளனர். தெலுங்கு வில்லன் நடிகர் சுனிலும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது போக தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இந்த படத்தின் திரைக்கதையை வடிவமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ராஜஸ்தானில் வரும் நாட்களில் நடக்க உள்ளது.
பாலிவுட்
ஒரு பாலிவுட் பிரபலமும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படத்தை அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது என்று அவரின் வழக்கறிஞர் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அவரின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி யாரும் பயன்படுத்த கூடாது. சில நிறுவனங்கள் தங்கள் தளங்களில் இதை பயன்படுத்தி வருகின்றன. விளம்பரங்களுக்கு பயன்படுத்துகின்றன.
குழப்பம்
இது மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும். இதை தடுக்க வேண்டும் என்றால் நிறுவனங்கள் ரஜினியின் பெயர், புகைப்படங்கள், குரலை அவரின் அனுமதியின்றி பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரின் வழக்கறிஞர் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
என்ன காரணம்?
ரஜினியின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்று அவருக்கு நெருக்கமான தரப்பிடம் விசாரித்தோம். அவர்கள் நம்மிடம் தெரிவித்த தகவலில், ரஜினிக்கு டிவியில் சிலர் மிமிக்கிரி செய்வதில் எல்லாம் பிரச்சனை இல்லை. ஆனால் சிலர் ரஜினியின் கார்ட்டூன் படம், ஓவியங்களை விளம்பரங்களில் பயன்படுத்துகிறார்கள். சூப்பர் ஸ்டார் பயன்படுத்தும் பிராண்ட் என்று கூறி விளம்பரம் செய்கிறார்கள். ரஜினியிடம் சொல்லாமலே ரஜினி கெட்டப்பில் சிலரை கொண்டு வந்து விளம்பரம் செய்கிறார்கள் . கிட்டத்தட்ட காசு கொடுக்காமல் விளம்பர தூதராக ரஜினியின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் கூட ஒரு விளம்பரத்தில் தனியார் நிறுவனம் ரஜினியின் ஓவிய புகைப்படத்தை பயன்படுத்தி இருந்தது. இதை பார்த்த பின்பே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ரஜினி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.